![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 183
![]() இதழ் 183 [ ஏப்ரல் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் こぬ人を まつほの浦の 夕なぎに 焼くやもしほの 身もこがれつつ கனா எழுத்துருக்களில் こぬひとを まつほのうらの ゆふなぎに やくやもしほの みもこがれつつ ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் சதாய்யே காலம்: கி.பி. 1162-1241. இப்பாடல் தொகுப்பைத் தொகுத்தவர் இவர். இத்தொடரின் 83வது பாடலின் (துயரறுத்தலே துயரமோ?) ஆசிரியர் தொஷினாரியின் புதல்வர். அரசவையில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பதவி வகித்திருந்தாலும் வரலாறு இவரைப் புலவராகவே நினைவு கூர்கிறது. இந்தப் பாடல் தொகுப்பு மட்டுமல்ல. ஷின் கொக்கின்ஷூ மற்றும் ஷின்ச்சோக்குசென்ஷூ உள்ளிட்ட பல தொகுப்புகளையும் இவர்தான் தொகுத்தார். பல இடைக்கால இலக்கியங்கள் இன்றும் ஜப்பானிய வரலாற்றில் நிலைபெற்றிருக்க இவர்தான் காரணம் என்றால் அது மிகையல்ல. இவை தவிர, ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 465 தனிப்பாடல்கள் ஷூய்கூசோ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பாடுபொருள்: காதலனுக்காக ஏங்கும் வலியை உரைத்தல் பாடலின் பொருள்: முடிவில்லாமல் காத்திருந்து காத்திருந்து மட்சுஹோ நதிக்கரையில் எரியும் கடற்பாசிகள் போல் என் உள்ளமும் எரிந்துகொண்டே இருக்கிறது. இப்பாடலாசிரியர் சதாய்யேவின் பாடல்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து, இவர் பழைய பாடல்களின் கருவை எடுத்துப் புதிய வடிவத்தில் தருபவர் என்பது. இப்பாடலின் கருத்து இதற்குமுன் தொகுக்கப்பட்ட மான்யோஷு தொகுப்பின் 935வது பாடலிலிருந்து பெறப்பட்டது என்கிறார்கள். இப்பாடலில் பழங்காலத்தில் உப்பு தயாரிக்கப்பட்ட முறை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக உலகெங்கும் கடற்கரையோர உப்பளங்களில் பாத்திகட்டிக் கடல்நீரை நிரப்பி அதை ஆவியாகச் செய்து மீந்து படியும் உப்புப்பாளங்களைத் தூய்மைப்படுத்தி உப்பு தயாரிப்பார்கள். ஜப்பானிலும் அதுபோல உப்பு தயாரிக்கப்படுவதுண்டு. ஆனால் ஜப்பானியர்களின் உணவில் தவறாது இடம்பெறும் ஒரு பொருள் கடற்பாசி. இந்தியர்கள் தமது பெரும்பாலான உணவுகளில் மசாலா வாசனையைச் சேர்த்துக் கொள்வதுபோல ஜப்பானியர்கள் கடற்பாசி வாசனையைப் பெரும்பாலான உணவுகளில் சேர்த்துக் கொள்வர். வெளிநாடுகளில் நீண்டகாலம் பயணம் செய்யும் ஜப்பானியர்கள் உலரவைத்துத் தாள் போல் ஆக்கப்பட்ட கடற்பாசிகளைக் கொண்டுசென்று அவ்வப்போது சோற்றுடன் சேர்த்து உண்பார்கள். எனவே, கடற்பாசி வாசனை கொண்ட உப்பும் ஜப்பானில் மளிகைக்கடைகளில் விற்கப்படுவதைக் காணலாம். கடலிலிருந்து பாசிகளைக் கொணர்ந்து கடல்நீருடன் கொதிக்கவைத்து வடிகட்டி அந்நீரைப் பாத்திகளில் இட்டு நீர் ஆவியானபின் எஞ்சும் உப்பைப் பிரித்தெடுக்கும் முறையை இப்பாடல் சுட்டுகிறது. இதிலும் சிலேடைச் சொற்கள் சில பயின்று வந்திருக்கின்றன. இதில் சுட்டப்பெறும் உப்பளம் அமைந்துள்ள மட்சுஹோ விரிகுடாவின் பெயரில் இருக்கும் மட்சு என்ற சொல்லுக்குக் காத்திருக்கும் என்ற பொருளும் உண்டு. இது காதலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்ணைக் குறிக்கிறது. பேரரசர் ஜுந்தொக்கு கி.பி. 1216ல் நடத்திய ஒரு பாடல் போட்டிக்காக இயற்றப்பட்டது இப்பாடல். வெண்பா: கடலுள் பறித்திடும் தாவரம் நீரின் சுடருள் எரிந்திடல் போலே - உடலுள் கடற்பாசி அன்ன இதயம் எரிந்தே உனக்கென ஏங்கும் மனது (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |