![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 183
![]() இதழ் 183 [ ஏப்ரல் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் おほけなく うき世の民に おほふかな わが立つ杣に すみぞめの袖 கனா எழுத்துருக்களில் おほけなく うきよのたみに おほふかな わがたつそまに すみぞめのそで ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு ஜியென் காலம்: கி.பி. 1155-1225. இத்தொடரின் 76வது பாடலை (துள்ளிவரும் வெள்ளலையே!) இயற்றிய அமைச்சர் ததாமிச்சியின் மகன். கி.பி. 1219ல் பதிப்பிக்கப்பட்ட குகான்ஷோ என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். புத்த மதத்தின் பார்வையில் மனிதகுல வரலாறு என்ற பொருண்மையில் அமைந்த இந்நூல் இன்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தனது 10ம் வயதில் புத்த மதத்தின்மேல் ஈடுபாடு கொண்டார். எனினும் இவரது தந்தை பேரரசர் கோதொபாவின் அரசவையில் உயர்ந்த பொறுப்பில் இருந்ததால் அவருக்குப்பின் அரசவைப் பொறுப்பையும் ஏற்க வேண்டியிருந்தது. தனது பரந்துபட்ட உலக அறிவால் 29வது வயதிலேயே பேரரசரின் முதன்மை அரசியல் ஆலோசகர் என்ற நிலையில் வைத்து அழகுபார்க்கப்பட்டார். ஆனால் 7 ஆண்டுகளிலேயே அரசியலில் ஆர்வம் குறைந்து கி.பி. 1192ல் தெந்தாய் புத்தமதப் பிரிவின் தலைவராக ஆனார். கி.பி. 767ல் மதகுரு சாய்ச்சோ இப்பிரிவைத் தோற்றுவித்த அதே ஹியெய் மலையிலுள்ள என்ர்யாக்குஜி கோயிலில் தலைமை மதகுருவாகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனது 70ம் வயதில் வாழ்வின் இறுதி நெருங்கியதை உணர்ந்தாரோ அல்லது தனது கடமைகள் முடிந்துவிட்டன என நினைத்தாரோ இத்தொடரின் 12வது பாடலை (கொண்டல் விலக்காயோ கொண்டலே!) இயற்றிய மதகுரு ஹொன்ஜோவின் வழியிலேயே உயிருடன் கல்லறைக்குள் புகுந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகத் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் 270 பிற பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலக் கவிஞர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருக்கிறார். பாடுபொருள்: துயரறுப்பதே நோக்கம் பாடலின் பொருள்: என்னால் முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இவ்வுலக மக்களைத் துன்பத்திலிருந்து காப்பதே என் இலக்கு. கி.பி. 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஹோகென், ஹெய்ஜி என்ற இருபெரும் உள்நாட்டுக் கலவரங்களும் கெம்ப்பெய், ஜோக்யூ என்ற இரு போர்களும் நடைபெற்று நாடே விரக்தியான அமைதியற்ற நிலையில் இருந்தது. அரசமைப்பே நிலையற்று இருந்ததால் மன்னர்களால் நாட்டு மக்கள் ஆற்றுப்படுத்தப்பட் இயலாத நிலையில் கடவுளாவது அமைதி வாழ்க்கையைத் தரமாட்டாரா என ஏங்கினர். இது மனிதகுலத்தின் இயல்பும் கூட. அப்போது புதிதாக மதகுருவாகப் பதவியேற்றிருந்த இப்பாடலின் ஆசிரியருக்கும் அத்தகைய உந்துதல் ஏற்பட்டதில் வியப்பில்லை. ஆனால் இளவயதாக இருந்தாலும் அறிவு முதிர்ச்சியால் தன் எல்லைகளை உணர்ந்தே இருந்ததால்தான் தன்னால் முடியுமா என்ற ஐயத்துடனே பாடலைத் தொடங்குகிறார். இதற்கு முந்தைய பாடல்களிலும் சட்டையின் கைப்பகுதி இடம்பெற்றிருக்கிறது. அப்பாடல்கள் எல்லாம் அழும்போது பெருகும் கண்ணீரைத் துடைத்துத் துடைத்து ஈரமாக இருக்கிறது என்ற பொருளில் கையாண்டன. ஆனால் இப்பாடல் வேறொரு கோணத்தில் சட்டையின் கைப்பகுதியைச் சுட்டுகிறது. புத்தர் எமக்களித்த இந்த அங்கியின் கருமையிடப்பட்ட நீண்ட கைப்பகுதியால் மக்களை அரவணைத்துத் துன்பத்திலிருந்து காப்பேன் என்கிறார். வெண்பா: முடிவது துன்பம் எனினும் உலகின் அடியுணி ஏங்கும் மனதில் - விடியல் தரவே கடமையும் கொள்ளக் கடவுளும் தந்ததே சட்டையின் கை அடியுணி - அடிபட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |