http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[182 Issues]
[1805 Articles]
Home About US Temples Facebook
Issue No. 182

இதழ் 182
[ மார்ச் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

நகரி மாடக்கோயில்
அல்லூர் நக்கன் கோயில்
Indian Museum, Kolkata – A Summary
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 4
இம்மைச் செய்தது மறுமைக்கு எனும் அறவிலை வணிகர்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 94 (ஊருக்கும் தனிமை துயரமே)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 93 (காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 92 (உலராப் பாறையன்ன தீராத்துயரம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 91 (உடைகளும் சுமையடி தனிமையிலே!)
இதழ் எண். 182 > கலையும் ஆய்வும்
அல்லூர் நக்கன் கோயில்
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளிக் கரூர்ச் சாலையில் 8 கி. மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில், நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் கிளைச் சாலையில் 2 கி. மீ. தொலைவிலுள்ள அல்லூர் வளமான சிற்றூர். ஊர்க் குடியிருப்புகளின் கிழக்கிலுள்ள அடர்த்தியான தோப்பில் அழகிய முற்சோழர் தளியொன்று மறைந்துள்ளது. கல்வெட்டுகளில் அல்லூர் நக்கன் கோயிலாகவும் நக்கீசுவரமாகவும் கொண்டாடப்படும் இத்தளி, இன்று பசுபதீசுவரமாக அறியப்படுகிறது. திருப்பணிகளுக்கு ஆட்பட்டிருந்தபோதும் பழைமை மாறாமல் ஒளிரும் இத்தளி, அதன் இருப்பிடம் காரணமாகவே மக்கள் வரத்தின்றி வாடியுள்ளது.

மரங்களும் செடி, கொடிகளும் செழித்து மண்டியுள்ள தோப்பின் நடுவில், வாய்க்கால் கரையின் தென்புறம் எழிலே உருவாய் நிறைந்திருக்கும் அல்லூர் நக்கன் வளாகம் கோபுரமோ, மதில் சுவரோ, சுற்றுமாளிகையோ இல்லாமல் எளிமையான ஆனால், கம்பீரமான தோற்றத்துடன், ஒருதள வேசர விமானம், முகமண்டபம், இடைநாழிகை, பெருமண்டபம் என விளங்குகிறது.

விமானம்

பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், விரிகோணப் போதிகைகள், பூதவலபி உள்ளிட்ட கூரை உறுப்புகள், அழகிய கபோதம், பூமிதேசம் கொண்டு விளங்கும் விமானத்தின் தளக்கூரையில் அமர்நந்திகள். கூரையின் பெரும்பகுதியில் பரவிக் கவிந்திருக்கும் வேசரகிரீவமும் சிகரமும் விமானத்திற்கு வியப்பூட்டும் எழிலையும் எழுச்சியையும் அளிக்கின்றன. மேலே தூபி.

தாங்குதளம்

பாதபந்தத் தாங்குதளத்தின் எண்முகக் குமுதத்திற்குக் கீழ்ப்பட்ட பகுதிகள் நிலத்தடியிலிருப்பதை இப்பகுதியில் நிகழ்ந்த சீரமைப்புப் பணியின்போது அறியமுடிந்தது. உபானம், எழுச்சிமிகு ஜகதி, தாமரைவரிகள் எனக் கீழ்ப்பகுதியும் எண்முகக் குமுதம், பாதங்கள் பெற்ற கம்புகள் அணைத்த கண்டம், பட்டிகை, மேற்கம்பு என மேற்பகுதியும் பெற்றுத் திகழும் இத்தாங்குதளம் பேரளவினதாய் அமைந்துள்ளது.

சுவர்

தாங்குதளத்திருந்தே சாலைப்பத்தி முன்தள்ளலுடன் எழும் இவ்விமானத்தின் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அனைத்து உறுப்புகளும் பெற்றுள்ள இந்நெடிய அரைத்தூண்களின் தொங்கலும் கட்டும் பிற உறுப்புகளைப் போலவே அலங்கரிப்பின்றி உள்ளன. பக்கத்திற்கொரு நான்முக அரைத்தூணால் தழுவப்பெற்றுள்ள சாலைப்பத்தியின் நடுவில் தெற்கு, மேற்கு, வடக்கு முத்திசைகளிலும் ஆழமான கோட்டங்கள். சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் கூரையுறுப்புகளேந்தி அணைக்கும் இக்கோட்டங்களின் தலைப்பில் வடிப்பற்ற மகரதோரணங்கள். மேற்கு, வடக்குக் கோட்டங்கள் வெறுமையாக அமைய, தென்கோட்டத்தில் பின்னாளைய ஆலமர்அண்ணல். மேற்குக் கோட்டத் தென்சுவரில் இன்றும் படிக்குமாறு விளங்கும் கல்வெட்டு, அக்கோட்டத்தில் விஷ்ணு இருந்ததாகவும் அவரை அங்கு அமைத்தவர் அல்லூர் அறுகை வாணிகர் நாசகரை குலுங்கர் சிலை என்ற தகவலையும் தருகிறது.

தென்கோட்ட முன்றில்

தென்கோட்டத்தின் முன்னுள்ள முன்றிலின் கூரையைத் தாங்கும் நான்கு தூண்களும் சதுரபாதம், எண்முக-பன்முக உடல், தொங்கல், கட்டு, தாமரைக்கட்டு, கலசம் பெற்றுத் தரங்க வெட்டுப் போதிகைகளேந்த, மேலே உத்திரம், வாஜனம், வெறுமையான வலபி. கூரையின் வெளிநீட்டலாகச் செங்கல் கட்டுமானமாய்க் கபோதமும் அதன் மேல் பூமிதேசக் குறியீடாய்ச் செவ்வகப் பட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

கோட்டச் சிற்பங்கள்

ஆலமர் அண்ணல்

கோட்டத்தில், வலப்பாதத்தை முயலகன் மீதிருத்தி வீராசனத்திலுள்ள ஆலமர்அண்ணலின் வல முன் கை சின்முத்திரையில். இட முன் கையில் சுவடி. பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும். சடைப்பாரம், மகர, பனையோலைக் குண்டலங்கள், உருத்திராக்கமாலை, முப்புரிநூல், சிற்றாடை, கிண்கிணி என விளங்கும் அண்ணலின் மகுடமுகப்பில் மனிதத்தலை. இறைவன் இருக்கையின் வலப்புறம் இலலிதாசனத்தில், இடக்கை தொடையிலிருக்க, வலக்கையைப் பதாகமாக்கியுள்ள முனிவர். சடைமகுடம், தாடி, மீசை, முப்புரி நூலுள்ள அவரது இடையில் சிற்றாடை.

சிதைந்த ஆலமர் அண்ணல் சிற்பங்கள்

முன்னாளில் இக்கோட்டத்தை அலங்கரித்த இரு சிதைந்த ஆலமர் அண்ணல் சிற்பங்கள் விமானச்சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க ஆலமர்அண்ணல் சிற்பத்தில் இறைவன் வீராசனத்தில் வலக்காலை முயலகன் மேல் இருத்தியுள்ளார். முன்கைகள் சிதைந்துள்ளன. பின்கைகளில் பாம்பு, தீச்சுடர். சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல் என விளங்கும் இவ்வடிவம் இரண்டு துண்டுகளாக உள்ளது.

இரண்டாக உடைந்திருந்தபோதும் எழில் குறையாதுள்ள மற்றோர் ஆலமர்அண்ணல் சிற்பம் சோழர் காலத்தது. கை, கால்களும் செவிகளும் சிதைந்திருந்தபோதும், இறைவன் வீராசனத்திலிருப்பதும் அவர் வலத்திருவடிக் கீழ் முயலகன் உள்ளமையும் புலனாகின்றன. சிரஸ்திரகச் சுருள்களுடனுள்ள சடைப்பாரத்தில் வலப்புறம் பிறைநிலா. இடப்புறம் பூக்கள். முகப்பில் தலையோடு. வலச்செவி நீள்செவியாக, கைகளின் மேற்பகுதிக் கங்கணம் வீரச்சங்கிலி போலப் புத்தமைப்பாக ஒளிர்கிறது. கழுத்தில் உருத்திராக்கமாலை, சரப்பளி, நீள்முத்துமாலை. முப்புரிநூல், உதரபந்தம் பெற்றுள்ள அவரது இடையில் சிற்றாடை. தலைக்குப் பின் பரவும் மரத்தின் இடக்கிளையில் அழகுடன் மிளிர்கிறது பொக்கணம் எனும் இறைவனின் திருநீற்றுப்பை. தம் பின்னுள்ள நந்தியின் தலைமீது வல முன் கையிருத்தி இறைவன் அமர்ந்துள்ள பாறையின் முகப்புச் சிற்பங்கள் சிதைந்துள்ளன.

வடக்குத் துணைக்கோட்டச் சிற்பங்கள்

வடக்குக் கோட்டத்தின் இருபுறத்துள்ள உயரக் குறைவான துணைக் கோட்டங்களில் பக்கத்திற்கொருவராகப் பெண்கள். கோட்டத்திற்காய் ஒருக்கணித்துள்ள இருவருமே மெல்லிய இடைக்கட்டுடனான பட்டாடை அணிந்துள்ளனர். தமிழம் கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், சரப்பளி பெற்றுள்ள அவர்களுள், மேற்கர் இடக்கையை வயிற்றருகே கொண்டு, வலக்கையில் கரண்டி பிடித்துள்ளார். அவர் காலருகே உள்ள முக்காலியில் ஒன்றன் மேல் ஒன்றாக இரு சட்டிகளும் ஒரு பானையும். இடக்கையை வியப்பில் விரித்துள்ள கிழக்கரின் வலக்கையில் கவரி. முற்சோழர் காலச் செதுக்குத் திறனுடன் இலங்கும் இவ்விரு சிற்பங்களும் வடக்குக் கோட்டத்தில் இடம்பெற்றிருந்த இறைத்திருமேனியைப் பிச்சையுகக்கும் பெருமானாக அடையாளப்படுத்துகின்றன.

கூரையுறுப்புகள்

சுவர்த்தூண்களின் வீரகண்டத்தின் மேலெழும் விரிகோணப் போதிகைகள் உத்திரம், மெல்லிய வாஜனம், எழிலார்ந்த பூதவலபி தாங்குகின்றன. போதிகைத் தாங்கலில் அமைந்த வலபிப்பகுதிகளில் ஆலிலைக் கண்ணனும் அமர்நந்திகளும் படுத்தவாறுள்ள ஆண், பெண் உருவங்களும் அமைய, சுவர் மேல் வளரும் வலபியில் ஆடல், இசைக் கலைஞர்களாகவும் போர் வீரர்களாகவும் பூதங்களின் செயலூக்கம். புல்லாங்குழல், ஊதுகுழல் எனக் காற்றுக் கருவிகளும் பல்வேறு அளவிலான இருமுக முழவுகளும் செண்டு, இலைத் தாளங்களும் நரம்புக்கருவியாகச் சிரட்டைக் கின்னரியும் பூதங்களின் இசைக்கருவிகளாகக் கண்காட்டுகின்றன. இறைவனை வழிபடும் வாலி, சீதையின் முன் அனுமன், குடக்கூத்து, பூச்சரமேந்திய பூதம் என மாறுபட்ட காட்சிகளும் உண்டு.

கூரையின் வெளிநீட்டல் அழகிய கபோதமாக வளைந்திறங்குகிறது. ஒவ்வொரு தூணுக்கும் மேலிருக்குமாறு கர்ணபத்திகளில் நான்கும் சாலைப்பத்திகளில் இரண்டுமாகத் திசைக்கு ஆறு கிளாவர் தலைப்புப் பெற்ற கூடுவளைவுகள். வளைவுகள் கொடிக்கருக்கு அலங்கரிப்புடன் விளங்க, கூடுகள் வெறுமையாக உள்ளன. கோண, நடுப்பட்டம் பெற்ற கபோதத்தின் எழுச்சிமிகு வளைவு அதைத் தனித்துக் காட்ட, மேலே பூமிதேசம். தளக்கூரையில் கிழக்கு, மேற்காகப் பார்த்தவாறு தலைநிமிர்த்தி நாற்புறத்தும் அமர்ந்துள்ள சோழநந்திகளின் கழுத்தில் மணிமாலைகள்.

கிரீவம், சிகரம்

பேரளவாகக் கவிந்துள்ள வேசரகிரீவத்தில், முதன்மைத் திசைகளில் உயரக்குறைவான நான்முக அரைத்தூண்களின் தழுவலில் கீர்த்திமுகத் தலைப்பிட்ட கோட்டங்கள். நன்கு முன்தள்ளியுள்ள அக்கோட்டங்களில், தெற்கில் வீராசனத்தில் ஆலமர்அண்ணலும் கோட்டங்களை அணைத்துள்ள அரைத்தூண்கள் முன், இருக்கையில் அர்த்தபத்மாசனத்தில் பக்கத்திற்கு ஒவராய்க் கைகளை மார்புக்காய்க் குறுக்கீடு செய்த முனிவர்களும் அமைய, மேற்கிலும் வடக்கிலும் சுகாசனத்தில் முறையே விஷ்ணுவும் நான்முகனும். அவர்தம் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். பின்கைகளில் விஷ்ணு சங்கு, சக்கரமும் நான்முகன் அக்கமாலை, குண்டிகையும் ஏந்தியுள்ளனர். இவ்விருவரின் இருபுறத்தும் கோட்ட அணைவுத்தூண்களின் முன்னிருக்குமாறு சுகாசனத்தில் அவரவர் தேவியர். அவர்தம் ஒரு கை மலர் கொள்ள, மற்றொரு கை தொடையில். கிழக்கில் முன்கைகளை விஷ்ணு போலவே கொண்டு அர்த்த பத்மாசனத்திலுள்ள சிவபெருமானின் பின்கைகளில் மான், மழு. கோணத்திசைக் கோட்டங்கள் கிரீவசுவரிலிருந்து சற்றே முன் தள்ளி இரு குறு நான்முகத்தூண்களின் மேலமைந்த கீர்த்திமுகத் தலைப்பாக உள்ளன.

நான்கு கிரீவகோட்டங்களின் கீர்த்திமுகங்களிலும் வானவப் பெண்கள். கிரீவசுவரில் கோட்டங்களுக்கு இடைப்பட்டு அர்த்தபத்மாசனத்தில் எண்திசைக் காவலர்கள். அவர்தம் பின்கைகள் அவரவர்க்குரிய கருவிகளேந்த, முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். சிகரத்தின் கீழ்ப்பகுதியைப் பெரிய, சிறிய தாமரையிதழ்கள் ஈரடுக்குகளாய் அணைத்திருக்க, சிகரத்தின் மேற்பகுதியில் மேலிருந்து கீழிறங்கும் மலர்ச்சரங்கள்.

முகமண்டபம், இடைநாழிகை

விமானக் கட்டுமானத்தை ஒத்திருந்தபோதும், அதன் முன்னுள்ள முகமண்டபத்தில் சாலைப்பத்தி முன்தள்ளலோ, கோட்டங்களோ இல்லை. மண்டபத்தின் தென், வடசுவர்களைப் பக்கத்திற்கு நான்காக நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. முகமண்டபத்தையடுத்த இடைநாழிகை பின்னாளைய கட்டுமானமாய்த் தென், வடசுவர்களில் சாளரத் திறப்புடன், கிழக்கிலுள்ள பெருமண்டபத்தை முகமண்டபத்துடன் இணைக்கிறது. தாங்குதளமோ, சுவர்த்தூண்களோ அற்ற இந்த இடைநாழிகை கபோதம், பூமிதேசம் பெற்றுள்ளது. இது பின்னாளைய இணைப்பென்பதைப் பெருமண்டப வடமேற்குச் சுவரிலுள்ள இராஜகேசரிக் கல்வெட்டுத் தெளிவாக உணர்த்துகிறது.

பெருமண்டபம்

இணைப்புகளற்ற மண்டபமாய் 5. 58 மீ. பக்கமுடைய சதுரமாக 1. 61 மீ. உயரம், 82 செ. மீ. அகலமுடைய மேற்கு வாயிலுடன் நக்கன் கோயில் முன் அமைக்கப்பெற்ற இப்பெருமண்டபம், கொடும்பாளூர் வேளிர்குல அரசரான ஒற்றிமதுராந்தகன் பெயரில், முனைச்சுடர் விரையாச்சிலை என்பவரால் எழுப்பப்பட்டதாகும். இத்தகவல் தரும் கல்வெட்டை பேராசிரியர் மு. நளினி மீளாய்வின்போது கண்டறிந்தார். முகமண்டபக் கட்டமைப்பை ஒத்துள்ள இப்பெருமண்டபத் தென், வடசுவர்களில் சாளரங்கள். மண்டப மேற்கு வாயில்நிலைகளும் மேல்நிலையும் கருக்கணி அலங்கரிப்புடன் திகழ, மேலே வலபியில் 15 பூதங்கள் ஆடல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் செழித்துள்ளன.

பின்னாளில் முகமண்டபத்துடன் தென்வடலாக 3. 70 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2. 63 மீ. அகலமும் கொண்ட இடைநாழிகையால் இணைக்கப்பட்டமையால், பெருமண்டபத்தின் கிழக்குச் சுவரில் புதிய வாயில் உருவாக்கப்பட்டு, அதுவே கோயிலுக்கான நுழைவாயிலானது. அதன் நிலைக்கால்கள் சிறிய பாம்புப்படமும் தாமரையிதழ் வடிப்பும் கொண்டுள்ளன.

வாயிலுள்ள கிழக்குச்சுவரின் மேல், பூமிதேசத்தையடுத்து வேதிகை. அதன் தென், வடமூலைகளில் சுதைநந்திகள். வாயிலுக்கு மேலிருக்குமாறு கூரைமீது இரு நான்முக அரைத்தூண்கள் தாங்கும் கீர்த்திமுக மகர திருவாசியில் எருதின் மேல் இவர்ந்தவர்களாய் சிவபெருமானும் உமையும். இட முன் கையால் உமையை அணைத்துள்ள சுகாசன சிவனின் பின்கைகளில் மான், மழு. வல முன் கை காக்கும் குறிப்பில். இறைவனின் இடத்தொடையில் கால்களை நெகிழ்த்தி அமர்ந்துள்ள இறைவியின் வலக்கையில் மலர். இடக்கை எருதின் மேல்.

மண்டபங்களின் உட்புறம்

பக்கத்திற்கிரண்டாய் நான்கு முச்சதுர இருகட்டுத் தூண்கள் விரிகோணப் போதிகைகள் கொண்டு கூரை தாங்கும் பெருமண்டபத்துள் அதன் கிழக்கு நுழைவாயிலை அடுத்து, இறைவனை நோக்கிச் செவ்வகத் தளத்தில் பெருநந்தி. சோழர் காலச் செல்லமான அதன் முதுகில் விரிப்பு. கழுத்தில் மணிமாலையுடன் கூடுதலாய் மணிக்கற்களாலான இருமாலைகள். மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் மேற்குப் பார்த்த கதிரவன், முருகன் சிற்பங்கள். மண்டப வடசுவரில் அம்மன் திருமுன் வாயில். அதன் இடப்புறம் தெற்குப்பார்வையில் சண்டேசுவரரும் பிச்சையுகக்கும் பெருமானும் அமைய, மேற்கிலுள்ள இடைநாழிகை வாயிலின் வடபுறத்தே அரவுகள் தழுவலும், முருகன், வானவர் சிற்பங்களும் உள்ளன. இப்பிச்சையுகக்கும் பெருமான் விமான வடகோட்டத்தில் இருந்தவராகலாம். இடைநாழிகை வாயிலின் தென்புறத்தே மூன்று பிள்ளையார் சிற்பங்கள். ஒன்று சிறிய அளவிலும் மற்றொன்று பெரிய அளவிலும் அமைய, மூன்றாவதாக உள்ள சிற்பம் இடைநிலையினது.

அம்மன் திருமுன்

பெருமண்டப வடசுவர் பின்னாளில் திறக்கப்பட்டுச் சிறிய முகமண்டபமும் துணைத்தளம், கற்சுவர், கபோதம், வடிப்பற்ற பூமிதேசம், வேதிகை என அமைந்த ஒருதள வேசர விமானமுமாய் பர்வதவர்த்தினி அம்மன் திருமுன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் வாயில் மீதுள்ள பெருமண்டப வடசுவர்க் கூரையுறுப்புகள், இவ்விணைப்புப் பணியால் தடம்மாறியுள்ளபோதும், பூதவலபித் துண்டொன்று காப்பாற்றப்பட்டு, வாயில் மேற்பகுதியை அலங்கரிக்கிறது.

அதிலுள்ள ஒன்பது பூதங்களுள் எட்டுச் செயலூக்கத்துடன் திகழ, ஒன்று மட்டும் கால்களைக் குறுக்கீடு செய்து அமர்ந்தவாறு மடியில் நிறுத்தியுள்ள உருள்பெருந்தடி மீது இரு கைகளையும் இருத்தித் தலை சாய்த்துள்ளது. இவ்வரியின் நான்கு பூதங்கள் ஆடல் நிகழ்த்த, ஒன்று மத்தளம் வாசிக்கிறது. சிம்மமுகப் பூதமும் மற்றொரு பூதமும் கத்தி, கேடயம் கொண்டுள்ளன. இவ்வரிசையின் தனியொரு பெண்பூதம் ஆடற்கோலத்தில்.

பர்வதவர்த்தினி அம்மன் திருமுன் முகமண்டபத் தலைப்பில் பின்னாளைய யானைத்திருமகள் சிற்பம். தாமரையில் அர்த்தபத்மாசனத்தில் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புகளுடன் பின்கைகளில் தாமரைகளேந்தி இறைவி அமர்ந்திருக்க, இருபுறத்தும் யானைகள் நீரூற்றுகின்றன. யானைகளை அடுத்துப் பக்கத்திற்கொரு கவரிப்பெண். அவர்தம் ஒரு கை கவரி கொள்ள, ஒரு கை நெகிழ்ந்துள்ளது. இச்சிறிய முகமண்டபத்தின் பின்னுள்ள கருவறையில் சமபங்கத்திலுள்ள இறைவியின் பின்கைகளில் மலர்கள். சடைமகுடம், மகரகுண்டலங்கள், தோள்மாலை, கழுத்தணிகள், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான பட்டாடை பெற்றுள்ள அம்மையின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். அம்மன் வேசர விமானத்தின் தளக்கூரையில் சுதை நந்திகள். முதன்மைத் திசை கிரீவகோட்டங்களில் நின்றநிலை அம்மனின் சுதையுருவங்கள் அமைய, கோணத்திசைக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

முகமண்டபம்

1. 64 மீ. உயரம், 96 செ. மீ. அகலமுள்ள முகமண்டப வாயிலின் இருபுறத்தும் நெடிய காவலர்கள். அழகிய கொடிக்கருக்கு அலங்கரிப்புடன் திகழும் நிலைக்கால்களும் மேல்நிலையும் பெற்ற இவ்வாயில் மேலுள்ள வலபி, பெருமண்டப வலபி போலவே 13 பூதங்களுடன் சிறக்க அமைந்துள்ளது. நான்கு முச்சதுர, இருகட்டுத் தூண்கள் கூரைதாங்கும் 3. 45 மீ. பக்க சதுர முகமண்டபத்தை அடுத்துள்ள 2. 75 மீ. பக்க சதுரக் கருவறையில், வேசர ஆவுடையார் மீதமைந்த இலிங்கத்திருமேனியராய் அல்லூர் நக்கன்.

கருவறை

1. 58 மீ. உயரம், 81 செ. மீ. அகலக் கருவறை வாயிலைச் சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. வாயிலின் மேல்நிலையிலும் நிலைக்கால்களிலும் பெருந்தாமரையிதழ்கள். கருவறைக் கூரை அடைப்பின்றித் தொடக்கத்தில் இருசதுரங்களாகவும் பின் வட்டமாகவும் மேனோக்கி வளர்ந்து, சுற்றளவு குறுகி, உச்சியில் கண்டிக்கல் தளம் பெற்றுள்ளது. கீழிருந்து நோக்க, உள்ளீடற்ற அப்பெருவட்டம் பேரண்டத்தின் ஒரு துளி போலக் கண்களை நிறைக்கிறது.

சிற்பங்கள்

பிச்சையுகக்கும் பெருமான்

மிதியடியணிந்த திருவடிகள் நடைபயில, வல முன் கையால் மானுக்குப் புல்லளித்தவாறே ஒருக்கணித்துள்ள பிச்சையுகக்கும் பெருமானின் இட முன் கையில் தலையோடு. ஆடையற்று விளங்கும் அவரது இடையைச் சுற்றியுள்ள பாம்பின் படமெடுத்த தலை இட முன் கைக்குத் தாங்கலாகியுள்ளது. மென்னகையுடன் திகழும் அவரது பின்கைகளில் வலப்புறம் துடி. இடப்புறம் கவரி. சடைமகுடம், செவிகளில் வலப்புறம் மகரகுண்டலம், இடப்புறம் பனை யோலைக் குண்டலம், சவடி, நீள்முத்துமாலை, முப்புரிநூல், கை வளைகள் பெற்றுள்ள இறைவனின் சடைமுகப்பில் மண்டை யோடு. இறைவன் முன், தலையில் பிச்சைப்பாத்திரம் ஏந்திச் செல்லும் பூதத்தின் இடையில் சிற்றாடை. சடைமகுடம், சவடி, கை வளைகள், முப்புரிநூலுடன் விளங்கும் அதன் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள்.

முருகன், கதிரவன்

கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், சன்னவீரம், உதரபந்தம், இடைக்கட்டுடனான பட்டாடை, தாள்செறி கொண்டவராய் சமபங்கத்திலுள்ள முருகனின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடியவலம்பிதத்தில். பின்கைகளில் வலப்புறம் சக்தி, இடப்புறம் அக்கமாலை. ஒளிவட்டம் சூழ்க் கரண்டமகுடம், மகர குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான சிற்றாடை கொண்டு இரு கைகளிலும் தாமரைகள் ஏந்தியுள்ள கதிரவன் எழிலார்ந்த தோற்றத்தினர். வலக்கை மலர் நன்கு மலர்ந்து இதழ் விரித்திருக்க, இடக்கை மலர் இதழ்கள் விரியவில்லை.

வானவர், சண்டேசுவரர்

சடைமகுடராய்ப் பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை அணிந்து மகாராஜலீலாசனத்திலுள்ள வானவரின் வலக்கையில் மலர்ந்த தாமரை. இடக்கை முழங்கால் மீது. இருக்கையில் சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. சடைமகுடம், குண்டலங்கள், முத்துமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள அவரது இடக்கை தொடையில்.

பிற சிற்பங்கள்

வானவரை அடுத்துள்ள பின்னாளைய முருகனின் பின் பாம்பு கவ்விய மயில். முன்கைகளைக் காக்கும், அருட்குறிப்புகளில் கொண்டுள்ள முருகனின் இடையில் பட்டாடை. கரண்டமகுடம், குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல் என விளங்கும் அவரது பின்கைகளில் சக்தி, வஜ்ரம். ஒன்றையொன்று நோக்கிப் பிணைந் துள்ள இரண்டு பாம்புகளின் சிற்பம் அடுத்துள்ளது. அவற்றின் உடல் பிணைப்பிடையே தாமரைப்பதக்கம். மண்டபத் தென்புற மேடையிலுள்ள மூன்று பிள்ளையார்களில், பெரியவர் கரண்டமகுடம், சரப்பளி, முத்து உதரபந்தம், முப்புரிநூல், சிற்றாடையுடன் பின்கைகளில் அங்குசம், மோதகம் ஏந்தி, இட முன் கையிலும் மோதகம் கொண்டுள்ளார். வலம்புரித் துளைக்கையிலும் மோதகம். தாமரையில் மகாராஜலீலாசனத்திலுள்ள அவரது வல முன் கையில் தந்தம்.

வாயிற்காவலர்கள்

கருவறைக்காய் ஒருக்கணித்துள்ளபோதும் காவலர்களின் மார்பின் மேற்பகுதியும் முகமும் நேர்நோக்கிய நிலையில். அடர்த்தியான சடைப்புரிகளும் கீர்த்திமுக முகப்புமாய்ச் சடைமகுடம், கோரைப்பற்கள், கீர்த்திமுகத் தோள்வளைகள், கைவளைகள், சரப்பளி, அலங்கார முப்புரிநூல், உதரபந்தம், முத்து அரைக்கச்சு இருத்தும் இடைக்கட்டுடனான சிற்றாடை, கிண்கிணிகள் என விளங்கும் காவலர்களுள், தெற்கர், இடக்கை பற்றியுள்ள மரக்கிளை முண்டின் மேல் வலப்பாதம் இருத்தி, இடப்பாதத்தைக் கருவறைக்காய்த் திருப்பியுள்ளார். வலக்கை அச்சுறுத்தும் அவர் வலச்செவியில் அன்னக்குண்டலம். இடச்செவியில் பனையோலைக் குண்டலம். கழுத்தில் கூடுதலாக முத்துமாலை. வலத்தோள் பின் படமெடுத்த பாம்பு. இடக்கை பற்றியுள்ள மழுவின் கத்திப்பகுதி மேல் இடப்பாதம் இருத்தியுள்ள வடக்கரின் வலக்கை வியப்பில் விரிய, செவிகளில் ஆந்தை, பறவைக் குண்டலங்கள். அவர் தலையின் இடப்புறமும் படமெடுத்த பாம்பு.

எளிய வளாகம் எனினும், கல்வெட்டு இருப்பிலும் கட்டமைப்பு மாட்சியிலும் சிற்பச் செழிப்பிலும் செம்மாந்து நிற்கிறது அல்லூர் நக்கன் கோயில்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.