![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 175
![]() இதழ் 175 [ ஃபிப்ரவரி 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 大江山 いく野の道の 遠ければ まだふみも見ず 天の橋立 கனா எழுத்துருக்களில் おほえやま いくののみちの とほければ まだふみもみず あまのはしだて ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் கொஷிக்கிபு காலம்: கி.பி. 997-1025. இத்தொடரின் 56வது பாடலை இயற்றிய புலவர் இசூமி ஷிக்கிபுவின் மகள் இவர். இவரைப் பற்றிய சில குறிப்புகளை 56வது பாடலிலேயே பார்த்திருக்கிறோம். பேரரசர் இச்சிஜோவின் அரண்மனையில் 1009 முதல் தாயாருடன் சேர்ந்து பணிபுரிகிறார். சில ஆண்டுகளிலேயே இவரது தாயார் யசுமாசா என்பவரை மணந்துகொண்டு தாங்கோ மாகாணத்துக்குக் குடிபெயர்ந்து விடுகிறார். பின்னர் கிமினாரி என்பவரை மணந்துகொண்டு ஒரு பெண்குழந்தைக்கும் தாயாகிறார். ஏதோ காரணத்தால் 28 வயதிலேயே இறந்துவிடுகிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 4 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் நான்கே பாடல்களில் காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையில் இடம்பிடித்துவிடுகிறார். பாடுபொருள்: தனிமைப் பயணம் பாடலின் பொருள்: ஓயே மலைக்குச் செல்லும் இக்குனோ பாதை மிக நீண்டு இருப்பதால் இன்னும் அமானோஹஷியைக்கூடக் காண இயலவில்லை. பயணவழிப் பாடலான இதன் பின்புலத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. மேம்போக்காகப் பாடலைப் படித்தால் பயணத்தைப் பற்றியதாகத் தோன்றும். ஆனால் பாடலின் பின்புலத்தையும் விளக்கும் விதமாக சிலேடையாக அமைந்துள்ளது. இப்புலவருக்கு அவரது தாயார் பாடல்கள் எழுதித் தருகிறார் என்ற கருத்து நிலவிவந்தது. ஒருமுறை அரசவையில் கவிதைப்போட்டி நடைபெற்றது. அப்போது சதாயொரி (இத்தொடரின் 64வது பாடலை இயற்றியவர்) என்றொரு போட்டிக் கவிஞர் இவரை மட்டம் தட்டும் விதமாகத் தாங்கோ மாகாணத்திலிருக்கும் உங்கள் தாயாரிடமிருந்து கவிதை வந்துவிட்டதா எனக் கேட்டிருக்கிறார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாகத் தலைநகர் கியோத்தோவிலிருந்து தாங்கோ மாகாணத்துக்குச் செல்லும் வழியிலுள்ள மூன்று இடங்களைக் குறிப்பிட்டு இப்பாடலை இயற்றியிருக்கிறார். இதில் தாயாரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்ற பொருளும் மறைந்து நிற்கிறது. இப்பாடலின் 4வது அடியிலிருக்கும் ஃபுமி என்ற சொல்லுக்கு அடியெடுத்து வைத்தல் என்றொரு பொருளும் கடிதம் கிடைத்தல் என்றொரு பொருளும் உள்ளதால் அதை வைத்துச் சொல்விளையாட்டு விளையாடியிருக்கிறார். நான் நீண்டதூரம் தனியாக நடந்து வந்திருக்கிறேன். ஆனால் இன்னும் அமானோஹஷியில் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னொரு பொருளானது நான் தனியாகத்தான் நீண்ட நாட்களாகப் பாடல் இயற்றிக்கொண்டிருக்கிறேன். தாயிடமிருந்து கடிதம் எதுவும் வருவதில்லை என்பதாகும். வெண்பா: மெய்ப்பொருள் காண்டல் அறிவுடைமை ஆதலின் பொய்செய்தல் ஆன்றோர் பழித்திடச் - செய்குன்றம் தாண்டியும் செய்யுட்சொல் கோத்து நடப்பேன் தனியாக நீண்ட தொலைவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |