![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 64
![]() இதழ் 64 [ அக்டோபர் 15 - நவம்பர் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மிக மிக இனிமையானவள் அவள். முதன் முதலாய் சந்தித்தது கொற்றவை சன்னதியில். அத்தருணத்தில் நான்கு விழிகள் காதலென்னும் கவிதையை எழுதின மனத்தின் தீராத பக்கங்களில்.
அழகானவள் அவள். கரிய நெடுங்கூந்தல் இடையைத் தாண்டும். மை எழுதிய விழிகள் என்னைக் கண்டவுடன் இடைக்குள் ஒளிந்துக் கொள்ளும். அவளைக் காணாத கணங்கள் எல்லாம் என்னை உயிரோடு எரிக்கும். மன்ம் அவளைச் சுற்றியே வாழ்ந்தது. பிரிய மனமில்லைதான். ஆனால், வினையே ஆடவருக்கு உயிர் ஆயிற்றே. பொருள் தேட அறிவு முன்னே இழப்பதும், காதல் நெஞ்சம் அவளின் மைவிழிகளுக்கு கட்டுப்பட்டு பின்னே இழப்பதும் ஒரு மிகப் பெரிய போராட்டமே. காதஹ்லோடும் அறிவோடும் போராடுவதுதான் ஆடவனின் விதி ஆயிற்றே. இதற்கு எனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? அவள் சூடிய பாதிரிப்பூவின் காய்ந்த இதழ்[களை என் இடைக்கச்சையில் மடித்து வைத்துள்ளேன். அவளின் நினைவாக, வேனில் பொழுதுகளில் குளிர்ந்த தென்றலாய் அவளின் ஈரப்பார்வைகளை மனதில் வரித்துக்கொண்டு பிரிகின்றேன். வருகின்ற பின்பனிக் காலத்திற்குள் திரும்பி விடுவேன். இவளைச் சார்ந்தே அமைத்துக்கொண்ட வாழ்க்கை என்ன ஆவது மனதைத் திடப்படுத்திக் கொண்டு இதோ குதிரைமேல் புறப்படுகிறேன், பொருள் தேட. பாலையாழில் அவள் இசைந்த பண்ணை மெல்ல முணுமுணுத்தபடியே, குதிரை முன்னோக்கிப் பாய, மனமோ பின்னோக்கிச் செல்ல, வருகிறேன் பைங்கிளிப் பெண்ணே! (இது ஒரு ஆண்மகனி தவிப்பு. பெருந்த்துன்பத்தையும் மனதிற்குள் சுமந்து கடமையாற்ற வேண்டிய நிலை). அளியன் யானே என்றுரைப்பது இழுக்கல்லவா எனக்கு. பொருள் நாடிச் செல்லும் பாலை தலைவனின் நெஞ்சம்தனை படம் பிடித்துக் காட்டுகிறார் சங்கப்புலவர். பாடல் இதோ: தலைமகன் கூற்று புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என உறுதி தூக்காத் தூங்கி அறிவே சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங் கயிறு போல வீவதுகொல் என் வருந்திய உடம்பே நற்றினை: 284, தேபுரி பழங்கயிற்றினார் (பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.) விளக்கம்:- தலைவன் பொருளை நாடில் பிரிந்து செல்கின்றான். அவன் செல்லுகின்ற வழியில் ட்ஹலைவியின் அழகிய இருண்ட கூந்தலும் மையிட்ட கண்களும் அவன் உள்ளத்தைப் பெரிதும் பிணித்துக் கொள்கின்றன. அவள் பிரிவினைத் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் பொருள் தேடும் முயற்சியைக் கைவிட்டு விடலாமா என்றுகூட எண்ணுகிறான். தலைவனுடைய அறிவோ பொருள் தேடும் முயற்சியை கைவிட்டால் உனக்கு இகழ்ச்சி வருவதோடு பொருளும் கிட்டாது என்றது. நெஞ்சத்திற்கும் அறிவிற்கும் ஏற்பட்ட இந்தப் போராட்டத்தை ஓர் உவமை மூலம் தலைவன் விளக்குகிறான். தேய்ந்து போன பழைய கயிற்றினை இருபெரும் களிறுகள் இரு முனைகளையும் பற்றி இழுப்பது போல என் நெஞ்சமும் அறிவும் என் உடலைப் பற்றி இழுக்கின்றன, என் உடலின் கதி என்னாகுமோ என்று தலைவன் புலம்புகிறான். காதல் நெஞ்சத்திற்கும், அறிவிற்கும் இடையே நடந்த போராட்டமே இக்கவிதையின் பாடுபொருளாக அமைந்துள்ளது. சங்கப் புலவர் கையாண்ட உவமையால் அவருக்கு “தேபுரி பழங்கயிற்றினார்” என்ற சிறப்புப் பெயர் இயல்பாய் அமைந்துவிட்டது. மனதின் சிக்கலான போக்குகளை இத்துணை சிறப்பான உவமைக்கொண்டு படம் பிடிக்கிறார் புலவர் பெருமான். சங்கப் புலவர்களின் உவமைகளைப் படிக்கப்படிக்க தமிழின் சுவை கண்டு பெரும் வியப்பு ஏற்படுகிறது. தமிழ் அமுதின் சுவைக்கண்டார் அமரர் சிறப்புக்கொண்டார் என்பது சரிதானே? சொல் விளக்கம்: ஈரிதழ் - குளிர்ச்சி பொருந்திய இமைகள் செல்லல் - துன்பம் எவ்வம் - இடையூறு எய்யாமை - அறியாமை இளிவு - இகழ்ச்சிthis is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |