![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 143
![]() இதழ் 143 [ அக்டோபர் 2018 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிராப்பள்ளி கல்லணைச் சாலையில் 10 கி. மீ. தொலைவில் பனையபுரத்திற்கு வடக்கிலுள்ளது சம்பந்தர் பாடல் பெற்ற திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயில். சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு எனும் நூலுக்காக அங்கு ஆய்வு மேற்கொண்டபோது பல அரிய செய்திகளும் புதிய கல்வெட்டுகளும் ஏற்கனவே படியெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளின் விட்டுப்போன தொடர்ச்சிகளும் வெளிச்சத்திற்கு வந்தன. முற்சோழர் கட்டுமானமாக விளங்கும் இக்கோயிலின் விமான, முகமண்டபக் கோட்டங்களைத் தலைப்பிட்டுள்ள மகரதோரணங்கள் ஐந்தும் செறிவான சிற்றுருவச் சிற்பங்களைக் கீழ்வளைவில் கொண்டுள்ளன. அவற்றுள் முகமண்டபத் தெற்குக் கோட்ட மகரதோரணச் சிற்பம், அதன் மாறுபட்ட காட்சிப்படுத்தலால் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்த சுண்ணப்பூச்சால் சிற்பம் சிதைந்திருந்தபோதும் உழைப்பின் பயனாய் உருவங்கள் வெளிப்பட்டன.
உணர்வுகளின் உச்சத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள இக்காட்சியில், தோரணக்குழிவில் இடப்புறம் சடைமகுடர்களாய் இரண்டு ஆடவர்கள். தலையைச் சற்றே நிமிர்த்தியுள்ள முதலாமவரின் இடையில் சிற்றாடை. இடக்கையைத் தொடையில் இருத்தியுள்ள அவரது வலக்கை, சிற்றாடையும் முடியற்ற தலையுமாய்த் தம்மைத் தழுவியிருக்கும் இளையவரை அணைத்துள்ளது. முதலாமவரை அடுத்துள்ள ஆடவர் இடக்கையைத் தொடையில் வைத்தவாறு நிற்கிறார். குழிவில் வலப்புறம் சுடர்முடியுடன் பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், இடைக்கட்டுடனான சிற்றாடையணிந்து வலக்கையில் முத்தலைஈட்டியும் இடக்கையில் தெளிவற்ற ஒரு பொருளும் (சிதைந்த தலை அல்லது பாசமாகலாம்) கொண்டு சினத்துடன் ஓடிவருபவர் எதிரிலுள்ளவர்களைத் தாக்கும் முனைப்பிலுள்ளார். இலை நுனிகள் தெரியாதவாறு அவரது முத்தலைஈட்டியில் குத்தப்பட்டுள்ள பொருளை (? சதைத்தொகுதி) அடையாளப்படுத்த முடியவில்லை. குழிவில் கீழ்ப்பகுதியில் விழுங்கும் முனைப்பில் வாய்பிளந்த முத்தலைப் பாம்பும் அதனிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் தலை திருப்பித் தாவும் மானும் காட்டப்பட்டுள்ளன. ![]() வரலாறு டாட் காம் 117ஆம் இதழில், பத்தர் மன்னிய திருப்பாற்றுறை என்ற தலைப்பில் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ள திரு. கி. ஸ்ரீதரன், இச்சிற்பக்காட்சியை இயமனை அழித்தமூர்த்தியாகக் காட்டியுள்ளார். இதே கோயிலில் விமானத் தாங்குதளக் கண்டபாதச் சிற்பமாக இயமனை அழித்தமூர்த்தி பதிவாகியுள்ளார். அச்சிற்பத்தில் இலிங்கத்தை அணைத்த மார்க்கண்டேயரும் அவருக்கு அருள வெளிப்பட்ட சிவபெருமானும் கீழே விழுந்து கிடக்கும் இயமனும் மிகத்தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மகரதோரணச் சிற்பத்தில் இது போன்ற படப்பிடிப்பு இல்லை. அதில் காட்டப்பெற்றுள்ள இரண்டு ஆடவர்களுமே இரண்டு கைகளுடன் உள்ளனர். அவர்களில் எவரையும் சிவபெருமானாகக் கொள்ளும் வாய்ப்பில்லை. தோரணச் சிற்பத்தில் சினத்துடன் ஓடிவருபவரை ஸ்ரீதரன் இயமனாகக் கொண்டதில் பிழையில்லை என்றாலும் அவர் இயமனில்லை. இராமாயணத்தில் இராம, இலட்சுமணர் காட்டில் விராதனை எதிர்கொள்ளும் நிகழ்வை வண்ணிக்கும் வால்மீகி, அவன் இயமனைப் போல் தோற்றமளித்ததாகவே சுட்டுவார். விராதனின் கையிலிருந்த சூலத்தில் விலங்குகளின் உயிரற்ற உடல்கள் கோர்க்கப்பட்டிருந்ததாகவும் கூறுவார். சீதையைக் கவரும் விராதனை எதிர்க்கும் இராமரும் இலட்சுமணரும் பெரும் போராட்டத்திற்குப் பின் அவன் தோள்களைத் துண்டித்து, நிலத்தில் அவனைப் புதைத்து அழிப்பர். இராமனின் திருவடிக் கீழ் நசுங்கிய நிலையில் பேசும் விராதன், தாம் ஒரு கந்தர்வர் என்றும் தம் பெயர் தும்புரு என்றும் தெரிவித்து, குபேரனின் சாபத்தால் தாம் அரக்கனாய் அலைய நேரிட்டதாகவும் இராமரால் தம் சாபம் விலகியதாகவும் கூறி, இராம, இலட்சுமணரை வணங்கி வானுலகு செல்வார். இந்நிகழ்வு அமையும் காட்டில் கொடிய விலங்கினங்களும் மான்களும் இருந்ததென்பார் வால்மீகி. இக்கதையின் பின்னணியில் பாலைத்துறை மகரதோரணச் சிற்பத்தை நோக்கின், சினப் பார்வையும் முத்தலைஈட்டியுமாய் ஓடிவருபவரை விராதனாக உறுதிப்படுத்தமுடியும். எதிரில் நிற்கும் ஆடவர் இருவரும் விராதனை எதிர்கொண்ட இராமர், இலட்சுமணர். இராமரைத் தழுவியுள்ளவர் விராதனிலிருந்து வெளிப்பட்ட கந்தர்வர் தும்புருவாகலாம். நிகழ்ச்சி நடக்கும் காட்டின் வன்தன்மை புலப்படுத்தச் சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் மானை விழுங்க முயற்சிக்கும் பாம்பு காட்டப்பட்டுள்ளது. சிராப்பள்ளி மாவட்டம் துடையூர் விஷமங்களேசுவரர் பாதச்சிற்பத்தின் விராதக் காட்சியிலும் மான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. விராதவதம், பாதச்சிற்பமாகவும் மகரதோரணச் சிற்பமாகவும் சிராப்பள்ளி மாவட்டத்தின் பல கோயில்களில் இடம்பெற்றுள்ளது. தவத்துறை சப்தரிஷீசுவரர் கோயில் மகரதோரண விராதன் பாலைத்துறை விராதனைப் பெரிதும் ஒத்துள்ளார். அவரது சூலத்தில் இராமாயணம் குறிக்குமாறே யானைத்தலை கோர்க்கப்பட்டுள்ளது. எதிரில் இராமர், இலட்சுமணர் நிற்கின்றனர். திருமங்கலம் சாமவேதீசுவரர் பாதச்சிற்பத்தில் விராதனின் தோள்களை இராம, இலட்சுமணர் துண்டிக்கும் காட்சியைக் காணலாம். துடையூர் விஷமங்களேசுவரர் பாதச் சிற்பம் விராதன் ஓடிவருவதைக் காட்டுகிறது. ![]() பாலைத்துறைச் சிற்பத்தின் கூடுதல் சிறப்பாகத் தும்புரு இராமனை அன்புடன் தழுவி, நன்றி தெரிவித்து விடைபெறும் காட்சியைக் குறிக்கலாம். இலக்கியப் பின்னணிகளை நன்கு உள்வாங்கிய நிலையிலேயே தமிழ்நாட்டுச் சிற்பிகள் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள் என்பதற்குப் பாலைத்துறை விராதவதப் படைப்பு மற்றுமோர் எடுத்துக்காட்டாக அமைகிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |