![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 52
![]() இதழ் 52 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நெடுங்காலம் வரை பயண ஊர்திகளில் ஒன்றாகச் சிவிகை விளங்கியது. அரச குலப் பெண்டிருக்கு அதுவே முதன்மை ஊர்தி. திருமலை நாயக்கர் மதுரையிலிருந்து சிராப்பள்ளிக்குச் சிவிகையிலேயே வந்ததாகச் செப்பேடு ஒன்று கூறுகிறது. இப்போதும்கூடத் திருக்கோயில்களில் சிவிகை உலாவில் செப்புத் திருமேனிகள் வருவதுண்டு. இந்தச் சிவிகைகள் அக்காலத்தே எப்படி இருந்தன? அவற்றில் ஊர்ந்தாரும் அவற்றைப் பொறுத்தாரும் எப்படியிருந்தனர்? ஊர்வதும் பொறுப்பதும் எப்படி நடைபெற்றன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையிறுக்குமாறு போல இரண்டு சிற்பக் காட்சிகளை நாகபட்டின மாவட்டம்கீழ்வேளூர்க் கேடிலியப்பர் திருக்கோயில் இரண்டாம் சுற்றுச் சுவரில் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்தச் சுற்றின் தெற்கு, மேற்குச் சுவர்களில் தொடரான மராத்தியர் காலச் சிற்பங்களைக் காணமுடிகிறது. பல பயனுள்ள வரலாற்றுத் தகவல்களைத் தரக்கூடிய தொகுதிகள் இங்குப் பலவாய் இருந்தபோதும் பாலுணர்வுச் சிற்பங்களும் பரவலாக இருப்பதால் இத்திருச்சுற்று கோயிலார் பாதுகாப்பில் உள்ளது. இந்தச் சிற்பத் தொடரில் சிவிகைச் சிற்பங்கள் இரண்டு உள்ளன. இரண்டுமே சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பெண் ஒருவர் பயணம் செய்ய, மற்றொன்றில் ஆடவர் சாய்ந்துள்ளார். இரண்டு சிவிகைகளுமே இருக்கைப்பகுதியின் கீழ்முனைகளில் தாங்கல்கள் பெற்றுள்ளன. வளைந்து இறங்கும் சிவிகையின் மேற்பகுதியை ஒட்டி நீளும் தண்டுகளை முன்னால் ஒருவரும் பின்னால் ஒருவருமாய் இரண்டு கைகளிலும் பிடித்துத் தங்கள் தோள்களில் தாங்கி நடக்கின்றனர். சிவிகையின் கூரைக்கு மேலாக இரண்டாம் அடுக்காக மற்றொரு கூரை காட்டப்பட்டுள்ளது. ![]() ![]() இரண்டு சிவிகைகளிலுமே மெத்தைகள் விரிக்கப்பட்டுள்ளன. தலை சாய்க்க இரண்டு உருளைத் திண்டுகள். பெண் பயணிக்கு மட்டும் கை சாய்க்க அடுத்த நிலையில் ஓர் உருளைத் திண்டு. பயணிகள் ஒருக்களித்துச் சாய்ந்துள்ளனர். பெண் பயணியின் வலக்கை மேலே உயர, இடக்கை திண்டின் மீதுள்ளது. மடித்த இடக்கால் மேல் வலப்பாதம் இருக்குமாறு வலக்காலும் மடிந்துள்ளது. சிவிகையின் உள் வளைவு முழுவதும் காணப்படும் கிளிஞ்சல் அணித் தோரணத்திலிருந்து குஞ்சலம் போல் ஒன்று தொங்குகிறது. பேருந்துகளில் தொங்கும் வார்ப்பட்டையைப் போல சிவிகைப் பயணி பிடித்துக்கொள்ள வாய்ப்பாகத் தொங்கும் இந்தக் குஞ்சலத்தைப் பிடிக்க முயற்சிப்பவர் போலவே பெண்ணின் வலக்கை உயர்ந்துள்ளது. ஆண் பயணி இந்தத் தொங்கலை இடக்கையால் பற்றியுள்ளார். வலக்கை இடுப்பருகே உள்ளது. அவர் சிவிகையில் கிளிஞ்சல் தோரணம் இல்லை. கை சாய்க்கத் திண்டுமில்லை. குண்டலங்கள் அணிந்துள்ள ஆடவரின் வலக்கால் முழங்கால் அளவில் மடிந்து கிடக்க, இடக்கால் பார்வைக்குத் தென்படவில்லை. இவர்தம் சிவிகைகளைக் காவுநர் (சுமப்பவர்கள்) இருவரும் மரமேறுவார் போல இடையாடை கொண்டு, பின்கொண்டையிட்டுத் தோள், கைவளைகள், தண்டை அணிந்துள்ளனர். இரண்டு சிவிகைப் பயணிகளும் எங்கு நோக்கிப் பயணிக்கின்றனரோ நாம் அறியோம்! ஆனால், அந்தப் பயணம் வரலாற்றுத் தடங்களை வளர்விப்பதுதான் கலையின் சிறப்பும் அதன் நிலைப்பும். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |