![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 91
![]() இதழ் 91 [ ஜனவரி 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், சுமார் 70 கி.மீ தொலைவில் புதுப்பட்டினம் அருகில் பாலாற்றைக் கடந்தவுடன், வேப்பஞ்சேரி என்ற ஊரிலிருந்து பாலாற்றின் கரையில் மேற்காக 2 கி.மீ தொலைவு வந்தால் பரமேசுவரமங்கலத்தை அடையலாம். வைகுண்டப்பெருமாள் கோயில்: இவ்வூரில் இரண்டு கோயில்கள் உள்ளன. முதலில் காண்பது வைகுண்டப் பெருமாள் கோயில். இக்கோயிலை 'சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயில்' என்று பெயரிட்டு அழைக்கின்றனர். காலப்போக்கில் பழைய கோயில் இடிந்துபோய்க் கற்குவியலாய் உள்ளது. ஓடுகள் வேயப்பட்ட சிறுகட்டடத்தில் தெய்வத் திருமேனிகள் எழுந்தருளப்பெற்று வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கே பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக எழுந்தருளி அருள்புரிகின்றார். அழகிய பல்லவர்காலத் திருமேனிகள் இருக்கின்றன. திருமால் கிரீட மகுடம் அணிந்து மேல்வலது கையில் பிரயோக நிலையில் சக்கரத்தைத் தாங்கி இதழ்களில் புன்னகையுடன் அருள்புரியும் அற்புத வடிவம். ஸ்ரீதேவி பத்ர குண்டலங்கள் அணிந்தும், பூதேவி மகர குண்டலங்கள் அணிந்தும் காட்சி தருகின்றனர். இச்சிறிய கட்டடத்தில் மேலும் இரு திருமால் வடிவங்கள் வழிபடப்பெறுகின்றன. அவை விஜயநகரக் கலைப்பாணியுடன் விளங்குகிறது. இக்கோயில் பல்லவர்காலப் படைப்பு என்பதற்கு அடையாளமாக அமர்ந்த நிலையில் உள்ள இரு சிம்மத்தூண்கள் இக்கட்டடத்திற்கு முன்பு உள்ளன. கோயிலுக்கு முன்பு சாலையின் அருகில் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ள ஆழிக்கல் - கற்பலகை கல்வெட்டுடன் காணப்படுகிறது. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரசப் பிரதிநிதி சாளுவ நாயக்கனால் கி.பி. 1522ல் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பிடுகிறது. இக்கோயில் பல்லவர் காலம் முதல் விஜயநகரகாலம் வரை தொடர்ந்து சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றதை இவை மௌனமாய் எடுத்துக் கூறுகின்றன. முன்பு இருந்து இடிந்த கோயிலில் உள்ள பழைய கற்களைக் கொண்டே, தொல்லியல் அறிஞர் திரு. தி. சத்தியமூர்த்தி தலைமையில் இயங்கும் 'Reach Foundation' ஆலோசனையுடன் தற்பொழுது கோயில் சிறந்த முறையில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கைலாசநாதர் கோயில் - சைலேசுவரம் பெருமாள் கோயிலிலிருந்து சிறிது தூரம் வடகிழக்கே சென்றால் பாலாற்றினை அடையலாம். கரை அருகே ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய குன்றில் கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. கோயிலை எளிதாகச் சென்றடையத் திருப்பணிக்குழுவினர் தற்பொழுது ஒரு பாலம் அமைத்துள்ளனர். கோயிலின் கருவறையில் கைலாசநாதர் லிங்க வடிவமாக எழுந்தருளியுள்ளார். பல்லவர்காலத் திருமேனி, கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. மகாமண்டபத்தில் தெற்குநோக்கி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அழகிய வேலைப்பாடு உள்ள பீடத்தின்மேல் அம்பாள் தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் அங்குசம் - பாசம் தாங்கியும், முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரை தாங்கியும் காட்சிதரும் அன்னையின் அழகு சிறப்பு வாய்ந்தது. விஜயநகரக் கலைப்பாணியுடன் இவ்வடிவம் விளங்குகிறது. பல்லவர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருந்தாலும், தற்பொழுது உள்ள திருக்கோயில் அமைப்பு விஜயநகரக் கலைப்பாணியுடன் விளங்குகிறது. கோயிலின் மகாமண்டபத்தில் வலதுபுறம் அழகிய விநாயகப் பெருமான் வழிபடப் பெறுகிறார். பிற்காலப் பல்லவர்காலச் சிற்ப வடிவம். கோயிலுக்கு முன்பு பாதுகாப்பாகக் கற்பலகைக் கல்வெட்டில் பல்லவமன்னன் நிருபதுங்கவர்மனின் (கி.பி. 865-906) 16வது ஆட்சியாண்டில் பரமேசுவரமங்கலம் சைலேசுவரம் எனப்படும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகாதேவர்க்கு வழிபாட்டிற்காக 11 கழஞ்சு பொன் இக்கோயில் கணப்பெருமக்களிடம் அளிக்கப்பட்டது. இக்கொடை மண்ணைக்குடி விழுப்பேரரையன் மகன் நந்தி நிறைமதி என்பவரால் அளிக்கப்பட்டது. இக்கல்வெட்டின் பின்புறத்தில் நிருபதுங்கவர்மனின் 15வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது. இக்கோயிலில் வழிபடப்பெறும் கணபதி பட்டாரரைத் தண்டியக்கிழார் பாண்டிய கிரமவித்தர் மனைவி தேவச்சாணி என்பவர் நிறுவி விளக்கு எரிப்பதற்கும் வழிபாட்டிற்கும் 40 காடி நெல் அளித்தாள் என்பதை அறியமுடிகிறது. இக்கல்வெட்டினை 'சத்ருசிங்கப் பெருந்தச்சம்' என்பவரால் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது. சிறிய குன்றின்மீது இக்கோயில் அமைந்ததால் 'சைலேசுவரம்' எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும் இக்கோயில் நிருபதுங்கவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. இப்பகுதி பல்லவ மன்னர்கள் காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்கியிருக்கிறது. இவ்வூருக்கு அருகில் பாலாற்றின் வடகரையில் வாயலூர் என்ற வரலாற்றுப் புகழ்பெற்ற ஊர் உள்ளது. இங்குள்ள வியாக்ரபுரீசுவரர் கோயிலில் காணப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற இராஜசிம்மன் காலத்திய கோயிலில் காணப்படும் தூண் கல்வெட்டில் பல்லவ அரசர்களின் முன்னோர்கள் பிரம்மா முதல் பரமேசுவரவர்மன் வரை குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலாறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள வசவசமுத்திரம் என்ற ஊரில் 1973-74 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வினை மேற்கொண்டது. தொண்டைநாட்டில் ரோமானிய வர்த்தக மையமாகத் திகழ்ந்ததற்குச் சான்றாகத் தொல்பொருட்கள் கிடைத்தன. இவ்வூரும் பரமேசுவரமங்கலத்திற்கு அருகில் உள்லது. எனவே பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தபொழுது இப்பகுதி சிறந்து விளங்கியிருக்கவேண்டும். கோயில் மகா மண்டபத்தில் காணப்படும் சிற்பம் ஒன்றில் மூன்று தலைகளை உடைய பாம்பின் மீது சிவபெருமான் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். அவருக்குக் காமதேனு என்ற பசு பாலைச் சொரிகின்ற நிலையில் சிற்ப வடிவம் வழிபடப்பெறுகிறது. அரிய தெய்வ வடிவம். விஜயநகர காலச் சிற்ப வடிவம். பாலாற்றின் நடுவே குன்றின்மீது அமைந்துள்ள இக்கோயில் மன அமைதியை அளிக்கிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு கோயில்களுக்கும் வருகிற பிப்ரவரி 2013ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது என்பதை அறியும் பொழுதும், புத்தொளி பெறும் கோயில்களைக் கண்டு மகிழ்ந்தும் போற்றுவோம்! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |