![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 70
![]() இதழ் 70 [ ஏப்ரல் 16 - மே 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் அரிமழம் சாலையில் 9 கி. மீ. தொலைவில் உள்ள இராயவரத்தில் அமைந் துள்ள ஆயிங்குடி மலைக்கொழுந்தீசுவரர் குடைவரை பெருவளாகமாக உருவெடுத்துள்ளது.1 குலால கோட்டையூர் போலக் கருவறைக் குடைவரையாகப் பிறந்த மலைக்கொழுந்து ஈசுவரரைச் சுற்றிப் பல கட்டுமானத் திருமுன்கள் வளர்ந்து வளாகப் பெருக்கத்திற்கு வழிகோலியுள்ளன. கிழக்குப் பார்வையாக உள்ள கோயில் வளாகத்தின் முதல் மண்டபம் அரு. சா. ராம. ராமசாமி செட்டியார் மண்டபமாக அழைக்கப்படுகிறது. மண்டப வாயிலின் மேலே காட்டப் பட்டுள்ள சாலையில் நந்தியின் மீது சிவபெருமானும் உமையும் அமர, இருபக்கத்துள்ள அலங்கார வளைவுகளில் வலப்புறம் மூஞ்சுறு மேல் பிள்ளையாரும் இடப்புறம் மயில்மேல் முருகனும் முறையே உத்குடியிலும் சுகாசனத்திலும் இடம் பெற்றுள்ளனர். வாகனங்கள் இருத்தப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் வடபுறத்தே முன்றிலுடன் உள்ள ஒருதள வேசர விமானத்தில் முனீசுவரப் பிள்ளையார் இடம்பெற்றுள்ளார். வாகன மண்ட பத்தை அடுத்துள்ள மண்டபத்தில் கருவறையை நோக்கிய வாறு பலித்தளமும் நந்தியும் உள்ளன. நந்தி மண்டபத்தின் வடவாயில் வடசுற்றுக்கு வழிவிடுகிறது. சுற்றின் வடகிழக்கில் பைரவருக்கும் ஒன்பான்கோள்களுக்கும் திருமுன்கள் உள்ளன. முகமண்டபம், ஒருதளவேசர விமானம் எனத் தென்பார்வையாக உள்ள அம்மன் திருமுன் கருவறையில் இறைவி மங்களநாயகியாய்ச் சமபங்கத்தில் வலக்கையில் மலரேந்தி, இடக்கையை நெகிழ்த்திக் காட்சிதருகிறார். அம்மன் விமானத்திற்குச் சற்று முன்னுள்ள ஒருதள நாகர விமானத்தில் இலிங்கம் அமைய, சுற்றின் வடமேற்குத் திருமுன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளியுள்ளார். அவரின் வலப்புறத்தே உள்ள மண்டபத் திருமுன்னில் கலைமகள், யானைத்திருமகள், கொற்றவைச் சிற்பங்கள் உள்ளன. நந்தி மண்டபத்தின் தென்புற வாயில் வழித் தென்சுற்றை அடையலாம். இச்சுற்றின் மேற்கில் நாகர், பிள்ளையார் சிற்பங்கள் உள்ளன. இடம்புரிப் பிள்ளையார் துளைக்கையால் இட முன் கை மோதகத்தைச் சுவைத்தபடி பின்கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியுள்ளார். வல முன் கையில் உடைந்த தந்தம். நந்தி மண்டபத்தை அடுத்துள்ள பெருமண்டபம் கிழக்கி லும் தெற்கிலும் வாயில்கள் பெற்றுள்ளது. கிழக்கு வாயிலைக் காவலர்களும் தெற்கு வாயிலை, அது அம்மன் திருமுன்னுக்கு நேரிருப்பதால் காவற்பெண்டுகளும் அலங்கரிக்கின்றனர். முச்சதுர, இருகட்டு உடல் பெற்ற நான்கு தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகள் கொண்டு கூரை தாங்கும் பெருமண்ட பத்தின் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்தும் உள்ள கம்பிக் கதவு பெற்ற மேடைகளில் செப்புத்திருமேனிகள் இடம்பெற்றுள்ளன. தூண்களின் கீழ்ச்சதுரம் நாகபந்தம் கொள்ள, சதுரங் களில் பல்வேறு சிற்பங்கள். பெருமண்டபத்தின் மேற்கிலுள்ள முகமண்டபத்தின் வாயிலை உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் அiணத்துள்ளன. அவற்றின் மேலுள்ள தரங்க வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, முகப்பில் யானைத்திருமகள் சிற்பம் இடம்பெற்றுள்ளது. வாயிலின் வலப்புறம் இலலிதாசனத்தில் கரண்டமகுடராய் முன்கைகளில் தந்தம், மோதகம் கொண்டு, பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்திக் காட்சிதரும் இடம்புரிப் பிள்ளையார் சிற்பமும் இடப்புறம் வலக்கையில் தண்டமேந்தி, இடக்கையைத் தொடையில் இருத்திய பழனியாண்டிச் சிற்பமும் உள்ளன. முகமண்டபத்தின் தென்சுவரை ஒட்டி வெளிச்சுற்றில் தென்திசைக் கடவுள் திருமேனி மேடையொன்றில் இருத்தப்பட்டுள்ளது. ![]() வெறுமையாக உள்ள முகமண்டப வடசுவரில் தொடர் பற்ற கல்வெட்டுத் துணுக்குகள் உள்ளன.2 அடுத்துள்ள கரு வறை பாறையில் அகழப்பட்டுள்ளது. 2. 17 மீ. அகலமுள்ள கருவறை முன்சுவரின் நடுவில் திறக்கப்பட்டுள்ள வாயில் 1. 67 மீ. உயரம், 84 செ. மீ. அகலம் பெற்றுள்ளது. மேல், கீழ் நிலைகள் பெற்றுள்ள அதன் பக்கநிலைகளை ஒட்டிச் சுவரில் வளைமுகமான மடிப்பும் அடுத்து இரு நீளப் பட்டைகளும் காட்டப்பட்டுள்ளன. அரைத்தூண்களோ, கோட்டங்களோ அற்ற முன்சுவரின் மேற்பகுதியில் வாயிலுக்கு மேலிருக்குமாறு கருவறைக் கூரை கபோதம் போல இறக்கப்பட்டுள்ளது. வாயிலின் தென்புறம் 64 செ. மீ. அளவிற்கும் வடபுறம் 69 செ. மீ. அளவிற்கும் பரவியுள்ள முன்சுரை வடக்கிலும் தெற்கிலும் முகமண்டபச் சுவர்கள் அiணத்துள்ளன. வட, தென் பாறைச்சுவர்களில் தமிழ்க் கல்வெட்டுகளும் வடபுறப் பாறைச்சுவரில் கூடுதலாகத் தெலுங்குக் கல்வெட்டு ஒன்றும் இடம்பெற்றுள்ளன. 2. 70 மீ. பக்கம் 2 மீ. உயரம் கொண்ட சதுரமான கருவறையின் சுவர்கள் வெறுமையாக உள்ளன. நாற்புறத்தும் கூரையைத் தழுவிய வாஜனம். கருவறைத் தரையில் ஜகதி, உருள்குமுதம், பாதங்களும் அiணவுக் கம்புகளும் பெற்ற கண்டம், பட்டிகை எனும் உறுப்புகள் அமைந்த பாதபந்த அமைப்பிலான 58 செ. மீ. உயர, எண்கோண ஆவுடையாரும் அதன்மீது 55 செ. மீ. உயர வேசர பாணமும் தாய்ப்பாறையில் உருவாகியுள்ளன. கண்டத்தின் வடபுறத்தே காட்டப்பட்டுள்ள மதலை போன்ற எழுச்சி, கோமுகத்திற்குத் தாங்கலாக உள்ளது. 1. ஆய்வு நாள் 14. 3. 2010. உடனிருந்து உதவிய மு. பி. நந்தினி, சிவாச்சாரியார் இரா. வைரவன், இந்தியத் தொல்லியல்துறை மெய்யம் வட்ட உதவியாளர் திரு. இரா. மோகன் இவர்கட்கு உளமார்ந்த நன்றி உரியது. 2. படியெடுக்கப்படாத இக்கல்வெட்டுகளைப் பற்றி நடுவணரசின் கல்வெட்டுத்துறைக்குத் தகவல் தரப்பட்டுள் ளது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |