![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 112
![]() இதழ் 112 [ அக்டோபர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் பெரும்பான்மையன முழுமையடைந்திருந்தபோதும் முற்றுப்பெறாத கல்வெட்டுகளும் உள்ளன. சிராப்பள்ளி மாவட்டத்தில் பல கோயில்களில் (திருச்செந்துறை, உய்யக்கொண்டான் திருமலை, வயலூர், இலால்குடி முதலியன) களஆய்வுகளின்போது இத்தகு முழுமையுறாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து படியெடுத்துள்ளோம். இவை முற்றுப்பெறாமல் போனமைக்கான காரணம் அறியக்கூடவில்லை. திருக்கற்குடியான உய்யக்கொண்டான் திருமலைக் கோயிலில் முதலாம் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று சுற்றுத் தூணில் வெட்டப்பட்டுள்ளது. முழுமையுறாத இக்கல்வெட்டு இராஜேந்திரர் பழையாற்று அரண்மனையின் உட்புறத்தே தென்பக்கக் கூடத்தில் உணவருந்திக்கொண்டிருந்த நேரத்தில் வெளியிட்ட அரச ஆணையாக அமைந்துள்ளது. இறைவனுக்குரிய நிலம் அளக்கப்பட்ட தகவலைத் தரும் இக்கல்வெட்டில் அந்நில அமைப்புகள் பகுக்கப்பட்டிருக்கும் முறைமையும் அளந்த விதம் சொல்லப்பட்டிருக்கும் வகைமையும் கவனத்திற்குரியனவாக அமைந்துள்ளன. அளந்த விதம் 1. ‘இவ்வூர்த் திருக்கற்குடி மாதேவர் விழுமியார் நிலம்’ என்று உளப்பேச்சுப் பேசி அளந்து வந்த நிலங்கள்: நிலப்பகுப்பு அ. இத்தேவர் இறை இறுக்கும் இரண்டு பூ விளையும் நிலம் ஆ. இத்தேவர் இறை இறுக்கும் கமுகம் தோட்டம் இ. இத்தேவர் கற்பாறையும் கல்மலையுமாகக் கிடந்த நிலம் (இக்கோயில் சிறு குன்றில் அமைந்துள்ளது) ஈ. இத்தேவர் ஸ்ரீவிமானமும் திருமலையும் உ. இத்தேவர் திருநந்தவனம் ஒவ்வொரு பகுப்பிலும் இருந்த நிலத்தின் அளவு, நில வருவாய், எதற்காக இந்நிலங்கள் அளக்கப்பட்டன என்ற தகவல்களைக் கல்வெட்டு முற்றுப்பெறாமையினால் அறியக்கூடவில்லை. இக்கல்வெட்டின் தொடர்ச்சி கோயிலின் வேறு பகுதிகளில் உள்ளதா என்று தேடியபோது முழுமையடைந்த நிலையில் இதே கல்வெட்டு சுற்றுச் சுவரில் மறுபதிப்புப் போல வெட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. தூணில் முதல் முறையாகக் கல்வெட்டை வெட்டியவர்கள், இடக்குறைவு காரணமாகப் பணி தொடராமல் கல்வெட்டைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்கள். கோயில் நிலங்கள் தொடர்பான மிக முக்கியமான அரச ஆணை என்பதால் முழுக் கல்வெட்டும் இடம்பெறும் அளவிற்குக் கோயிலின் மற்றோர் இடத்தைத் தேர்ந்து ஆணையைப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரே கல்வெட்டு, கோயிலின் ஓர் இடத்தில் முற்றுப்பெறாத நிலையிலும் மற்றோர் இடத்தில் முழுமை நிலையிலும் காட்சிதருவது எங்கள் ஆய்வு அனுபவத்தில் இங்கு மட்டும்தான். இரண்டாம் பதிவாக விளங்கும் கல்வெட்டு, முற்றுப் பெறாத கல்வெட்டின் அனைத்து வரிகளையும் கொண்டிருப்பதுடன், அங்குப் பதிவாகாமல் விடுபட்ட நிலத்தின் அளவு, நில வருவாய், எதற்காக இந்நிலங்கள் அளக்கப்பட்டன என்பன போன்ற தகவல்களையும் நிறைவாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையில் பல அரசு அலுவலர்கள் வெளிப்படுவது வரலாற்றுக்கு வரவு.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |