![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 175
![]() இதழ் 175 [ ஃபிப்ரவரி 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் いにしへの 奈良の都の 八重桜 けふ九重に にほひぬるかな கனா எழுத்துருக்களில் いにしへの ならのみやこの やへざくら けふここのへに にほひぬるかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: சேடிப்பெண் இசே காலம்: கி.பி. 11ம் நூற்றாண்டின் நடுப்பகுதி. பிறப்பு இறப்பு தெரியவில்லை. இத்தொடரின் 49வது பாடலை (விளக்கன்ன ஒளிர்தலும் தணிதலும்) இயற்றிய புலவர் யொஷினொபுவின் பேத்தி இவர். 19வது பாடலை (எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?) இயற்றிய பட்டத்தரசி இசேவும் இவரும் வெவ்வேறானவர்கள். 57வது பாடலின் ஆசிரியரான முராசாகி ஷிகிபுவை அடுத்துப் பேரரசர் இச்சிஜோவின் அரண்மனையில் பட்டத்தரசிக்குச் சேடிப்பெண்ணாக இருந்தார். அப்போதெல்லாம் அறிவிற் சிறந்தவர்களை அரசியர் தம் பணிப்பெண்களாக அமர்த்திக்கொள்வது வழக்கமாக இருந்தது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 51 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். பாடுபொருள்: நராவிலிருந்து கொண்டுவரப்பட்ட சக்குரா மலரின் சிறப்பு பாடலின் பொருள்: முந்தைய தலைநகர் நராவை அலங்கரித்துக் கொண்டிருந்த இந்த எட்டடுக்குகள் சக்குரா மலர் தற்போது ஒன்பதடுக்குகள் கொண்ட இவ்வரண்மனையை மணம் மாறாமல் அலங்கரிக்கிறது. கி.பி 784ல் தலைநகரானது நராவிலிருந்து கியோத்தோவுக்கு மாற்றப்பட்டது. பேரரசர் இச்சிஜோ ஆண்டுகொண்டிருந்தபோது ஓர் அதிகாரி மன்னருக்குப் பரிசாக நராவிலிருந்து எட்டடுக்குகள் கொண்ட சக்குராவின் (செர்ரிப்பூ) மரத்தைக் கொண்டுவருகிறார். பெரும்பாலும் சக்குராவானது ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். எட்டு இதழ்களைக் கொண்ட சக்குராவும் ஆங்காங்கே உண்டு. அப்போது அந்தப் பரிசை அரண்மனையில் யார் பெற்றுக்கொள்வது என்ற கேள்வி வந்தபோது அப்போதுதான் புதிதாகப் பணியிலமர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசவையிலிருந்த அமைச்சர் மிச்சிநாகா இதைப்பற்றிக் கவிதை புனையுமாறு கூறினார். சற்றே அதிர்ச்சியுற்ற இவர் துணிந்து உடனடியாக சக்குராவின் எட்டடுக்குகளை அரண்மனையின் ஒன்பதடுக்குகளுடன் இணைத்து இப்பாடலை இயற்றி அனைவரது பாராட்டையும் பெற்றார். தலைநகரானது ஒன்பதடுக்குப் பாதுகாப்பால் சூழப்பெற்றுள்ளது என்றும் அரண்மனை ஒன்பது வாயில்களைக் கொண்டுள்ளது என்றும் இருவிதமாகப் பொருள்கொள்கிறார்கள். வெண்பா: வேறிடம் சேரினும் சீர்மிகு செல்வமும் சாறின்றி நல்லவும் சேர்க்கவே - ஆறினும் நல்மங்கை அன்ன பிறப்பிடம் மாறினும் நன்மணம் மாறா மலர் சாறின்றி - குறைவின்றி (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |