![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 63
![]() இதழ் 63 [ செப்டம்பர் 15 - அக்டோபர் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
இடம் : டோக்கியோ நாள் : 01 - செப்டம்பர் - 2009 அன்புள்ள திரு. வேலாயுதம் அவர்களுக்கு, வணக்கம். இந்தக் கழுகுமலைப் பயணத்தில் தாங்களும் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்த்து, தங்களின் சொந்த அலுவல் காரணமாகக் கலந்துகொள்ள இயலாமல் போனதற்காக, பயணத்தின் கடைசிநாள் நாங்கள் கண்டு வியந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் மேற்குக் கோபுரம் பற்றிய விவரங்கள் இக்கடிதம் வாயிலாகத் தங்களை வந்தடைகின்றன. டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலை மதுரையில் நாங்கள் தங்கியிருந்த விடுதியைவிட்டு நீங்கி, மீனாட்சியம்மன் கோயிலை அடைந்தோம். நாங்கள் அங்குச் சென்று சேரும் முன்னரே, அங்கு எங்களுக்காகக் காத்திருக்கும் இரண்டு நண்பர்களைப் பற்றி டாக்டர் அறிமுகக்குறிப்பு கொடுத்தார். இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிபவர் ஒருவர். புலவர் பட்டம் பெற்றவர். புத்திக்கூர்மையுடன் கூடிய திறமைசாலி விஜயரகுநாதன் என்ற பெயருடைய அந்நண்பர். இன்னொருவர், தமிழக அரசின் 'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்தின்கீழ் மதுரையில் துவங்கப்பட்ட பயிற்சிக் கல்லூரியின் முதல்வர். முனைவர். குமரேசன் என்ற பெயருடைய இவர் தேவாரப் பாடல்களில் முனைவர் பட்டம் பெற்றவர். இருவருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். நாங்கள் கோயிலை அடைந்ததும் டாக்டர் அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் முதல்முறை சந்திக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், நெடுநாட்கள் பழகிய நண்பர்கள் மீண்டும் சந்திப்பது போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. கடைவீதியிலிருந்து கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்த எங்களை, திடீரென்று ஒரு சாமி படங்கள் விற்கும் ஒரு கடைக்குள் நுழையச் சொன்னார்கள் இருவரும். நாங்களும் எதற்காகவென்றே புரியாமல் உள்ளே நுழைந்து, தென்பட்ட மாடிப்படிகளின்மீது ஏறினோம். ஏறிய பிறகுதான் தெரிந்தது, மேற்குக் கோபுரத்தின் இரண்டாம் தளத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்று. ஆனால் உள்ளமைப்பைக் கண்டால், ஏதோ பல காலமாகப் பயன்படுத்தாமல் விட்டிருந்த ஓர் அரண்மனையின் ஏதோ ஓர் அறையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மரத்தாலான தூண்களில் செதுக்கப்பட்டிருந்த விலங்குச் சிற்பங்கள், பின்னர் மேலே சென்றபோது சுவர்களைக் குறுக்கக் கையாண்டிருந்த உத்தி போன்றவற்றைக் கீழேயுள்ள படங்களில் காட்டியிருக்கிறேன். வழக்கம்போலவே, 154 அடி உயரக் கோபுரத்தின் உச்சியில் ஏறியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. தஞ்சை இராஜராஜீசுவரத்தின் இராஜராஜன் திருவாயிலின்மீது ஏறியபோது சோழர் கட்டடக்கலை மீது ஏற்பட்ட பிரமிப்பு இங்கும் ஏற்பட்டது. பாண்டியர்களும் கட்டடக்கலையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர்கள்தாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() பிறகு கீழே இறங்கி வந்து, தரிசனம் முடித்துக்கொண்டு திருச்சியை நோக்கித் திரும்பினோம். வரும் வழியில், பிள்ளையார்பட்டி சென்று கொண்டிருந்த எங்கள் பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜ் அவர்களை விராலிமலை அருகில் சந்தித்தோம். எங்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே, மதுரை செல்லும் சாலை வழியாக வந்தார். திருச்சியை வந்தடைந்ததும், சுமிதா அவர்களின் இல்லத்தில் அறுசுவை உணவு தயாராகக் காத்திருந்தது. சுமிதா - மூர்த்தி குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பில் உளம் பூரித்து விடைபெற்று டாக்டரின் மருத்துவமனையை அடைந்தோம். அங்குச் சிறிதுநேரம் பயண நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தபோதுதான், 'பயணம் நன்றாக இருந்ததா?' என்று கேட்டவாறே நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். நீங்கள் உடலளவில் இப்பயணத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும், மனம் எங்களைச் சுற்றித்தான் இருந்திருக்கும் என்று நாங்கள் ஊகித்திருந்ததை உறுதி செய்தீர்கள். இத்துடன் கழுகுமலைப் பயணத்தின் கடிதங்கள் நிறைவு பெறுகின்றன. சிற்சில விஷயங்கள் பல மாதங்கள் நினைவில் இருத்திவைத்து எழுதியிருப்பதால், சற்று முரண்பாடாகத் தெரியலாம். பொறுத்தருள வேண்டுகிறேன். மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம். அன்புடன் கமல் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |