http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[183 Issues]
[1814 Articles]
Home About US Temples Facebook
Issue No. 183

இதழ் 183
[ ஏப்ரல் 2025 ]


இந்த இதழில்..
In this Issue..

தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் – ஒப்பீடு - 1
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் - 1
The National Museum, New Delhi - A Cultural Legacy of India
சங்ககாலப் பாணர்களின் இனக்குழு உணவியல்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 98 (மயக்கும் மாலைப்பொழுதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 97 (எரிதழல் உள்ளம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 96 (பனிவிழும் முதுவனம்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 95 (துன்பம் போக்குவதே தூயபணி)
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் – 5
இதழ் எண். 183 > கலையும் ஆய்வும்
வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயில் - 1
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

சிராப்பள்ளிக் கரூர்ச் சாலையில் 8 கி. மீ. தொலைவில் காவிரியின் தென்கரையிலுள்ளது வடகுடி. நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்காய்ப் பிரியும் கிளைச்சாலையின் தொடக்கத்தில் உள்ளடங்கிக் காட்சியளிக்கும் வடகுடிப் பஞ்சநதீசுவரர் கோயிலும் முற்சோழர் காலக் கற்றளியே. இதே கிளைச் சாலையில் 2 கி. மீ. தொலைவிலுள்ள அல்லூர் நக்கன் கோயில் போலன்றி வடகுடியாரைக் காண அவ்வப்போதேனும் மக்கள் வரத்து உண்டு. கல்வெட்டுகள் நிறைந்திருக்கும் இக்கற்றளி பல புதிய இணைப்புகளைப் பெற்றபோதும் பழைமைச் சுவடுகளையும் பாங்காகவே காத்துக்கொண்டுள்ளது.1

ஊருக்குள் நுழைந்ததும் வலப்புறம் கிழக்குப் பார்வையிலான கோபுரமும் தேரோடும் வீதியோடமைந்த வளாகத்தை வளைத்த மதில்சுவருமாய்ப் பழைமையின் பெருமையாய்ப் புன்னகைக்கிறது கல்வெட்டுகளில் வடகுடி மகாதேவர் கோயிலாக அறிமுகமாகும் இன்றைய பஞ்சநதீசுவரர் கோயில்.

கோபுரம்

துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழும் சாலைப்பத்தி முன்தள்ளலுடன் அமைந்த கோபுரத்தின் கீழ்த்தளச் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. தூண்களின் மேலுள்ள தரங்கவெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலோட்டமான கூடுவளைவுகளுடன் கபோதம். துணைத்தளத்திலிருந்து கபோதம்வரை கருங்கல் அமைப்பாகவும் மேலே செங்கல் கட்டுமானமாகவும் விளங்குகிறது இந்த ஐந்து தளக் கோபுரம்.

மேற்றளங்கள் நான்கும் கீழ்த்தளம் போலவே சாலைப்பத்தி முன்தள்ளல் பெற்றுள்ளன. கோபுரக் கிழக்கு, மேற்கு முகங்களில் கீழிரு தள ஆரஉறுப்புகள் ஆறங்கம் கொள்ள, பிற மேற்றள ஆரஉறுப்புகள் இயல்பான அளவிலுள்ளன. தென், வடமுகங்களில் கீழ்த்தள ஆரம் மட்டுமே ஆறங்கம் பெற்றுள்ளது. தளச்சுவர்களின் பத்திப் பிரிப்புகளை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. மேலே போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். இரண்டாம் தள ஆரச்சுவர் தவிர, பிற ஆரச்சுவர்களில் குறுநாசிகைகள் இல்லை.



சாலை நாசிகைகளும் கிரீவகோட்டங்களும் வெறுமையாக இருந்தபோதும், கிழக்குமுகத்தில் மட்டும் அவற்றின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராய் நாசிகைக்காய் ஒருக்கணித்த காவலர்கள். இரு கையர்களாய் உள்ள அவர்களுள் கீழ்த்தளச் சாலைக் காவலர்கள் மட்டும் கால்களைக் குறுக்கீடு செய்து, உயர்த்திய திருவடியை ஒரு கை பற்றியுள்ள உருள்பெருந்தடி மீது இருத்தியுள்ளனர். மற்றொரு கை வியப்பிலோ, அச்சுறுத்தலிலோ உள்ளது. உருள்பெருந்தடி பற்றியுள்ள இரண்டாம், மூன்றாம் தளச் சாலைக் காவலர்களின் இரு பாதங்களும் தளத்தில். அவர்தம் மற்றொரு கை கீழவர் போல். நான்காம் தளச் சாலைக் காவலர்கள் ஒரு கையைத் தொடையிலிருத்த, கிரீவகோட்டக் காவலர்கள் அதைக் கடியவலம்பிதமாக்கி உள்ளனர். மற்றொரு கை கீழவர் போல். கிழக்கு கிரீவகோட்டக் கீர்த்திமுகத்தில் கையில் பூச்சரத்துடன் வானவர்.

கோபுரக் கிழக்குமுகக் கீழ்த்தளக் கர்ணகூடங்களில் ஒரு கையைக் கடியவலம்பிதமாக்கிய வானவர்கள். அவர்தம் மற்றொரு கையில் மலர். பஞ்சரங்களில் தெற்கில் பிள்ளையாரும் வடக்கில் தோகை விரித்துள்ள மயில்மீது முருகனும் காட்சி தருகின்றனர். முருகனின் வலக்கையில் வேல். இடக்கை மயிலின் கழுத்தைத் தழுவியுள்ளது. எலியின் மேல் சுகாசனத்திலுள்ள பிள்ளையாரின் முன்கைகளில் தந்தம், மோதகம். பின்கைகளில் அங்குசம், பாசம். இடம்புரியாக உள்ள அவரது தலையில் கரண்டமகுடம், இடையில் பட்டாடை.

ஆரச்சுவரில் தெற்கில் தேவியருடன் வீராசனத்திலுள்ள விஷ்ணு இட முன் கையை உருள்பெருந்தடிமீது இருத்தியுள்ளார். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, பின்கைகளில் சங்கு, சக்கரம். அவரது இருபுறத்தும் அமர்ந்துள்ள தேவியர் ஒரு கையை முழங்கால் மீதிருத்தி, மற்றொரு கையில் மலர் கொண்டுள்ளனர். வடக்கு ஆரச்சுவரில் சுகாசனத்தில் சிவபெருமானும் அவர் இடப்புறம் உமையும். சடைமகுடத்தைப் பாம்பு சுற்றியுள்ள சிவபெருமானின் பின்கைகளில் மான், மழு. அவரது வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை உமையை அணைத்துள்ளது. உமையின் வலக்கையில் மலர். இடக்கை அவர் தொடையில்.





தென், வடகீர்த்திமுகங்களில் முறையே கலைமகளும் அலைமகளும் வீற்றுள்ளனர். சுகாசனத்திலுள்ள கலைமகளின் முன்கைகள் வீணை வாசிக்க, பின்கைகளில் வலப்புறம் அக்கமாலை, இடக்கை தொடைமீதுள்ளது. தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள திருமகளின் பின்கைகளில் தாமரைகள். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில்.

கோபுரவாயிலின் மேல்நிலையிலுள்ள இரண்டு மீன்களும் அவற்றிக்கு இடைப்பட்ட செண்டும் கோபுரத்தைப் பிற்பாண்டியர் கட்டுமானமாகக் காட்டுகின்றன. கோபுர உட்பகுதியில் இருபுறத்தும் திண்ணைகள். கிழக்கில் கற்றூண்களாகவும் பிற முத்திசைகளிலும் செங்கல் சுவராகவும் வளரும் மதில், அண்மைக் காலத்தில் உருவான தேரோடும் வெளிச்சுற்றை உள்ளடக்கியுள்ளது.

இரண்டாம் வாயில்

மேற்கில் எழுச்சியுடன் விளங்கும் இறைவளாகத்தின் இரண்டாம் நுழைவாயில் மேலுறுப்புகளற்ற கோபுரக் கீழ்த்தளமாக உள்ளது. சாலைப்பத்தி முன்தள்ளலுடன் அமைந்த துணைத்தளம், பிரதிபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், தரங்கவெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கபோதம், பூமிதேசம் என விளங்கும் இவ்வாயிலின் முன் புதிய காரைக்கட்டுமானம். வாயிலின் இருபுறத்தும் வளரும் மதில் இறைவளாகத்தை நாற்புறத்தும் சூழ்ந்துள்ளது. இம்மதிலின் தென், வடகிழக்கு மூலைகளில் கூரை மேல் இரட்டை நந்திகள்.

கோபுரத்தின் உட்பகுதியில் உருளைத் தூண்களுடன் திண்ணைகள் அமைய, அதன் கிழக்குச் சுவரில் உயரக்குறைவான நான்முக அரைத்தூண்கள். இக்கோபுரத்தின் தென், வட, கிழக்குச் சுவர்களில் இரண்டு சோழர்காலக் கல்வெட்டுகள் பல துண்டுகளாகச் சிதறியுள்ளன.2

உள்சுற்றின் கிழக்கு விரிவு

வாயிலை அடுத்து வளரும் உள்சுற்றின் வடகிழக்கில் இரு அறைகள். தென்கிழக்கில் மடைப்பள்ளி. வாயிலின் மேற்கில் தூண்கள் தாங்கும் கூரையுடன் திருநடையும் அதன் வடபுறத்தே துணைஉபானம், தாமரை உபானம், பாதங்களுடனான கண்டம், பட்டிகை எனும் உறுப்புகளுடனான துணைத்தளம் தாங்கும் திண்ணையும் உள்ளன. திண்ணையின் முன்பகுதியிலுள்ள நான்கு தூண்களும் சதுரபாதம், எண்முக-பன்முக உடல், பாலி, பலகையற்ற உருளை மேலுறுப்புகள் கொண்டு, தரங்கவெட்டுப் போதிகைகளால் கூரை தாங்க, திண்ணையின் கிழக்குப்பகுதி தனியறையாகி உள்ளது. இவ்வறையின் தெற்குச்சுவர் கிழக்குத் தூண்கள் இரண்டையும் இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. மேடையின் கிழக்கு, வடக்கு, மேற்குத் தாங்குதளம் பாதபந்தமாக, சுவரில் கிழக்கிலும் வடக்கிலும் நீர்வழிகள். தாங்குதளத்தின் சில இடங்களில் பட்டிகைக்கு மாறாக வேதிகை இணைக்கப்பட்டுள்ளது. திண்ணையின் மேற்குப்பகுதியில் படிகள்.

திருநடைக் கூரை

திருநடைக் கூரை முகப்பில் தென், வடலாக நீளும் உத்திரம் சிற்பச் செதுக்கல்கள் பெற்றுள்ளது. பூப்பதக்கங்கள், சிறுதூண்கள் அடுத்தடுத்து அமைந்துள்ள அதன் தென்பகுதியில் பிள்ளையாரும் வடபகுதியில் இசை, ஆடற்கலைஞர்களும் உள்ளனர். உத்திரத்தின் வடபகுதியிலுள்ள 13ஆம் நூற்றாண்டு எழுத்தமைதிக் கல்வெட்டு அதைச் செய்தளித்தவராக ஆவத்துக்காத்தாரைக் குறிக்கிறது.3 இடப்பாதத்தைப் பார்சுவமாக்கி, வலப்பாதம் அக்ரதலசஞ்சாரமாக மண்டலத்திலாடும் ஆடலரசியின் இடக்கை அர்த்தரேசிதத்தில். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைக்கட்டுடனான சிற்றாடையுடன் அவிநயிக்கும் அவரது வலக்கை முஷ்டி முத்திரையில். அவரது ஆடலுக்குத் தாளம் தருபவர்களாய் இருபுறத்தும் முழக்குக் கலைஞர்கள்.



திருநடை நடுவில் கொடிமரமும் நந்தியும் பலித்தளங்களும் அமைய, அதன் கூரையைத் தென்வடலாகப் பக்கத்திற்கு நான்காய் அமைந்த பெருந்தூண்கள் தாங்குகின்றன. செவ்வகத் தளம், சதுரபாதம், எண்முக-பன்முக உடல், பாலி, பலகையற்ற உருளை மேலுறுப்புகள், பூமொட்டுப் போதிகை கொண்டுள்ள இத்தூண்களின் முன்னொட்டுகளாகப் பாம்புப்படத்துடன் அமைந்த நான்முக அரைத்தூண்கள். அவற்றின் பலகை மேல் குந்துசிம்மம் அல்லது கைகளை உயர்த்திய பூதம். மேலே மதலையும் பூமொட்டுப் போதிகையும். நடையின் தென்புறத்தே மற்றொரு வரிசையாக நான்கு உருளைத்தூண்கள். அவற்றுள் கிழக்குத் தவிர்த்த பிற தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்க, அவற்றிற்கும் பெருந்தூண்களுக்கும் இடைப்பட்டு இரு நான்முகத் தூண்கள். பெருந்தூண்களுள் கிழக்கிலுள்ள இரண்டும் தரங்க வெட்டுப் போதிகைகள் கொள்ள, தூண்களின் சதுரங்கள் சிலவற்றில் தாமரைப் பதக்கங்கள். நடையின் தென்புறம் மடைப்பள்ளியும் சரக்கறையும் அவற்றைத் தொடர்ந்து நடைமேடையும் அமைய, தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் விரியும் சுற்று மேற்கில் மட்டும் மாளிகை பெற்றுள்ளது.

சுற்று

இறையக முன்மண்டபத்தின் தென்வாயிலொட்டி தென்சுற்றில் அமைந்துள்ள நடைமேடைக் கூரையைக் கீழ்ச்சதுரத்தில் பேரளவுப் பாம்புப்படம் பெற்ற நான்கு செவ்வக, நீள்கட்டு, சதுரத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகள் கொண்டு தாங்குகின்றன. அவற்றுள் ஒன்று சரக்கறைச் சுவரில் ஒன்றியுள்ளது. நடுவிலுள்ள இரண்டின் கீழ்ச்சதுரங்கள் இரு பக்கங்களில் பெயர்ப் பொறிப்புடன் சிற்பங்கள் பெற்றுள்ளன.4





அச்சிற்பங்கள் நான்குமே இறையக முன்மண்டபத்தில் இணைந்துள்ள அம்மன் திருமுன் பார்வையில் உள்ளன. முதல் தூணின் வடக்கு, மேற்கு முகங்களில் அடியவர், சிவாச்சாரியார் சிற்பங்கள். அடியவர் பாளை அழகஞ்சி இறைவியைக் கைக்கூப்பித் தொழ, நம்பியர் சட்டைப் பெருமாளான சிவாச்சாரியார் வலக்கையில் சின்முத்திரை காட்டி, இடக்கை மணியை ஒலிக்கிறார். இரண்டாம் தூண் கீழ்ச்சதுரத்தின் வட, கிழக்கு முகங்களிலுள்ள சிற்பங்களுள் வடஆடவரான கடநயன் விநாயகப்பிள்ளை இரு கைகளையும் மடக்கி, விரல்களை விரித்து இறைவனைப் போற்றும் மெய்ப்பாட்டில். எழுத்துப் பொறிப்பற்ற கிழக்கர் இரு கைகளையும் நீட்டி இறைவனைப் போற்றுகிறார்.

மேற்கு மாளிகை

உறுப்பு வேறுபாடற்ற துணைத்தளத்தின் மீதெழும் சுற்றின் மேற்குமாளிகைக் கூரையை, அதன் தரை விளிம்பொட்டியுள்ள பல்வகைத் தூண்கள் தரங்கவெட்டுப் போதிகைகள் ஏந்தித் தாங்குகின்றன. அவற்றுள், ஐந்து, முச்சதுர இருகட்டு அமைப்புக் கொள்ள, இரண்டு, இரு செவ்வக நீள்கட்டு உடலின. ஒரு தூண் நான்முகமாக அமைய, பிற நான்கும் சதுரபாதம், எண்முகப் பன்முக உடல், மேலுறுப்புகள் என வடிவெடுத்துள்ளன. வடபுறத் தூணொன்றின் கீழ்ச்சதுரத்தில் கைக்கூப்பிப் பத்திமையுடன் நிற்கும் ஆடவர் சுற்றுமாளிகைத் திருப்பணியாளராகலாம். தூண்களின் சதுரங்கள் சிலவற்றில் பூப்பதக்கங்கள். சுற்றின் தென்கிழக்கு மூலையிலும் மாளிகையின் மூன்று திருமுன்களுக்கு இடைப்பட்ட பகுதிகளிலும் அறைகள் அமைக்கப்பட்டு இறைஊர்திகள் இருத்தப்பட்டுள்ளன.

மாளிகைத் திருமுன்கள்

மேற்கு மாளிகையின் முதல் திருமுன்னில் நிருதிப் பிள்ளையார். திருமுன் மாளிகைக் கூரையில் இருபுறத்தும் சுதைநந்திகளுடன் இரு சிறு நான்முக அரைத்தூண்கள் தாங்கும் கீர்த்திமுக மகர திருவாசிக்குள் சுதைப் பிள்ளையார். சுகாசனத்திலுள்ள அவரது பின்கைகளில் பாசம், அங்குசம். கரண்டமகுடராய்ப் பட்டாடையுடன் இடம்புரியராய் விளங்கும் அவரது முன்கைகளில் தந்தம், மோதகம். திருமுன்னில் இலலிதாசனத்திலுள்ள நிருதிப் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். கரண்டமகுடம், தோள், கை வளைகள், சரப்பளி, இடைச்சிற்றாடை பெற்றுள்ள அவரது வல முன் கையில் தந்தம். இட முன் கை மோதகத்தை இடம்புரித் துளைக்கை சுவைக்கிறது.

மாளிகை நடுவில் ஒருதள வேசர விமானத்தில் தெய்வானை, வள்ளியுடன் மயில்மீது சுகாசனத்தில் ஆறுமுகன். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் அமைய, பிற கைகளில் சக்தி, வஜ்ரம் உள்ளிட்ட கருவிகள். கரண்டமகுடம், அணிகலன்கள், சிற்றாடை பெற்றுள்ள அவரது இருபுறத் தேவியரும் ஒரு கை நெகிழ்த்தி, ஒரு கையில் மலர் கொண்டுள்ளனர். வேசர கிரீவகோட்டங்களில் கிழக்கில், இருபுறத்தும் ஒரு கையில் மலருடன் ஒரு கை நெகிழ்த்தி தேவியர் நிற்க, சுகாசனத்தில் முருகன். அவரது முன்கைகள் காக்கும், அருட்குறிப்புக் காட்ட, பின்கைகளில் வஜ்ரம், சக்தி. மேற்கில் இருபுறத்தும் மயில்களுடன் ஒரு கையில் வேல் கொண்டு, மற்றொரு கையைத் தொடையிலிருத்திய பழனியாண்டி.

மாளிகையின் வடமேற்கில் யானைத்திருமகள் திருமுன் அமைய, மாளிகைக் கூரைமுகப்பில் இருபுறத்தும் அன்னங்களுடன் கீர்த்திமுகத் தலைப்பிட்ட மகரதிருவாசியில் தாமரையில் அர்த்தபத்மாசனத்தில் பின்கைகளில் மலர்களுடன் யானைத்திரு மகள். முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புக் காட்டும் அவரது இருபுறத்தும் தனித்தளங்களில் நீரூற்றும் யானைகள். திருமுன் இறைவியும் முகப்புத் திருமகள் போலவே உள்ளார். ஆனால், இங்கு யானைகள் இல்லை.

சண்டேசுவரர் திருமுன்

சுற்றின் வடபகுதியில் இறையக முகமண்டபம் அருகே தென் பார்வையில் சண்டேசுவரர் திருமுன். உபானத்தின் மீதமைந்த பாதபந்தத் தாங்குதளம், வெறுமையான சுவர், வண்ணப்பூச்சுடன் கூரையுறுப்புகள் பெற்றுள்ள அத்திருமுன், கிரீவம், சிகரம், தூபியற்ற நிலையில் மண்டபத் திருமுன்னாய் உள்ளது. திருமுன்னில் இருக்கையில் சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், இடைச்சிற்றாடை பெற்றுள்ள அவரது இடக்கை தொடையில். சுற்றின் நடுப்பகுதியில் இறைவன் விமானமும் மண்டபங்களும் கிழக்குப் பார்வையில்.

- வளரும்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.