![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 10
![]() இதழ் 10 [ ஏப்ரல் 15 - மே 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
மகேந்திரர் நாடகங்கள்
நாடகத்தைப்பற்றி... தென்னிந்திய மன்னனான மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட இந்த பகவதஜ்ஜுகம் மற்றும் இதைப்போன்று மத்தவிலாசம் - இவ்விரண்டு நாடகங்களுமே இந்திய இலக்கியத்துறையில் அங்கத நாடகங்களுக்கு மிகப் பழமையான எடுத்துக்காட்டுகளாம். துரதிர்ஷ்டவசமாக மகேந்திரவர்மனின் இந்த முன்னணிப்படைப்புகள் சாதாரண மக்களிடையே அறிமுகமாகவில்லை. சில அறிஞர்கள் பகவதஜ்ஜுகத்தை அவனுக்குரியதாக அங்கீகரிக்கத் தவறியதே இதற்குக் காரணம். நாடகத்தின் முதற் பகுதியிலும்கூட ஆசிரியர் பெயரேதும் குறிப்பிடப்படவில்லை. இன்னும் பிற்கால உரையாசிரியர்கள் சிலர் போதாயனருக்கும் மற்றும் பரதமுனிக்கும் இந்நாடகத்தை உரிமையாக்கியுள்ளனர். ஆக்கியோன் பற்றிய இந்த அதிசய யூகங்கள் சில அறிஞர்களிடையே குழப்பத்தை விளைவித்துள்ளன. ஆனால் அத்தகைய குழப்பம் ஒன்றும் தேவையில்லை. வரலாற்று உண்மைகள் இந்த இரண்டு அங்கதங்களையும் மகேந்திரவர்மனே எழுதினான் என்பதை வலியுறுத்துகின்றன. பகவதஜ்ஜுகத்தின் ஆங்கிலப் பதிப்பில் இதைப்பற்றி விரிவாக விவாதித்துள்ளோம். ஏறத்தாழ கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மகேந்திரவர்மன் ஆட்சி புரிந்து வந்தான். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாபெரும் மன்னர்களுள் அவன் ஒருவன். இலக்கியத்தில் மட்டுமின்றி, இசையிலும், கோயில் கலையிலும் கூட முன்னோடியாக விளங்கினான். முதன் முதலாக தமிழகத்திலே குகைக் கோயில்களை அமைத்தவன் அவனே. மாமல்லபுரத்தின் கற்கோயில்களும், சோழர்களின் பெருங்கற்கோயில்களும் இவனது படைப்புத்திறனைப் பின்பற்றி எழுந்தவைகளே. பகவதஜ்ஜுகத்தின் கருப்பொருள் - ஆன்மா என்று ஒன்று உண்டு என்பதை யோகி ஒருவன் தனது காரியவாத கோமாளிச் சீடனுக்கு உணர்த்த முயற்சிப்பதை மையமாகக் கொண்டது. நாடகத்தின் ஒரு கட்டத்தில் அந்த யோகி தனது யோக பலத்தால் அப்பொழுதுதான் அரவம் தீண்டி இறந்த இளங்கணிகை ஒருத்தியின் அழகிய உடலுக்குள் தனது சொந்த ஆன்மாவைச் செலுத்தி ஆன்மா ஒன்று உள்ளது என்பதை தனது சீடனுக்கு விளக்கிக்காட்ட முயலுகிறான். ஆனால், இந்த ஆன்ம மாற்றத்தால் உண்டான குழப்பத்திலே கணிகையின் உடலை அணுகியிருந்த யோகிக்கு எந்த வகையிலும் தனது கருத்தைச் சீடனுக்கு விளக்க வாய்ப்பில்லாமல் போகிறது. சீடன் உட்பட அனைவரும் கணிகையின் பேச்சும் நடவடிக்கைகளும் விபரீதமாகவுள்ளதை உணருகிறார்கள். ஆனால், யோகியின் ஆன்மா அவளது உடலைப் பற்றியுள்ளதன் விளைவுதான் அது என்பதை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை. இந்த நகைச்சுவை நாடகத்தின் மூலம் மன்னர் மகேந்திரவர்மர் தமது காலத்தில் நிலவிய மதச்சார்பான கேலிக்கிடமான குறைபாடுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார். இதன் மூலமாக 1300 ஆண்டுகளுக்கு முன்னான தமிழகத்தின் வாழ்க்கை நிலையின் அரிய காட்சிகள் நமக்குப் புலப்படுகின்றன. - எம்.சி.லாக்வுட் பாத்திரங்கள் சூத்திரதாரி : அரங்க மேற்பார்வையாளர் (அரங்கத்தின் பொறுப்பாளி) விதுசகன் : கோமாளி (சூத்திரதாரியின் கோமாளித் துணைவன்) பரிவிராசகர் : துறவி (சுற்றித் திரிகின்ற இந்து சமயத் துறவி) சாண்டில்யன் : பரிவிராசகரின் சீடன் ராஜகணிகை : சொந்தப் பெயர் வசந்தசேனை. அஜ்ஜுகா என்று மரியாதையுடன் அழைக்கப்படுபவள் இராமிலகன் : வசந்தசேனையின் காதலன் மற்றும் வசந்தசேனையின் தாய், மருத்துவர், எமதூதன், பணிப்பெண்கள் மதுகாரிகா மற்றும் பரப்பிரிதிகா பகவதஜ்ஜுகம் (கடவுள் வாழ்த்துக்குப்பின் சூத்திரதாரி நுழைகிறார்) <சூத்திரதாரி> : தேவர் தேவனாம் இந்திரன் தனது மகுடமணி தேயும் வகை பணியும் பாதங்கள், இராவணன் அழுங்கப் பதிந்த விரல், அவ்வலிய விரல்தான் பொருந்திய பாதங்கள் உருத்திர சிவ பாதங்கள் காக்கட்டும். இதோ நமது இல்லம். உள்ளே போவோம். (நுழைதல்) விதுசகா! விதுசகா! (விதுசகன் வருகிறான்) <விதுசகன்> : ஐயா, இதோ இருக்கிறேன். <சூத்திரதாரி> : இங்கே வேறு யாரும் இல்லையென்றால் இனியது ஒன்று சொல்கிறேன். <விதுசகன்> : அப்படியே ஆகட்டும். (குறுக்காக நடந்து உள்ளே வருகிறான்) யாரும் வீட்டில் இல்லை. அதனால் இனியதி அதைச் சொல்லுங்கள். <சூத்திரதாரி> : அப்படியானால் கவனி. இன்று நான் நகரத்தை விட்டு வெளியில் வரும்போது ஒரு குறி சொல்லுகிற ஜோதிடக்கார அந்தணன் என்னிடம் சொன்னான். 'இன்று ஏழாம் நாள் அரசருக்கும் அவன் குடும்பத்தினருக்கும் முன் ஒரு நாடகம் ஆடிக் காட்டப்போகிறாய். உனது நடிப்பால் அரசர் மகிழ்ந்து உனக்குப் பரிசளிப்பார். நீ பெரும் பணக்காரனாவாய்' என்றான். அந்தணனின் கூற்று உண்மையா என்று காண ஆசை கொண்டுள்ளேன். ஆகவே இசைக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். <விதுசகன்> : எந்தவிதமான நாடகம் போடுவீர்கள் ஐயா? <சூத்திரதாரி> : இப்பொழுது என்னைச் சிந்திக்க விடு. நாடகங்கள் பத்துவகை உண்டு. வார, இஹம்ரிக, திம, சமவக்கார, வியாயோக, பாண, சல்லாப, வீதி, உத்சிரிஷ்டி, காங்க, பிரஹஸன. எல்லாம் மரபு வழி நாடகப் பாணியைப்பற்றி வருவன. பத்துவித உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவன. நான் குறிப்பாக நகைச்சுவையில் நாட்டங்கொண்டவன். ஆதலின் அங்கதமே போடவிடு. <விதுசகன்> : அங்கதம் போன்ற அந்தவித நகைச்சுவை எனக்குத் தெரியாதே ஐயா! <சூத்திரதாரி> : அப்படியானால் கற்றுக்கொள். கற்பிக்காமல் எதையும் விளங்கிக் கொள்ளுதல் சாத்தியமன்று. <விதுசகன்> : அப்படியானால் கற்பிக்க வேண்டியது தாங்களே! <சூத்திரதாரி> : சரி, தெரிந்துகொள்ள நீ தீர்மானித்துவிட்டபடியால் புண்ணியப் பாதையில் செல்லும் ஒருவனையே நீயும் பின்பற்று. (திரைக்குப்பின்) <பரிவிராசகர்> : சாண்டில்யா! சாண்டில்யா! <சூத்திரதாரி> : (கேட்டு) பின்னே வா! அந்தணத் துறவியைப் பின்பற்றுவதுபோல என் பின்னே வா. (இருவரும் போகிறார்கள்) முன்னுரை முடிந்தது (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |