![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [183 Issues] [1814 Articles] |
Issue No. 69
![]() இதழ் 69 [ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2010 ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். நமக்கு முந்தைய தலைமுறை சாதனையாளர்களை நினைத்துப் பார்க்கும் முக்கியத் தருணம் அந்தச் சாதனையாளரின் நூற்றாண்டு. வாழ்ந்த காலத்தில் பெரும் புகழோடு வாழ்ந்தவரின் கீர்த்தியை அவர் மறைந்த பின் மங்காது வைக்க உதவும் முக்கியத் தருணம் இது. ஆனால், வாழ்ந்த காலத்தில் எத்தனை பெரிய ஆளுமையாக இருந்த போதும், மறைந்த பின்னும் மறக்கப்படாமல் இருக்கும் பேறு சிலருக்குத்தான் கிடைக்கிறது. அவ்வாறு பெயர் நிலைக்கச் செய்வதில், அம் மாமனிதரின் குடும்பத்தினரின் பங்கு மிக முக்கியமானதாக அமைகிறது. கடந்த சில வருடங்களுக்குள், வரலாற்றறிஞர் மா.இராசமாணிக்கனார், இசைக் கலைஞர் ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்ற மாமனிதர்களின் நூற்றாண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விருவரின் குடும்பத்தினரும் எடுத்துக் கொண்ட முயற்சியே இந்தக் கொண்டாட்டங்களுக்கு அடித்தளமாய் அமைந்தது என்று சொல்லவும் தேவையில்லை. தமிழுக்காக வாழ்வை அர்ப்பணித்த மா.போ.சி அவர்களின் நூற்றாண்டில் செய்வதாகச் சொன்ன எதுவும் இன்று வரை நடைபெறாமல் இருப்பது பற்றி சமீபத்தில் ஒரு தினமணி தலையங்கம் அங்கலாய்த்தது. இது போன்ற மறக்கப்பட்ட நிலையே நம் முன்னோடிகள் பலருக்கு வழங்குவதே நம் பண்பாடாகும். இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். இந்த வருடம் மார்ச் 1-ம் தேதி அன்று, புகழின் உச்சிகளைத் தொட்டவரின் நூறாவது பிறந்த நாள். ஒரு சாதாரண குடும்பத்தின் பிறந்து, கலை வாழ்க்கையின் ஈடுபட்டு, "இப்படி ஒரு குரல் இது வரை கேட்டதில்லை", என்று இன்று வரை நினைக்கக் கூடிய வகையில் பாடியவர் பாகவதர். நாடகங்களுக்கு, அவர் அந்தக் காலத்தில் வாங்கிய ரேட்டை, இன்று கூட வாங்க முடியாது என்கின்றனர். அவர் பாடிய 'மன்மத லீலையை வென்றார் உண்டோ', 'அம்பா மனம் கனிந்தருள்' போன்ற பாடல்கள் அமர கீதங்கள். தமிழைச் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதற்கு ஆதரவாய் வருடம் தவறாது கச்சேரி செய்தவர் பாகவதர். அவர் நடித்த 'ஹரிதாஸ்' படம் ஒரே தியேட்டரில் 110 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இந்த சாதனைகளை எல்லாம் மனதில் கொண்டு நம் பண்பாட்டை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன? அதனால்தான், சில தலைமுறைகளின் ஆதர்ச நாயகராக வலம் வந்தவரின் நூற்றாண்டை எந்த ஒரு ஊடகமும் பெரியதாகக் கண்டு கொள்ளவில்லை. அது நிச்சயம் பத்திரிகைகளின் குற்றம் அன்று. அதே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய தமிழகத் துணை முதல்வர், அத்தனை பத்திரிகையின் முக்கியப் பக்கங்களையும் ஆட்கொண்டு அருளியதால் எம்.கே.டி-க்கு இடம் ஒதுக்க முடியவில்லை என்கின்றனர் பத்திரிகைத் துறை அன்பர்கள். இந்தப் பாழாய் போன எம்.கே.டி அன்றுதானா பிறந்து தொலைத்திருக்க வேண்டும். பற்றாக் குறைக்கு, துணை முதல்வர் விட்டு வைத்த இடத்தை நித்யானந்தா பிடித்துக் கொண்டார். நம் பத்திரிகையாளர்களெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள். அவர்களுக்குத் தெரியும் பாகவதர் எவ்வளவு முக்கியமானவர் என்று. ஆனாலும், "பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்", என்று அத்தனை பழியையும் ஆட்சியின் மேல்தானே அவர்கள் போட முடியும். நம் பத்திரிகையாளர்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்கள். அவர்களுக்கு இருக்கும் கடைமையுணர்வும். அர்பணிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. (இல்லாத ஒன்றை எப்படி வர்ணிப்பது என்று சில விஷமிகள் நினைப்பதை பொருட்படுத்த வேண்டாம்.) அவர்கள் என்ன ஆதாயத்தை எண்ணியா போலிச் சாமியார்கள் பற்றி கவர் ஸ்டோரி எழுதுகிறார்கள்? சிறுவர்களும் தொலைகாட்சியில் பார்க்கக்கூடும் என்று தெரிந்தும் கூட, உண்மையை மட்டுமே ஊருக்குச் சொல்ல வேண்டும், என்றே ஒரே எண்ணத்தில், கனத்த இதயத்துடன்தானே சாமியாரின் விடியோவை ஒளிபரப்பினார்கள். இப்படி பல முக்கிய வேலைகள் இருக்கும் போதும், அவர்கள் ஒரு நாளும் பாகவதர் போன்ற ஆளுமையை மறந்துவிடுவதில்லை. தீர விசாரித்தால், "துணை முதல்வருக்குப் பிறந்த நாள் வாழ்த்தை எழுதும் போது, எனது ஐ-பாடில் பாகவதரின் 'பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்' என்ற பாடலை கேட்டபடியே எழுதினேன்", என்று கூட ஒரு பத்திரிகை ஆசிரியர் சொல்லக் கூடும். அப்படிச் சொன்னால் அது உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. தமிழர்களாகிய நாம் பாரபட்சம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள். மகாகவி பாரதியை வறுமையில் வாட விட்ட பின், அவன் வழித் தோன்றல்களை மட்டும் நல்ல நிலையில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை நிச்சயமாய் நம்புபவர்கள். அந்த நியாயத்தின் படி, பாகவதரின் நூற்றாண்டு கண்டு கொள்ளப்படாமல் இருப்பதுதான் சரி. தமிழக அரசின் பட்ஜெட் தொடரின், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பாகவதரின் நூற்றாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதை எண்ணி நாம், பதறத் தேவையில்லை. பல அறிஞர் நிறைந்த ஆட்சியில், நமது பண்பாட்டை எடுத்துக் கூறி, வரலாற்றுப் பிழைகள் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள ஆளில்லாமலா போய் விடுவார்கள்? அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |