![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 10
![]() இதழ் 10 [ ஏப்ரல் 15 - மே 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
ஏறு தழுவுதலும் குரவை ஆடுதலும்
ஏறு தழுவுதல் இன்று நேற்று ஏற்பட்ட விளையாட்டல்ல. சங்க காலத்திலேயே ஏறு தழுவுதல் வீர விளையாட்டாக நமது தமிழ் மக்களாலே போற்றப்பட்டது. கலித்தொகையில் 103வது பாடல் ஏறு தழுவுதலைப் பற்றிக் கூறுகிறது. ஏறு தழுவும் வீரவிளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள், கொன்றைப்பூ, மென்மலர் கொண்ட காயாம்பூ, வெட்சிப்பூ, பிடவம் பூ, முல்லைப்பூ, கஞ்சங்கொல்லைப்பூ, குருந்தம் பூ, காந்தள் மலர், பாங்கர்ப் பூ ஆகியவற்றால் ஆன நறுமணம் கொண்ட மாலையைச் சூடிக்கொண்டு, விரைந்து வரும் ஏறைத் தழுவுவராம். அப்படித்தழுவப்படும் ஏறுகளையும் விவரிக்கிறது இப்பாடல். வெண்மையான கால்களையும் கரிய உடலையும் கொண்ட காளை, வெள்ளைப்புள்ளிகளையுடைய சிவந்த காளை. இளம்பிறையைப் போன்று வளைந்த கொம்புடைய சிவந்த காளை, மற்றும் வலிமையுடைய பல காளைகளையும் தொழுவினுள் விட அவை விரைந்தோடி வருதலால் கிளம்பும் மண்புழுதியானது பார்ப்பதற்குப் புகை போல் தோன்றுமாம். அந்த ஏறுகள் தொழுவினுள் குதிக்கும் ஆயர்களை இன்னின்னார் என்று தெரிந்துகொண்டு குத்திக் கிழிக்குமாம். அதில் வலிமை பொருந்திய காளைகள் தனக்குப் பகையான மற்ற காளைகளைக் குத்திக்கிழிக்க கிழிபட்ட காளையின் குடல் கிழித்த காளையின் கொம்பில் சுற்றிக்கொள்ளுமாம். அப்படிச் சுற்றிய குடலை எந்த வீரன் எடுத்து அதனை இறந்துகிடக்கும் காளையின் வயிற்றில் சேர்க்கிறானோ அவனே வெற்றிபெற்றவனாவான். இவ்வாறு ஏறுதழுவும் நிகழ்ச்சி நடந்தேறிய பின்னர், அங்கு கூடி ஏறு தழுவுதலைப் பார்த்து இரசித்த ஆயர் மகளிர் அவர் தம் கணவருடனே குரவைக்கூத்தாடுவராம். எத்தகைய வீரர்களைப் பெற்ற நாடு இது. சூதாட்டம் வீரவிளையாட்டுகள் மட்டுமல்ல. சூதாட்டமும் ஒரு பொழுதுபோக்காக எல்லோராலும் விளையாடப்பட்டது. கலித்தொகைப் பாடல் 136, சூதாட்டத்தை விளக்குகிறது. தலைவன் பொருளீட்ட பயணம் மேற்கொள்ளவிருந்தான். அவன் பயணத்தை தடுத்து, அவனை தலைவியை மணந்துகொள்ளும்படித் தலைவனிடம் பின்வருமாறு கூறுகிறாள் தோழி. சூதாட்டத்தில் பத்து என்ற எண் விழ வேண்டுமென்றால், முதலில் ஐந்து எண் விழப்பெற்று சிறு வித்தம் இடும்பொழுது விழவேண்டிய ஐந்து எண் விழப்பெற்றால் ஆடியவர் எவ்வாறு மகிழ்வரோ அப்படி மகிழ்ந்திருந்தாள். சிறுவித்தம் இடும் போது, ஐந்து விழப்பெறாமல், அதனை விட சிறிய எண் விழப்பெற்றவர் எவ்வாறு வருந்துவரோ அவ்வாறு தலைவி வருத்தம் அடையவோ நீ அவளை விட்டுப் பிரிந்து செல்கிறாய் எனக் கேட்டு நீ பயணம் மேற்கொள்ளாது அவளை மணந்து கொள்வாயாக என்று கூறுகிறாள். சூதாட்டத்தில் மறுவித்தம் இடுவது என்பது, பத்து என்ற எண் விழ வேண்டுமென்றால், ஒருமுறை குறைவான எண்ணை கேட்டு இட்டு மறுமுறை (மறுவித்தம்) இட்டு அதனை ஈடு செய்வது. முதலில் ஐந்து என்ற எண் விழப்பெற்று மறுவித்தம் இடும் பொழுது மீதமுள்ள ஐந்தைப் பெற்றுவிட்டால் அப்படி எண் விழப்பெற்றவன் மகிழ்வான். அதனை தலைவியின் மகிழ்ச்சிக்கு உவமையாக எடுத்துக்காட்டியுள்ளார் புலவர். அப்படி விழாமல் விழவேண்டிய எண்ணைவிட குறைவான எண் விழப்பெற்றவன் சிறுவித்தம் இட்டவனாவான். அதாவது தோல்வியுற்றவனாவான். அப்படி தோல்வியுற்றவன் எவ்வாறு பொருளிழந்து துன்புறுவானோ, அவ்வாறு தலைவன் பிரிந்தால் தலைவி வருந்துவாள் என்று தலைவியின் வருத்தத்திற்கு உவமை கூறியுள்ளார். தோழி கூறக்கேட்டு தலைவன் தன்னை மணந்துகொள்ள தலைவி மகிழ்ந்தாளோ என்னமோ, நமக்குத் தெரியாது. ஆனால் நாம் இப்பாடலைப் படித்து, வரலாற்று செய்தியறிந்து மகிழ்கின்றோம் இல்லையா. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |