![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 18
![]() இதழ் 18 [ டிசம்பர் 16, 2005 - ஜனவரி 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
இந்நிலையில், இம்மரபில் வந்த அடுத்த மன்னராக அறியப்படுபவர் கண்டன் அமுதன். இவர் பெயரின் முதற்பகுதி மிகத்தெளிவாக, இவர் குமரன் கண்டனின் மகன் என்பதைச் சுட்டுகிறது. குமரன் கண்டன் ஆட்சிப் பொறுப்பைத் துறந்தபோது கண்டன் அமுதன் சிறுவனாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே குமரன்கண்டனின் இளவலான குமரன்மறவன் அரியணையேறினார். கண்டன் அமுதன் ஆட்சிப் பொறுப்பேற்கும் வயதடைந்ததும் குமரன் மறவன் தன் அண்ணன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு அரச பதவியைத் துறந்திருக்கவேண்டும்.
கண்டன் அமுதனைக் குறிக்கும் கல்வெட்டுகள் ஆலந்துறையார் கோயிலில் ஒன்றும், திருவையாற்றில் ஒன்றுமாய்க் கிடைத்துள்ளன. இவற்றுள் ஆலந்துறையார் கோயில் கருவறையின் மேற்குப்புறச் சுவரிலுள்ள கல்வெட்டு மதுரை கொண்ட பரகேசரியான முதலாம் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப் பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டினால் முதற்பராந்தகனுக்கும் பாண்டியன் ராசசிம்மனுக்கும் இடையில் நடந்த வெள்ளூர்ப் போரில் பழுவேட்டரையன் கண்டன் அமுதன் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய செய்தி கிடைக்கிறது59. வெள்ளூர்ப் போரும் விசித்திர முடிவுகளும் கி.பி. 919இல், அதாவது முதலாம் பராஆந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் நடந்த வெள்ளூர்ப் போரில் பாண்டியனும், அவனுக்குத் துணைவந்த ஈழப்படைகளும் தோற்றோடினர். கண்டன் அமுதனின் படைத்தலைமையின் கீழ், சோழப்படை பெருவெற்றிகண்டது. இந்தப் போரில் கண்டன் அமுதன் இறந்துவிட்டதாகத் திரு. சுந்தரேசனாரும்60, திரு. தியாகராசனும்61 கூறக் கல்வெட்டறிக்கை பாண்டியனும், ஈழதரையனும் இறந்ததாகக் கூறுகிறது62. இந்த விசித்திர முடிவுகளுக்குக் காரணங்களேதும் கூறப்படவில்லை. திரு. தியாகராசன் தம் தினமலர்க் கட்டுரையில் சில செய்திகளைச் சொல்கிறார். 1) "கீழப்பழுவூர்க் கல்வெட்டைத் தேடியெடுத்த இந்தியக் கல்வெட்டுத் துறையினர் வெள்ளூர்ப் போரில் பாண்டிய மன்னன் இறந்துவிட்டதாகத் தவறாக ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வெட்டில் பாண்டியன் இறந்ததாகச் செய்தி ஏதுமில்லை." 2) "இப்போரில் வீரத்துடன் போரிட்டுச் சோழனுக்கு வெற்றி தேடித்தந்த கண்டன் அமுதனார் இறந்து விட்டதாகத் தெரிகிறது. இதனைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலின் கருவறை மேற்குச் சுவரிலுள்ள கல்வெட்டு கூறுகிறது." 3) "இவ்வாண்டுக்குப் பிறகு பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு) கல்வெட்டுகளில் கண்டன் அமுதனார் யாண்டும் குறிப்பிடப்படவில்லை என்பதும் முக்கியமான ஒன்றாகும்." 4) திரு. தியாகராசன் பழுவூரில், தாம் கண்டுபிடித்த கல்வெட்டொன்று குறிக்கும் ஸ்ரீகண்டஈசுவரம் என்னும் பள்லிப்படைக்கோயில் கி.பி. 919இல் இறந்த கண்டன் அமுதனுக்கே எழுப்பப்பட்டதாகக் கூறிக் கண்டன் அமுதன் கதையை அத்துடன் முடிக்கிறார். 63. இதே ஆசிரியர் தினமலர்க் கட்டுரை வெளியான மூன்று மாதங்கள் கழித்து வெளியிட்ட இன்னொரு கட்டுரையில், இதே பள்ளிப்படை, குமரன் கண்டனுக்கு எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கிறார்64. 'போரில் பாண்டியன் இறந்ததாகக் கல்வெட்டறிக்கை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போரில் இறந்தவன் கண்டன் அமுதன். இதைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் கல்வெட்டு கூறுகிறது.' என்ற தியாகராசனின் முதலிரண்டு செய்திகளை முதலில் பார்ப்போம். போரில் பாண்டியன் இறந்ததாகக் கல்வெட்டறிக்கை தவறாகக் குறிப்பிட்டுள்ளது என்று தியாகராசன் சொல்வது உண்மையே. 126ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையிலும், கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றிலும் வெள்ளூர்ப் போரில் பாண்டியன் இறந்ததாகவே செய்தி தரப்பட்டுள்ளது. இச்செய்தி முற்றிலும் தவறாகும், பாண்டியன் போரில் இறக்கவேயில்லை. இதைக் கண்டன் அமுதன் கல்வெட்டும் குறிப்பிடவேயில்லை. இந்த கண்டன் அமுதன் கல்வெட்டைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம். தொடரும்...this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |