![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 123
![]() இதழ் 123 [ செப் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பல்லவர் பாதையில்
இலக்ஷிதாயதனம்
. "ஏத த நிஷ்டக மத்ரும மலோ ஹ மசு தம் விசித்ர சித்தேந நிர்ம்மாபித ந்ருபேண ப்ரஹ்ம ச் வர விஷ்ணு லக்ஷிதாயதநம்" இந்த நான்கு வரி சமஸ்கிருதக் கல்வெட்டு விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டிலுள்ள குகைக்கோயிலின் முகப்புத்தூண் ஒன்றில் காணப்படுகிறது. இதன் மூலம் மகேந்திர பல்லவர், "சிதையும் பொருட்களான செங்கல், மரம், உலோகம், சுதை போன்ற வழக்கமான கட்டுமானப் பொருட்களின்றி பிரமன், சிவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளுக்கு விசித்திரசித்தன் என்னும் அரசரால் எடுக்கப்பட்ட லக்ஷிதம் என்னும் அயதனம் (கோயில்)" என்று பிரகடனம் செய்கிறார். ![]() குடைவரை முகப்பு இக்கல்வெட்டு கூறும் செய்தியிலிருந்து முந்தைய நாட்களில் கோயில்களனைத்தும் செங்கற்தளிகளாக இருந்தமையும், காலப்போக்கிலும், இயற்கையின் சீற்றத்தாலும் அழிந்துபட்ட செய்தியையும், பல்லவர்களின் குகைக்கோயில் கலைப்பாணி துவக்கத்தின் காலகட்டத்தையும் அறிந்து கொள்ளலாம். அன்னாளில் இறந்தவர்களைப் புதைக்கப் பயன்பட்டதால் அமங்கலமாகக் கருதப்பட்ட கருங்கல்லினைக் குடைவித்து கோயில் செய்வித்த புரட்சியாளராக மகேந்திரரைக் கொள்ளலாம். குடைவரை அமைவிடம்: லக்ஷிதாயதனம் என்றழைக்கப்படும் இக்குடைவரை, விழுப்புரம் செஞ்சி சாலையில் விழுப்புரத்திலிருந்து கஞ்சனூர், நேமூர் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் பயணத்திற்குப் பின் கிழக்கு நோக்கிப் பிரியும் கப்பிச் சாலயிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வரிசையாய் அமைந்த குன்றுகளூடே வடக்கு திசை நோக்கிய குன்றொன்றில் இக்குடைவரை அகழப்பட்டுள்ளது. குடைவரையின் முன்னுள்ள பகுதியை இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் கருங்கற்களால் தரையமைத்துள்ளனர். முகப்பு: குடைவரை அமைந்துள்ள பாறையின் தரைப் பகுதியிலிருந்து சுமார் இரண்டு மீட்டர் உயரத்தில் வடக்கு நோக்கி குடைவரை அகழப்பட்டுள்ளது. குடவரையை அடைய உதவும் படிக்கட்டுக்கள் பின்னாளில் அமைக்கப்பட்டதாகும். அகலமான முன் தரையினை அடுத்து முகப்புத்தரையிலிருந்து இரண்டு முழுத்தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் எழுகின்றன. சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலுள்ள இத்தூண்களின் கீழ்ச்சதுரங்கள் மேற்சதுரங்களை விட உயரமாக அமைந்துள்ளன. மேற்கு அரைத்தூணின் மேற்சதுர வடமுகத்தில் முதலாம் மகேந்திரரின் ஏதத் அனிஷ்டகக் கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மேற்சதுரங்களின் மேலமைந்துள்ள போதிகைகள் வளைந்து மேல் திரும்பி உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. வாஜனம் முன்னிழுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டாத கபோதமாக்கப்பட்டுள்ளது. அரைதூண்களையொட்டி இருபுறத்தும் கோட்டங்கள் அகழப்பட்டுள்ளன. இக்கோட்டங்களை நிறைத்தபடி இருபுறத்திலும் வாயிற்காவலர்கள் உள்ளனர். இருவரும் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் அணிந்துள்ளனர். முகமண்டபம்: முகப்பினையடுத்த மண்டபம் மற்றொரு வரிசைத் தூண்களாலும் முகமண்டபம், அர்த்தமண்டபம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் தரையும், கூரையும் நன்கு சமன் செய்யப்பட்டுள்ளது. முகபண்டபத்தின் நாற்புறமும் உத்திரத்தியடுத்து வாஜனம் காட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம்: அர்த்தமண்டபாத்தின் தரையின் முன்பகுதியில் முகப்புத் தூண்களுக்கு நேர் வரிசையில் இரண்டு முழுத்தூண்களும், இரண்டு அரைத் தூண்களும் அமைந்துள்ளன. முழுத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்றமைய அரைதூண்கள் நான்முகமாய் உள்ளன. அர்த்தமண்டபத் தூண்களின் போதிகைகள் வளைந்த கைகளால் உத்திரம் தாங்குகின்றன. இத்தூண்களின் மேற்சதுரத்திற்கும், போதிகைகளுக்கும் இடையே பலகை காட்டப்பட்டுள்ளது. அர்த்தமண்டபப் பின்சுவரில் நான்கு அரைத்தூண்கள் வெட்டப்பட்டுள்ளன. கருவறைகள்: அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப் பகுதிகளில் மூன்று கருவறைகள் அகழப்பட்டுள்ளன. கருவறைகளின் பின்சுவரை ஒட்டிய தரைப்பகுதிகளின் நடுவில் வெட்டப்பட்டுள்ள குழிகள் தெய்வச்சிலைகளைப் பொருத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். தமிழ் நாட்டில் குடைவரைக் கோயில்களுக்கு உருவாக்கம் தந்த மகேந்திர பல்லவரால் செய்விக்கப்பட்ட குடைவரைகள் வரிசை இப்பகுதியுடன் நிறைவடைகிறது. ******* நன்றி: மகேந்திரர் குடைவரைகள், BY மு. நளினி, டாக்டர் இரா. கலைக்கோவன். அலமு பதிப்பகம், சென்னை-14. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |