![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 87
![]() இதழ் 87 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2012 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
கடந்த 2011ம் ஆண்டுடன் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை (Archaeological Survey of India - ASI) 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது. அதற்காக அத்துறைக்கு வரலாறு.காம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 1861ம் ஆண்டு அப்போதிருந்த இந்திய அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நினைவுச்சின்னமாக அறிவித்துப் பாதுகாக்கத் தொடங்கியது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்த நல்முயற்சி இன்றுவரை பழமையான நமது பாரம்பரியச் சின்னங்கள் பலவற்றை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது. அதற்காக வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளார்கள். டிசம்பர் 2011ல் புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் 12 நூல்களைப் பிரதமர் வெளியிட, இத்துறை செழிக்கச் சில நிதியுதவி அறிவிப்புகளைக் கலாசாரத்துறை நடுவண் அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறப்பு உதவி, இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கத் திட்டங்கள் போன்றவற்றை அறிவித்தார். இவற்றை வரவேற்கும் அதேவேளையில், இவ்வுதவிகள் முறையாகத் தகுதியான நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்குச் சென்றுசேரவேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறது வரலாறு.காம். அரசு நிறுவனங்கள் என்றாலே ஊழலும் நிர்வாகத் திறமையின்மையும் மலிந்தது என்ற மக்களின் பொதுவான எண்ணத்திற்குச் சற்றே விதிவிலக்காகச் செயல்படும் துறைகளில் ஒன்று தொல்லியல் துறை. இந்திய நிலப்பரப்பைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்து வருகின்றன இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையும் அந்தந்த மாநில அரசுத் தொல்லியல் துறைகளும். இருப்பினும், போதுமான ஊழியர்கள் இல்லாமையால் சரிவரக் கண்காணிக்க முடிவதில்லை. திருவிழா நாட்களில் தஞ்சை பெரியகோயில் போன்ற புகழ்பெற்ற கோயில்களைக் குப்பைமேடாக்குவது பக்தர்கள் என்றால், விடுமுறை நாட்களில் மாமல்லபுரம் போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அசிங்கப்படுத்துவது சுற்றுலாவாசிகளின் தலையாய கடமையாய் இருக்கிறது. அண்மைக்காலமாக மாமல்லபுரம் செல்லும் போதெல்லாம் இக்கொடுமையைக் காண நேர்கிறது. ஊருக்கு வெளியே இருக்கும் குடைவரைகளை மதுக்கூடங்களாகப் பயன்படுத்துவது முதல் ஒற்றைக்கல் தளிகளை மறைவிடமாகக் காதலர்கள் பயன்படுத்துவது வரை எண்ணிக்கையில் அடங்காதவை. என்னதான் கோடிகளைச் செலவழித்துக் கடற்கரைக் கோயில், ஐந்து இரதங்கள் போன்றவற்றை அழகு படுத்தினாலும், தேவையான அளவுக்கு ஊழியர்களை நியமிப்பதற்கும் சில இலட்சங்களையாவது ஒதுக்க வேண்டும். இல்லாவிடில், இக்குடைவரைகளில் வரலாற்றாய்வு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இவை நிரந்தர இடையூறாகவே இருக்கும். நினைவுச் சின்னங்களை அழகு படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் நிதி ஒதுக்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், அவை தகுந்த முறையில் அப்பணியை மேற்கொள்ளப் போதுமானதா என்று பார்க்கவேண்டும். இல்லாவிடில், திட்டமிட்ட அளவுக்குப் பலன் வராது. உதாரணமாக, தஞ்சைப் பெரியகோயிலின் தரைத்தளத்தின் சாந்தாரத்திலிருக்கும் முதலாம் இராஜராஜர் கால ஓவியங்களைப் படியெடுத்துத் தெற்குப் பிரகாரத்தில் காட்சியகமாக அமைத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் அதைப் பார்த்ததற்கும் கடந்த மாதம் பார்த்ததற்கும் மிகப்பெரும் வேறுபாடு தெரிந்தது. ஆயிரம் ஆண்டுகளாக நிறம் மங்காமல் காட்சியளிக்கும் சோழர்கால ஓவியங்களைக் காட்டிலும் சில ஆண்டுகளில் இக்காலப் புகைப்படங்கள் மங்கலாகத் தொடங்கியிருக்கின்றன. தொழில்நுட்பம் போதவில்லையா அல்லது உரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லையா என்று தெரியவில்லை. விரும்பும் பலனைத் தரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அதிக நிதி வேண்டும். விமானங்களையும் கோபுரங்களையும் புதுப்பிப்பதற்கும் இவை பொருந்தும். வரலாற்றாய்வுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்குவது துறையின் கடமைகளில் ஒன்றுதான் என்றாலும், ஆய்வாளர்கள் தவிர்த்த பொதுமக்கள் கண்ணில்படும் இதுபோன்ற குறைகளைத் தீர்ப்பது மக்களிடையே தொல்லியல் துறை மீதான நல்லெண்ணத்தை வளர்க்கும். வரலாற்றாய்வாளர்களுக்குத் தொல்லியல் துறையுடன் தொடர்பு இருப்பதால், அத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தெரிந்திருக்கும். இத்தகைய குறைகள் துறையின் செயல்பாட்டையும் அதிகாரத்தையும் மீறிய நிகழ்வுகள் என்பதும் புரிந்திருக்கும். ஆய்வாளர்கள் வரலாற்றை ஆய்வு செய்வதும் தொல்லியல் துறை நினைவுச் சின்னங்களைப் பராமரிப்பதும் புதுப்பிப்பதும் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் துறையின் நல்ல பல முயற்சிகளை மறைத்துவிடும் என வரலாறு.காம் கவலை கொள்கிறது. ஆனால், நடுவண் அரசு மற்றும் மாநில அரசுத் தொல்லியல் துறைகள் மனது வைத்தால் கண்டிப்பாக இவற்றைக் களைய முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறது வரலாறு.காம். அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |