![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 100
![]() இதழ் 100 [ அக்டோபர் 2013] நூறாவது இதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
எறும்பியூர் பாடல் பெற்ற தலம். மலை மேல் கோயிலாய் இங்கு விளங்கும் எறும்பியூர் ஆழ்வார் விமானம் முற்சோழர் காலக் கட்டுமானம். கட்டியவர் இவர்தான் எனச் சுட்டும் கல்வெட்டோடு விளங்கும் மிகச் சில தமிழ்நாட்டுக் கோயில்களில் இதுவும் ஒன்று. கிளியூர் நாட்டுச் சிறுதவூரில் வாழ்ந்த வீரநாராயணன் எனும் செம்பியன் வேதிவேளார் எடுப்பித்த இக்கோயில், அப்பெருந்தகையின் திருப்பணிகளைக் கல்வெட்டுகள் வழி வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. வேதிவேளார் எறும்பியூருக்கும் இக்கோயிலுக்கும் செய்த பணிகளுள் கோயில் அருகே மலை மேல் சத்திரம் ஒன்றை அமைத்தமை குறிப்பிடத்தக்கது. நாளும் பதினைந்து அந்தணர்கள் உணவருந்துமாறு தொடர்ந்து உணவு வழங்க வாய்ப்பாக இரண்டு வேலி ஏழு மா நிலத்தை பலரிடம் விலைக்குப் பெற்ற செம்பியன் வேளார், அந்நிலத்தையும் உணவு வழங்கும் பொறுப்பையும் ஸ்ரீகண்டசதுர்வேதிமங்கலத்து சபையிடம் ஒப்புவித்தார். இருநாழி அரிசியும் கறிகாய் ஒன்றும் புளிங்கறி ஒன்றும் புழுக்குக்கறி ஒன்றும் நெய் அரைப்பிடியும் தயிர் உரியும் இரண்டு பாக்கும் வெற்றிலையும் அந்தணர் ஒருவருக்கான உணவாக அமைந்தன. முற்சோழர் காலத்தில் நிலத்தின் மீது கொள்ளப்பட்ட இறை, எச்சோறு, வெட்டி, வேதினை உட்பட்ட அனைத்து வரிகளையும் ஆண்டுதோறும் செலுத்த வாய்ப்பாக வரிக்கான வைப்புத் தொகையை வேதிவேளார் சபையிடம் செலுத்தினார். கல்வெட்டின் முதலும் இடையுமான பகுதிகள் சொல்லும் செய்தி இது. இது போன்ற கொடைச் செய்திகள் இயல்பாகக் கல்வெட்டுகளில் வெளிப்படும் தரவுகள்தான். கல்வெட்டின் கடைப்பகுதியே தேடலில் தெறித்த முத்து. வரிக்காப்பாக வைப்புத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், அந்நிலத்துக்குரிய வரியினங்களைக் காட்டுமாறு சபை நடவடிக்கையின் போது உறுப்பினர்கள் யாரேனும் எழுந்து கேட்டால், பிற சபை உறுப்பினர்கள் அவருடனான நெருக்கத்தைத் (அந்யோந்ய சகாவாசம்) தவிர்ப்பதுடன், அவர் சார்ந்த வைதிகச் சடங்குகளையும் (சுப ஸ்பரிச புண்யஹாங்கள்) தவிர்ப்பர். வரியினங்களைக் காட்டுமாறு கேட்டவரையும் அப்படிக் கேட்டபோது சபையில் உடனிருந்தவரையும் தண்டிக்கும் விதமாகச் சிவனடியார்கள் தாங்கள் விரும்பும் களத்தில் தாங்கள் வேண்டும் அளவிற்கான பொன்னை அவர்கள் தண்டமாகச் செலுத்துமாறு செய்யலாம். ஸ்ரீகண்டசதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி சபை தெரிவித்திருக்கும் இவ்விரு நிலைப்பாடுகளும் அறக்கட்டளை தொடர்பான தரவுகளுடன் இணைந்த நிலையில் கோயிலில் கல்வெட்டாக இடம்பெற்றன. இந்த ஒப்பந்தத்தையும் அறிவிப்பையும் ஊர் மத்யஸ்தரான தர்ம பிரியன் கலிவிசையன் தருணேந்து சேகரன் எழுத்து வடிவமாக்கினார்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |