![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 101
![]() இதழ் 101 [ நவம்பர் 2013] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
தமிழ்நாட்டுத் திருக்கோயில் கல்வெட்டுகளில் விளக்குக் கொடைக்கல்வெட்டுகளே எண்ணிக்கையில் மிகுதியானவை. மக்கள் மண்டும் இடமாக விளங்கியதால் கோயிலை வெளிச்சப்படுத்துவதைப் பேரறமாகக் கருதினர் பழந்தமிழர். சந்தி விளக்குகளும், இரவு பகல் தொடர்ந்து ஒளியூட்டிய நந்தாவிளக்குகளும் தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் சுடர்விட்டமைக்கு மக்கள் கொடைகளே வழியமைத்தன. பொதுவாக இத்தகு விளக்குகள் ஏற்ற விழைந்தோரால் நிலத்துண்டுகளோ, பொற்கழஞ்சோ, காசோ, கால்நடைகளோ கோயில் நிருவாகத்திடம் வைப்பு நிதி போல ஒப்படைக்கப்பட்டன. நிலத்தின் விளைச்சலும் பொன்-காசு இவற்றின் வட்டியும் கால்நடைகளின் பாலும் கொண்டே விளக்கேற்றத் தேவையான எண்ணெய், நெய், கற்பூரம் ஆகியவை பெறப்பட்டன. விளக்கேற்றக் கொடையளித்தவர்களில் சிலரே விளக்குத் தண்டுகள் வழங்கியுள்ளனர்.. அவருள்ளும் மிகச் சிலரே சிறப்பும் பெருமையும் பொருந்திய குத்துவிளக்குகளைக் கோயில்களுக்கு அளித்துள்ளனர். விரல் விட்டு எண்ணத்தக்க கொடையாளிகளே அவ்விளக்குகளை எங்கு இருத்தி ஒளிகூட்ட வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். விளக்கேற்றத் தரப்படும் கொடை எதுவாக இருந்தால் அறக்கட்டளை தளராமல் தொடரும் என்று எண்ணி அதற்கேற்ப கொடையளித்தவர்களை மிக அரிதாகவே கல்வெட்டுகளில் காணமுடிகிறது. திருவரங்கம் திருக்கோயிலில் உள்ள இரண்டாம் இராஜராஜரின் பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, மலைநாட்டு வேணாட்டடிகளான ஸ்ரீகோதை இரவிவர்மனை அத்தகு ஓர் அரிய கொடையாளியாகக் காட்சிப்படுத்துகிறது. தலையில் மாணிக்கமும் முத்தும் பொருத்தப்பட்ட தங்கக் குத்துவிளக்கு அரங்கத்தின் உலாத் திருமேனியான அழகியமணவாளப் பெருமாள் திருமுன் இருத்தப்படவேண்டும் என்ற வேண்டுதலோடு இரவிவர்மரால் கொடையளிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு நறு நெய் நாழியும் கற்பூரமும் இட்டுக் குத்துவிளக்கை இரவும் பகலும் ஒளிரும் நந்தாவிளக்காக ஏற்றிடுமாறு கேட்டுக்கொண்ட இரவிவர்மர், அதற்bகன 633 காசுக்கு இணையான அச்சு (ஒரு வகைப் பணம்) அளித்தார். நிலமாக அளித்தால் அதற்கு அழிவு நேரும் என்பதாலும் பொன்னாகத் தந்தால் பெருகும் என்பதாலும் இத்தகு கொடைப்பொருளை அளித்ததாகத் தெரிவிக்கும் இரவிவர்மரின் விளக்கேற்றல் பற்றிய ஆவணம் எங்குக் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டது என்பதையும் கோயில் நிருவாகம் ஆவணத்தின் இறுதிப்பகுதியில் ‘நடுவிற் திருமதிலில் நாடறிபுகழன் திருவாசலிலே மேற்கடைய கல்வெட்டிவித்தோம்’ எனத் தெளிவாகச் சுட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திருவரங்கம் திருக்கோயில் கல்வெட்டுகள் வரலாற்றுத் தரவுகளின் பெருங்களஞ்சியமாய் விளங்குகின்றன. அரசியல், பொருளாதாரம், பண்பாடு மட்டுமல்லாமல் மனித உள்ளங்களின் எண்ண அலைகளைக்கூட அவை பதிவுசெய்துள்ளன. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |