![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 25
![]() இதழ் 25 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
யாழ் ஒடித்தனர்? உங்களுக்கு எவ்வியைத் தெரியுமா? தப்பாத வாள் படையை உடையவர்! பெருவீரர்! மீனுக்கு விலையாய் மக்கள் முத்துமாலை தருமளவு செல்வம் கொழித்த ஊரின் தலைவர்! சிற்றரசரான திதியனின் காவல் மரத்தை வெட்டி அவரை அவமானப்படுத்தித் தம் வீரம் காட்ட விழைந்த மற்றொரு சிற்றரசர் அன்னியை, 'வேண்டாம், சரியன்று. தவிர்த்திடுக' என்று வேண்டி மன்றாடிய பெருந்தகை! வந்தவர்க்கெல்லாம் வழங்கிய அந்த வள்ளல், போர்க்களத்தில் பகை வெல்லப் போராடி வீழ்ந்தார். களம் பாடலாம், களத்தில் வென்ற எவ்வியைப் பாடலாம் என்று தவித்துக் காத்திருந்த பாணர்கள் மேல் எவ்வியின் மரணம் இடியாய் இறங்கியது. நேசித்து நேசித்துக் கொடுத்த அந்தக் கைகளை நினைத்தனர்! இனி யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியினும், இவனுக்கே மரணமா என்ற சினம் மேலோங்கியது. கைகளால் தொழுது வணங்கும் மரபின் வழுவாது போற்றிப் பரவிய, பசிதீர்த்த தங்கள் யாழ்களின் இசையெழுப்பும் வளைந்த கோட்டினை, 'இனி யார் கேட்க இந்த்ட இசை' என்ற வெறுப்புடன் உடைத்துக் களத்தில் எறிந்தனர். எவ்வியுடன் அந்தப் பாணர் தம் யாழிசையும் இறந்ததை மாமூலனார் பார்வையில் அகம் 115 பதிவு செய்துள்ளது. காப்பான் கைக் கொள்ளி மழை மின்னல் மயக்கும் அழகினது. அதற்கு எதையெதையோ உவமையாக்கி மகிழ்ந்துள்ளனர் கவிஞர்கள். எருமை வெளியனார் குறிஞ்சி நிலத்தவர் போலும். அதனால்தான் மின்னலைக் கண்டதும் அவருடைய கவியுள்ளம் தினைப்புனம் சேர்ந்தது. இரவு நேரங்களில் தினைப்புனத்தில் காவலிருந்த ஆடவர்கள் இருட்டை விலக்கவும், விலங்குகளை விரட்டவும் பிடி பொருந்திய எரிகொள்ளிக் கொண்டிருந்தனர். அந்தக் கொள்ளிக்கோலை அவ்வப்போது அங்குமிங்குமாய் அவர்கள் விசிறியபோது தெறித்த சுடர்ப்பொறிகளைப் பார்த்தவர் எருமை வெளியனார். அதனால்தான் மின்னலைக் கண்டதும் அந்தக் கவிஞருக்குக் குறிஞ்சிக் கொள்ளிக் கண்முன் வந்தது. (அகம் 73) பரண் வாழ்க்கை அது ஒரு பெரிய தினைப்புனம். காவலுக்குக் கட்டப்பட்டிருந்த பரணும் உயரத்தில் இருந்தது. அப்பரணில் கானவன் ஒருவன் கள்ளருந்தி மகிழ்ந்திருந்தான். அவனருகே நெய்ச்சாந்து பூசி நெடுக வளர்ந்திருந்த தன் கரிய கூந்தலை, வீசிய மென்காற்று விரைந்து உலர்த்துமென்ற நம்பிக்கையுடன் கைகளால் பெயர்த்துக் கோதியபடி உவந்து அமர்ந்திருந்தாள் கொடிச்சியான அவன் மனைவி. காற்றும் காதல் கணவனின் உடனிருப்பும் சுற்றியிருந்த இயற்கைச் சூழலும் அவளை வருடிவிட்டன போலும். நிலப்பண்ணாம் குறிஞ்சியில் இதழ் மலர்ந்தாள். இனிமையாப் பிறந்தது ஒரு பாட்டு. ஏதோ ஒரு திரைப்படத்தின் தொடக்கக்காட்சி போலச் சேந்தன் கூத்தனால் (அகம் 102) வழங்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை சங்க கால நிஜம்! நம்புங்கள். சோழர் நிதியமும் குறுமகள் சிறையும் "என் கையைப் பிடித்துக்கொள்; பரவாயில்லை. ஆனால், கைவளைகள் கையில் தழும்புண்டாக்குமாறு அழுத்திப் பிடிக்காதே. அது ஆபத்தை வருவிக்கும். விளையாடப் போனாலே, 'உன் மேனி வாடுமடி கண்ணே; வேண்டாம்!' என்று சினப்பவள் என் அன்னை. நீ கைப்பிடிக்க, வளையல் அழுந்தித் தழும்புண்டாக்க, அது என் தாய் கண்டால் அவ்வளவுதான். வெல்லும் வேலினை உடைய சோழப் பெருவேந்தர்கள் தங்களால் வெல்லப்பட்ட நாடுகள் அளித்த பெருநிதியைக் குடந்தையில் வைத்துக் காக்கும் காவலினும் மேம்பட்ட காவலில் எனைச் சிறை வைப்பாள். அதனால் கண்ணா, பிடி. ஆனால், மெல்லப்பிடி; மென்மையாகப் பிடி" என்கிறார் குடவாயில் கீரத்தனாரின் சங்கக்காதலி (அகம் 60). இதில் வலிந்துட் ஒலிப்பது காதலி விரும்பும் காதலன் கைப்பிடிதான் என்றாலும், இந்தக் காதல் பிடியில் நமக்குக் கிடைப்பதோ சங்கச் சோழரின் சரித்திரச் சுவடுகள். தகவல் : வரலாறு ஆய்விதழ் 14, 15. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |