![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 50
![]() இதழ் 50 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். அக்டோபர் 2006 முதல் 'இன்னும் சில மாதங்களில் வந்து விடும்', 'இன்னும் கொஞ்ச வாரங்களில் வந்துவிடும்', 'இன்னும் சில நாட்களுக்குள் வந்து விடும்', என்றெல்லாம் எதிர்பார்த்த கணம் இப்போது வந்தேவிட்டது. ஆம்! நீங்கள் இத்தலையங்கத்தை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 'ஐராவதி' மலர் மலர்ந்து, வரலாற்றார்வலர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரை வெளியிடும் இதே நேரத்தில் வரலாறு.காம் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளைக் கடந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத் தலையங்கத்தை எழுதும்போது, அதற்கு முன்சென்ற காலத்தைத் திரும்பிப் பார்ப்பது வழக்கம்தானே! அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளைப் பார்த்தோமெனில், ஆரம்ப காலத்தில் மாணவராய் - நாங்கள் கற்றதை, கற்ற கணத்திலேயே பதிவு செய்யத் தோதான ஓர் ஊடகமாகவும், பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் முத்திரை பதித்த முனைவர். இரா.கலைக்கோவன் மற்றும் முனைவர் மு.நளினியின் கட்டுரைகளை இணையத்திற்கும் அறிமுகப்படுத்தும் ஓரு கருவியாகவுமே இம்மின்னதழ் விளங்கியிருக்கிறது. காலப்போக்கில், கள ஆய்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பும், அதன் பயனாய் வளர்ந்த எங்கள் ஆய்வு நெறிகளும் இவ்விதழைச் செம்மைப்படுத்தின. இவ்விதழ் தொடங்கும் முன் எழுதிப் பழக்கமில்லாத எங்களுக்கு, சொல்ல வந்ததைச் சொல்லிப் பார்ப்பதற்கான பழகு களமாகவும் இம்மின்னிதழ் விளங்கியுள்ளது. கதைகள், கடிதங்கள், விவாதங்கள், பயணக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பல வகையில் வரலாற்றை வெளிப்படுத்தவும் இம்மின்னிதழ் வகை செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஆசிரியர் குழு உறுப்பினர்களும், இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தாரும் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த இவ்விதழில், காலப்போக்கில் ஐராவதம் மகாதேவன், மைக்கேல் லாக்வுட், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற பல அறிஞர்களின் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர சீதாராமன், நீலன், ரிஷியா, சுமிதா போன்றொரின் எழுத்துக்களை அறிமுகப்படுத்திய பெருமையையும் வரலாறு.காம் பெற்றிருக்கிறது. மாறாதிருப்பது மாறுதல் மட்டுமே என்ற கூற்றுக்கு வரலாறு.காம் மட்டும் விதிவிலக்கா என்ன? நாங்களும் மாறித்தான் உள்ளோம்! தென்னிந்திய வரலாறு என்னும் மாறாச் சுவையைப் பருக விழைந்து, முதல் மூன்று ஆண்டுகளில் நாங்கள் சென்ற பயணங்கள் எங்களை வளப்படுத்தின. வலஞ்சுழி என்ற ஒரு மகத்தான வளாகத்தில் எங்கள் மாணவர் பருவம் நல்ல முதிர்ச்சியை அடைந்தது. பல்வேறு கருத்தரங்குகளுக்குச் செல்லவும், எத்தனையோ முறை தனியாகவும், கூட்டத்திலும், பல்வகை அறிஞர்களைச் சந்திக்கவும், வரலாறு.காம் எங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது. வரலாற்றில் நல்ல பின்புலம் இல்லாத போதும், உண்மையான ஆர்வம் இருப்பதை உணர்ந்த அறிஞர்கள் எங்களை ஊக்கப்படுத்தினர். முதல் மூன்று ஆண்டுகளில் வரலாற்றால் எத்தனையோ நன்மைகளைப் பெற்றோம். நாங்கள் அடைந்த பேருவகைக்குக் கணக்கே கிடையாது. தனி மனிதனாக சென்றிருந்தால் தஞ்சை ஓவியங்களுடன் சில நாட்கள் தனித்திருந்திருக்க முடியுமா? அல்லது அத்யந்தகாமன் எழுப்பிய அற்புதக் கற்றளியின் மேற்றளங்களில் அமைந்திருக்கும் எழிற் காட்சிகளைக் கண்டுகளித்திருக்க முடியுமா? மகேந்திரனின் மகோன்னதத்துக்கு மனதைப் பறிகொடுத்திருக்க முடியுமா? எத்தனையோ அற்புதக் கணங்களை வரலாற்றின் மூலம் பெற்ற நாங்கள் எங்களால் இயன்ற வரையில் வரலாற்றுக்குத் திருப்பித் தரவும் முயன்றிருக்கிறோம். வரலாறு எங்களை வருடா வருடம் வளப்படுத்தியது. அதனால், எங்களது கைம்மாறும் வருடா வருடம் வளர்ந்து கொண்டுதான் வந்துள்ளது. மிகத் துல்லியமாகவும், குறைந்த செலவிலும், அழகிய ஒளிப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்டு எடுத்து, வரலாற்றாய்வுக்கு உதவியதே எங்கள் முதல் கட்டப் பணி. அதன்பின் மலர்ந்தது ஆயிரம் ரூபாய்த் திட்டம். நண்பர்கள் சிலர் சேர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்து, இதுவரை மூன்று புத்தகங்களை வெளியிட்டு எங்கள் வரலாற்றுத் தொண்டை விரிவாக்கிக் கொண்டோம். நான்காம் ஆண்டை நிறைவும் செய்யும் இந்த நேரத்தில், எங்கள் அடுத்த கட்டப் பணியாய், ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரை வெளியிட்டு, தமிழகம் தன் தலைமக்களை அவர் வாழும் காலத்தில் கௌரவிக்காது என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளோம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத இதழைச் சிறப்பிதழாகக் கொண்டு வருவது வழக்கம். இராஜராஜீஸ்வரம், கைலாசநாதர், மகேந்திரர், இராஜசிம்மர் சிறப்பிதழ் வரிசையில், இந்தமாத மின்னிதழை 'ஐராவதம் மகாதேவன்' சிறப்பிதழாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வரலாற்றுக்காக வாழ்வையே அர்ப்பணித்த இப்பெருமகனாருக்குப் பெருமை சேர்க்க முயல்வது வீண்முயற்சி. இவருடைய பணிப் பாராட்டு மலரை வெளியிட எங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஐராவதியை இந்திய அறிஞர்கள் அனைவரும் புடைசூழச் சேர்ந்து, நாங்கள் கொண்டு வந்ததை விட நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்க முடியும். இருப்பினும், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு எங்களுக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணம் இருக்கத்தான் செய்கிறது. வரலாற்று அறிஞர்கள் பலர், ஐராவதம் மகாதேவனுடன் பணியாற்றியவர்கள்; பீஷ்ம பிதாமகராய் விளங்கும் அவரிடம் பணி கற்றவர்கள். அவருடன் பணியாற்றியோரும், அவரிடம் பாடம் கற்றோரும் இம்மலரை வெளியிட்டிருந்தால் அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அவருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத, அவருக்குச் சில தலைமுறைகளுக்கு அப்பால் பிறந்த இளைஞர்கள் கூடி இம்மலரை வெளியிட்டிருக்கும்படிச் செய்திருப்பது இறையுள்ளம் அன்றி வேறென்னவாயிருக்க முடியும்? இம்மகத்தான ஆய்வாளரின் அரிய கீர்த்தியை அனைவரும் உணர வேண்டியே, இம்மலரை வெளியிடும் பேறு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் களிக்கிறோம். சிறப்பிதழாய் மலரும் இம்மாத இதழில், ஐராவதம் மகாதேவனின் பன்முக ஆளுமையை உணர முடியும் என்று நம்புகிறொம். இந்த அற்புதமான வேளையில், இன்னொரு முக்கியமான விஷயம். வேறென்ன? உங்கள் ஆதரவும் ஊக்கமும்தான். நாங்கள் என்ன எழுதினாலும் நீங்கள் எங்களை ஊக்கப்படுத்தத் தயங்காதது போல, எத்தனை முறை கூறினும், தாங்கள் கொடுக்கும் ஊக்கத்தின் பயனாய் நாங்கள் அடையும் உவகைக்கு நன்றி கூற முடியாது. தொடர்ந்து உங்கள் ஆதரவைப் பெற்று இன்னும் பல ஆண்டுகளுக்கு இம் மின்னிதழ் மலர இறைனை வேண்டுகிறோம். நன்றியுடன், ஆசிரியர் குழு. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |