![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 179
![]() இதழ் 179 [ ஜூலை 2024 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். வரலாறு டாட் காம் மின்னிதழைத் தாங்கள் வாசிக்கத் தொடங்கி 20 ஆண்டுகள் நிறையப்போகிறது. திருச்சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வழிகாட்டலில் 2004ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று தொடங்கப்பட்டது. மையத்தின் வெளியீடான வரலாறு ஆய்விதழைப் போன்றே "உண்மை நின்றிட வேண்டும்" என்ற கொள்கையில் உறுதியாக நின்று கற்பனைகளுக்கோ பொய்களுக்கோ இடம்தராமல் 180வது இதழை வெளியிடப்போகிறோம். இதை முப்பெரும் விழாவாக இம்மின்னிதழுக்கு விதைபோடப்பட்ட திருச்சிராப்பள்ளியில் கொண்டாடுவதில் பேருவகை கொள்கிறோம். எவை அந்த மூன்று பெரும் விழாக்கள்? திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரலாற்றுத்துறையின் தலைவராகப் பணியாற்றிப் பணிநிறைவு பெற்றிருக்கும் பேராசிரியர் முனைவர் மு. நளினி அவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைப் போற்றும் நேரம் இது. தமிழ்நாட்டுக் கலைவரலாற்றுக்கான இவரது பங்களிப்புகள் வரலாற்றில் இடம்பெற்றிருப்பவை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் "கல்வெட்டுக் கலைச்செல்வி" பட்டம் பெற்ற இவர் கண்டறிந்த எண்ணற்ற கல்வெட்டுகளும் அவை பகரும் செய்திகளும் இவர் பணிபுரிந்த கல்லூரியையும் ஆய்வு மையத்தையும் தம்மிடம் பயின்ற மாணவியரையும் அடுத்த நிலைக்கு உயர்த்தின என்றால் மிகையில்லை. தன்னலம் கருதாத இவரது உழைப்பு வரலாறு டாட் காம் மின்னிதழுக்கும் ஊக்கத்தை அளித்தது என நாங்கள் பெருமையாகக் கூறுவோம். வரலாறு டாட் காம் தொடங்கிய நாள் முதல் எங்கள் குழுவினரின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை காட்டிய ஒரு நல்லுள்ளம் இன்று நம் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. துவண்ட நேரங்களிலெல்லாம் எங்களுக்குத் தோள்கொடுத்து எந்தத் திசையில் எவ்வாறு பயணிக்க வேண்டும் எனத் தக்கநேரத்தில் நேரிலோ தொலைபேசியிலோ ஆற்றுப்படுத்திய பேராசிரியர் முனைவர் மா.ரா. அரசு அவர்களுக்கு இணையாக இன்னொருவரைக் காண்பது கடினம். அவரது பெயரில் வரலாற்றாய்வு மையம் ஒரு விருதை நிறுவி ஆண்டுதோறும் ஓர் இளம் வரலாற்றாய்வாளருக்கு வழங்கி வருகிறது. முதல் விருது 2021ம் ஆண்டில் வரலாறு டாட் காமின் நிறுவனர்களில் ஒருவரான திரு. லலிதாராம் அவர்களுக்கும் 2023ம் ஆண்டில் இம்மின்னிதழின் கட்டுரையாளரும் புதுக்கோட்டை மாவட்டக் கோயிற்கலைகளை ஆய்வு செய்தவருமான முனைவர் தி. சுமிதா அவர்களுக்கும் இவ்வாண்டு ஆசிரியர் குழுவின் திரு. ச. கமலக்கண்ணன் அவர்களுக்கும் கிடைப்பது என்பது உள்ளபடியே அரசு அவர்களின் கையாலேயே விருதைப் பெறுவதற்கு ஒப்பானது. இவ்விரு பெருமைமிகு நிகழ்வுகளுடன் ஒன்றாக மின்னிதழின் 20ம் ஆண்டு நிறைவுவிழாவையும் 180வது இதழ் வெளியீட்டையும் நடத்துவது நாங்கள் பெற்ற பேறு. மின்னிதழுக்கான விதையை முதலில் விதைத்தது முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள் என்றால், வளரும் காலத்தே தக்க உரமாகவும் நீராகவும் விளங்கிய பேராசிரியர்கள் மு. நளினி, மா.ரா. அரசு ஆகியோரின் நிகழ்வுகளுடன் இணைந்து வரலாற்றுப் பயணத்தின் குறிப்பிடத்தக்க படிநிலையைக் கடப்பதைக் கொண்டாடுவதில் உளம்நிறைந்த பேருவகை கொள்கிறோம். இந்த முப்பெரும் விழாவுக்கு வருகைதந்து எங்களை வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறோம். ![]() நன்றி. அன்புடன் ஆசிரியர் குழு |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |