http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[183 Issues]
[1814 Articles]
Home About US Temples Facebook
Issue No. 183

இதழ் 183
[ ஏப்ரல் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு - 1
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் - 1
The National Museum, New Delhi - A Cultural Legacy of India
சங்ககாலப் பாணர்களின் இனக்குழு உணவியல்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 98 (மயக்கும் மாலைப்பொழுதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 97 (எரிதழல் உள்ளம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 96 (பனிவிழும் முதுவனம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 95 (துன்பம் போக்குவதே தூயபணி)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 5
இதழ் எண். 183 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 97 (எரிதழல் உள்ளம்)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
こぬ人を
まつほの浦の
夕なぎに
焼くやもしほの
身もこがれつつ

கனா எழுத்துருக்களில்
こぬひとを
まつほのうらの
ゆふなぎに
やくやもしほの
みもこがれつつ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் சதாய்யே

காலம்: கி.பி. 1162-1241.

இப்பாடல் தொகுப்பைத் தொகுத்தவர் இவர். இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் புதல்வர். அரசவையில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பதவி வகித்திருந்தாலும் வரலாறு இவரைப் புலவராகவே நினைவு கூர்கிறது. இந்தப் பாடல் தொகுப்பு மட்டுமல்ல. ஷின் கொக்கின்ஷூ மற்றும் ஷின்ச்சோக்குசென்ஷூ உள்ளிட்ட பல தொகுப்புகளையும் இவர்தான் தொகுத்தார். பல இடைக்கால இலக்கியங்கள் இன்றும் ஜப்பானிய வரலாற்றில் நிலைபெற்றிருக்க இவர்தான் காரணம் என்றால் அது மிகையல்ல. இவை தவிர, ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 465 தனிப்பாடல்கள் ஷூய்கூசோ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: காதலனுக்காக ஏங்கும் வலியை உரைத்தல்

பாடலின் பொருள்: முடிவில்லாமல் காத்திருந்து காத்திருந்து மட்சுஹோ நதிக்கரையில் எரியும் கடற்பாசிகள் போல் என் உள்ளமும் எரிந்துகொண்டே இருக்கிறது.

இப்பாடலாசிரியர் சதாய்யேவின் பாடல்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து, இவர் பழைய பாடல்களின் கருவை எடுத்துப் புதிய வடிவத்தில் தருபவர் என்பது. இப்பாடலின் கருத்து இதற்குமுன் தொகுக்கப்பட்ட மான்யோஷு தொகுப்பின் 935வது பாடலிலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள்.

இப்பாடலில் பழங்காலத்தில் உப்பு தயாரிக்கப்பட்ட முறை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக உலகெங்கும் கடற்கரையோர உப்பளங்களில் பாத்திகட்டிக் கடல்நீரை நிரப்பி அதை ஆவியாகச் செய்து மீந்து படியும் உப்புப்பாளங்களைத் தூய்மைப்படுத்தி உப்பு தயாரிப்பார்கள். ஜப்பானிலும் அதுபோல உப்பு தயாரிக்கப்படுவதுண்டு. ஆனால் ஜப்பானியர்களின் உணவில் தவறாது இடம்பெறும் ஒரு பொருள் கடற்பாசி. இந்தியர்கள் தமது பெரும்பாலான உணவுகளில் மசாலா வாசனையைச் சேர்த்துக் கொள்வதுபோல ஜப்பானியர்கள் கடற்பாசி வாசனையைப் பெரும்பாலான உணவுகளில் சேர்த்துக் கொள்வர். வெளிநாடுகளில் நீண்டகாலம் பயணம் செய்யும் ஜப்பானியர்கள் உலரவைத்துத் தாள் போல் ஆக்கப்பட்ட கடற்பாசிகளைக் கொண்டுசென்று அவ்வப்போது சோற்றுடன் சேர்த்து உண்பார்கள். எனவே, கடற்பாசி வாசனை கொண்ட உப்பும் ஜப்பானில் மளிகைக்கடைகளில் விற்கப்படுவதைக் காணலாம்.

கடலிலிருந்து பாசிகளைக் கொணர்ந்து கடல்நீருடன் கொதிக்கவைத்து வடிகட்டி அந்நீரைப் பாத்திகளில் இட்டு நீர் ஆவியானபின் எஞ்சும் உப்பைப் பிரித்தெடுக்கும் முறையை இப்பாடல் சுட்டுகிறது. இதிலும் சிலேடைச் சொற்கள் சில பயின்று வந்திருக்கின்றன. இதில் சுட்டப்பெறும் உப்பளம் அமைந்துள்ள மட்சுஹோ விரிகுடாவின் பெயரில் இருக்கும் மட்சு என்ற சொல்லுக்குக் காத்திருக்கும் என்ற பொருளும் உண்டு. இது காதலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்ணைக் குறிக்கிறது. பேரரசர் ஜுந்தொக்கு கி.பி. 1216ல் நடத்திய ஒரு பாடல் போட்டிக்காக இயற்றப்பட்டது இப்பாடல்.

வெண்பா:

கடலுள் பறித்திடும் தாவரம் நீரின்
சுடருள் எரிந்திடல் போலே - உடலுள்
கடற்பாசி அன்ன இதயம் எரிந்தே
உனக்கென ஏங்கும் மனது

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.