![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 166
![]() இதழ் 166 [ ஜூலை 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
மனிதனின் ஆயுளை அதிகரிக்கச் செய்வதில் மருத்துவத்தின் பங்கு மிகவும் பெரிதாகும்! இன்று பிரமிக்கத்தக்க வகையிலும் அதிசயமூட்டும் வகையிலும் வளர்ந்துள்ள மருத்துவம் ஆதி காலங்களில் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்று சிந்தனையைப் பின்னோக்கி விரித்தால் முதலில் வள்ளுவக்கிழவனே நினைவுக்கு வருகிறான். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து. நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. குழந்தை மருத்துவம் பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த மருத்துவம் குழந்தை மருத்துவத் துறையையும் தன்னகத்தே கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது. இளங்குழந்தைகளுக்குச் செய்யப்படுகின்ற மருத்துவத்தை மிகவும் தேர்ந்தநிலை பெற்றதாகவே கருதவேண்டும். குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும் சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது. காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும் கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப் பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித் தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார் – சீவகசிந்தாமணி – செய். 2703 பிரமிச்சாறு, கண்ட சருக்கரை, தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கித் தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால் குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது. சரி! இந்தத் தகவலுக்கும் மேற்காட்டப்பட்டுள்ள சிற்பக்காட்சிக்கும் உள்ள சம்பந்தத்தை ஆராய முற்படுவோம். இச்சிற்பமானது கல்லணைக்கருகில் உள்ள திருச்சென்னம்பூண்டியிலுள்ள சடையார் கோவிலின் மேற்குக் கருவறைப் பாதச் சிற்பத் தொகுதியில் அமைந்துள்ளது! இச்சிற்பத்தில் ஒருவர் தனது மடியில் ஒரு குழந்தையைப் படுக்க வைத்தநிலையில் கிடத்தி ஒரு காலைத் தொங்க விட்டும் இன்னொரு காலை மடித்து அதன் மேலே குழந்தையைக் கிடத்தியும் இடது கையை வலது தோள் பகுதியில் மேல் நோக்கி வைத்து வலது கை கொண்டு இடது உள்ளங்கையில் எதையோ கசக்கி பிழிவதுபோல் காட்டப்பட்ட இக்காட்சி இக்கட்டுரை ஆசிரியருக்கு மேற்கூறிய சீவகசிந்தாமணி காட்டிய குழந்தை மருத்துவத்தை நினைவுபடுத்தியது! மேலும் இந்தப் பாதத் தொடர்ச் சிற்பங்களில் ஒரு மகப்பேற்றுச் சிற்பமும் இடம் பெற்றுள்ளது குறிபிடத்தக்கதாகும்! |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |