![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 140
![]() இதழ் 140 [ ஃபிப்ரவரி 2018 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பல்லவர் பாதையில்
மாமல்லபுரக் கடற்கரைப் பட்டினத்தின் பரந்த நிலப்பரப்பின் நாற்திசைகளிலும் பரவலாக அமைந்திருக்கும் சிற்பக் களஞ்சியத் தொகுதிகளுள் பல்லவரது கோயில் கட்டடக்கலையின் தொடக்கநிலைக் கூறுகளையும், சிற்பச் செழுமையையும் ஒருசேரப் பெற்று விளங்குபவை குடைவரைகளே எனக் கூறலாம்.
மாமல்லபுரத்தில் முற்றுப்பெற்ற குடைவரைகள், முற்றுப்பெறாத குடைவரைகள் என்ற வகையில் மொத்தம் 14 குடைவரைகள் உள்ளன. இவற்றை மண்டபக் குடைவரைகள் எனவும், கருவறைக் குடைவரைகள் எனவும் இருவகைகளாகப் பிரிக்கலாம். கருவறைக் குடைவரை: முகப்பினையடுத்து மண்டப அமைப்பு அல்லாத கருவறைகள் மட்டுமே கொண்ட குடைவரைகளைக் கருவறைக் குடைவரைகள் என்றழைக்கலாம். மண்டபக் குடைவரை: முகப்பினையடுத்து அதன் பின் வரும் மண்டபம், மண்டபப் பின்சுவரில் கருவறை என்ற அமைப்பில் உள்ள குடைவரைகளை மண்டபக் குடைவரைகள் என்றழைக்கலாம். குடைவரையில் இடம் பெற்றுள்ள மண்டபங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மண்டபக் குடைவரைகளை ஒரு மண்டபக் குடைவரை எனவும், இரு மண்டபக் குடைவரை எனவும் இருவைகைப்படுத்தலாம். ஒருமண்டபக் குடைவரை: குடைவரை முகப்பினையும், கருவறையையும் இணைக்கும் மண்டபப் பகுதியானது, இடையில் தூண் வரிசையால் பிரிக்கப்படாமல் ஒரே மண்டபமாக அமைந்திருந்தால் அக்குடைவரையை ஒரு மண்டபக் குடைவரை என்று அழைக்கப்படும். இருமண்டபக் குடைவரை: முகப்பினையும், கருவறையையும் இணைக்கும் மண்டபப் பகுதி, இரண்டாவது தூண் வரிசையால் பிரிக்கப்பட்டிருக்குமாயின் அக்குடைவரையை இரு மண்டபக் குடைவரை என்று அழைக்கப்படும். மாமல்லபுரக் குடைவரைகளின் வகைப்பாட்டினைப் பின்வரும் அட்டவணையின்வழி அறிந்து கொள்ளலாம். ![]() மாமல்லபுரக் குடைவரைகளுள், 5 குடைவரைகள் கருவறையில் தெய்வம் பெற்றவை ஆகும். 4 குடைவரைகள் கருவறையில் தெய்வம் பெறாதவை. எஞ்சியுள்ள 5 குடைவரைகள் முற்றுப் பெறாதவையாகும். மாமல்லபுரத்தின் 14 குடைவரைகளுள் கருவறைக் குடைவரையாக விளங்குவது மும்மூர்த்திக் குடைவரை ஒன்று மட்டுமே! மீதமுள்ள 13 மண்டபக் குடைவரைகளுள் இராமானுஜ மண்டபத்தின் எதிரேயுள்ளக் குடைவரையில் மண்டபம் உருவாகவில்லை எனினும், முகப்பின் அமைப்பைக் கருத்தில் கொண்டு மண்டபக் குடைவரையாகவே அதனைக் கொள்ளலாம். எஞ்சியுள்ள 12 மண்டபக் குடைவரைகளுள் 8 குடைவரைகள் ஒருமண்டபக் குடைவரைகளாகவும், எஞ்சியுள்ள 4 குடைவரைகள் இருமண்டபக் குடைவரைகளாகவும் அமைந்துள்ளன. I. ஒரு மண்டபக் குடைவரைகள்: ஒரு மண்டபக் குடைவரைகளை முற்றுப்பெறாத குடைவரைகள், கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள், கருவறைத் தெய்வமற்ற குடைவரைகள் என்று வகைப்படுத்தலாம். அ. முற்றுப்பெறாத குடைவரைகள் 1. கலங்கரை விளக்கக் குடைவரை 2. புலிப்புதர் மண்டபம் 3. சிறிய கோனேரி மண்டபம். ஆ. கருவறைத் தெய்வம் பெற்றக் குடைவரைகள் 1. அதிரணசண்டேசுவரம் 2. இராமானுஜர் மண்டபம் 3. மகிடாசுரமர்த்தினி மண்டபம் இ. கருவறைத் தெய்வம் அற்றக் குடைவரைகள் 1. கொற்றவைக் குடைவரை 2. வராக மண்டபம் II. இருமண்டபக் குடைவரைகள்: ஒருமண்டபக் குடைவரைகளைப் போன்றே இருமண்டபக் குடைவரைகளையும் முற்றுப்பெறாத குடைவரைகள், கருவறைத் தெய்வம் பெற்ற குடைவரைகள், கருவறைத் தெய்வமற்ற குடைவரைகள் என்று வகைப்படுத்தலாம். அ. முற்றுப்பெறாத குடைவரைகள்: 1. பஞ்ச பாண்டவர் குடைவரை ஆ. கருவறைத் தெய்வம் பெற்றக் குடைவரைகள்: 1. பெரு வராகர் குடைவரை இ. கருவறைத் தெய்வம் அற்றக் குடைவரைகள்: 1. தருமராஜா மண்டபம் 2. பெரிய கோனேரி மண்டபம் இனி, பின்வரும் பகுதியில் மாமல்லபுர்த்தில் அமைந்துள்ள மண்டபக் குடைவரைகளைக் காண்போம். மண்டபக் குடைவரைகள் முற்றுப்பெறாத இராமானுஜ மண்டபம் எதிர்க் குடைவரை: முழுமையடையாத நிலையில் உள்ள ஐந்து குடைவரைகளுள் இராமானுஜர் மண்டபத்திற்கு எதிரே மேற்குப் பார்வையாய் அமைந்துள்ள குடைவரையின் முயற்சி குடைவரை முகப்பின் துவக்கத்திலேயே கைவிடப்பட்டுள்ளது. மண்டபப் பகுதி பொளியப்பெறாத நிலையில் இக்குடைவரை மேற்காண் அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. எனினும் இக்குடைவரை முகப்பின் அமைப்பைக் கருத்தில் கொண்டு இதனை மண்டபக் குடைவரையாகவே கொள்ளலாம். ![]() இராமானுஜர் மண்டபத்தின் எதிரே உள்ள முற்றுப்பெறாத குடைவரை மாமல்லபுரம் இராமானுஜர் மண்டபத்திற்கு எதிரில் உள்ள பாறையொன்றில் மேற்கு முகமாக இக்குடைவரைக்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பாறையானது தரை மட்டத்தைத் தொடும் இடத்திலிருந்து கீழ்த்திசையில் அகழப்பட்டு இருபுறமும் பக்கச் சுவர்களைக் கொண்டுள்ளது. மேற்குப் பார்வையாய் அமைந்துள்ள முகப்பின் மையப்பகுதியில் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முகத் தூண்கள் அமைந்துள்ளன. தென்புறப் பாறைச் சுவரையொட்டி மட்டிலும் அரைத்தூண் உருவாக்கத்திற்கான முயற்சித் துவக்க நிலையில் கை விடப்பட்டுள்ளது. ![]() ![]() குடைவரையின் முகப்பு மையத் தூண்களின் விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. போதிகைகளின் மேற்கைகள் கீழ்க்கைகளை விட இருமடங்கு நீளம் பெற்றுள்ளன. அங்கணங்கள் உருப்பெறவில்லை. பாறையை அகழும் முயற்சியின் விளைவாகத் தூண்களுக்கு இடையே உள்ள சுவர்ப்பகுதிகள் நாற்கரக் கட்டங்களாக பொளியப்பட்டு ஒழுங்கற்ற நிலையில் காணப்படுகின்றது. குடைவரை முயற்சிக்கான பாறைப் பரப்பு சிறிது உள்ளடங்கி இருப்பதால் பாறையின் மேற்பரப்பு வெளித் தள்ளப்பட்டத் தோற்றத்துடன் வடிவமைக்கப்படாதக் கபோதமாய்க் காட்சியளிக்கின்றது. ![]() குடைவரையின் பக்கவாட்டுத் தோற்றம் (தெற்கு) ![]() குடைவரையின் பக்கவாட்டுத் தோற்றம் (வடக்கு) இது போன்று குடைவரை உருவாக்கப் பணிகளின் முழுமையுறாத நிலைக்கு அப்பணியைத் துவங்கிய மன்னர்களுக்கு ஏற்பட்ட போர்ச் சூழல் தலையாய காரணமாக இருந்திருக்கலாம். அல்லது குடைவரை உருவாக்கத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாறைப் பகுதியின் குறைபாடு தாமதமாக அறியப்பட்டு அதன் காரணமாகக் குடைவரைக்கான முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம். நன்றி: மாமல்லபுரம் குடைவரைகள் மு. நளினி டாக்டர் இரா. கலைக்கோவன் ஒளிப்படங்கள் உதவி: ஆர். கே. லக்ஷ்மி. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |