![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 115
![]() இதழ் 115 [ ஜனவரி 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
முசிறி தொட்டியம் சாலையிலுள்ள சீனிவாசநல்லூர் கலைச்சிறப்புடைய சோழர் காலக் கற்றளி ஒன்றைக் கொண்டுள்ளது. குரக்குத்துறைப் பெருமானடிகள் எனக் கல்வெட்டில் வழங்கப்படும் இக்கோயில் இறைவன் இன்று குரங்கநாதராக அறியப்படுகிறார். வளமான சிற்பங்களும் சிறப்பான கட்டமைப்பும் பொருளார்ந்த கல்வெட்டுகளும் கொண்டுள்ள இத்தளியின் வரலாற்றைப் பார்த்த போது இராஜகேசரியின் இரண்டாம் ஆட்சியாண்டில் (தெ. க. தொ. 13:3) நிகழ்ந்த பதிவொன்று கருத்தைக் கவர்ந்தது. ![]() அரையர் ஆச்சாரகாந்த பிரம்மாதிராஜர் எனும் அரசு அலுவலர் தளி இருந்த மகேந்திரமங்கலத்தின் நிருவாகத்தை மேற்கொண்டிருந்த மூலபடையாருக்குக் கோயிலின் செயற்பாடுகளுக்கேற்ப இறைவனின் இறையிலித் தேவதான நிலங்களை ஒதுக்கி ஒருங்கிணைத்து ஆவணப்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதற்கிணங்கிய மூலபருடையார் அப்பணிக்கென வாரியம் அமைத்தனர். வாரிய உறுப்பினர்களும் ஊரவைக் கணக்கரும் இணைந்து அரையர் சொன்னவாறு போல இறைவழிபாடு, அது போழ்து நிகழும் இசைப்பெருக்கு, படையல்கள், விளக்கேற்றல் ஆகிய கோயில் பணிகளுக்கு உகந்த செலவுகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப இறைவனின் தேவதான இறையிலி நிலங்களை முறைப்படுத்திக் கோயிலில் கல்வெட்டாக்கினர். 1. மூன்று பொழுதும் இறைவனுக்குத் திருவமுது அளிக்க நாளும் ஒரு குறுணி நான்கு நாழி அரிசி பெற வாய்ப்பாக ஒதுக்கப்பட்ட நிலத் துண்டுகள்: ஆலஞ்செய் நான்கு மா, எல்லை நிலமாக ஒரு மா, மாக்காணி அளவு நிலங்கள், களாஞ்செய் ஒன்றரை மா. 2. நெய்யமுது நாளும் ஓர் உழக்கு ஓர் ஆழாக்கிற்காக நாவற் செய் இரண்டு மா, செம்புணி வாரம் என்ற பெயரில் அமைந்த நிலத்துண்டு இரண்டு மா. 3. திருவாராதனை செய்யும் அந்தணர் ஒருவருக்கு கணத்தார் பெருஞ்செய்யில் நான்கரைமா முந்திரிகை அளவு நிலம். 4. சந்தி விளக்குகள் பதிbனட்டு ஏற்ற நாளும் எண்ணெய் ஓர் உழக்கு ஓர் ஆழாக்கினுக்குக் கிழக்கில் அமைந்த நிலத்துண்டு மூன்று மா ஒன்றரைக் காணி முந்திரிகை அளவினது. 5. இருவர் (மாண்) உதவியுடன் அருச்சனை செய்யச் செம்புணி வாரம் நான்கு மா, மருதஞ் செய் இரண்டு மா, நிகளிகனொட்டைக் கூறு என்ற பெயரில் அமைந்த நிலத்துண்டின் தெற்குப் பகுதியில் ஒரு மா அளவு ஒதுக்கப்பட்டன. 6. திருப்பலி எழுந்தருளும்போது பிடி விளக்கினுக்கு இடும் எண்ணெய் உழக்கினுக்கு நிகளிகனொட்டைக் கூறில் வடக்கடைய ஒரு மா. 7. மத்தளம் 3, கரடிகை 1, படகம் 1, செகண்டிகை 1, தாளம் ஓரணை கொண்டு இசை கூட்டும் உவச்சர்கள் எழுவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம்: கொடுங்கோடு இட்டேரிக்கு மேற்கு, ஆற்றுக்குலைக்கு வடக்கு, வாய்த்தலைக்குக் கிழக்கு, பெருவாய்க்காலுக்குத் தெற்கு என அமைந்த நடுவுபட்ட நிலம், கிழிட்டேரி ஒன்றரை மா, தென்னூர் மூன்று மா. 8. காளம் 2 ஊதக் குரங்கன் வசக்கல் கால் வேலி, அரசங்கால் இரண்டரை மா. கோயில் பணிகளும் அப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களும் சுட்டும் இந்த அரிய கல்வெட்டு சில முதன்மையான செய்திகளை முன்வைக்கிறது. கோயில் நிலங்களைக் கோயில் பணிகளுக்குப் பங்கீடு செய்ய அக்கோயில் அமைந்துள்ள ஊரவைக்கு அரசு அலுவலரின் ஆணை தேவைப்பட்டுள்ளது. ஊரவை தானே அம்முயற்சியை மேற்கொள்ளாது, அதற்கென சில உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வாரியத்தை அமைத்தது. அவ்வாரியம் ஊர்க்கணக்கர் உதவியுடன் இருக்கும் நிலங்களின் பரப்பை அறிந்து கோயிலாரிடம் தேவைகளைக் கேட்டுத் தெளிந்து இரண்டையும் ஒப்பிட்டு உரிய பணிகளுக்கு ஏற்ற அளவு நிலங்களை ஒதுக்கி முறை செய்து ஆவணப்படுத்தியிருக்கும் பாங்கு சோழர் கால நிருவாகத் திறனுக்குச் சிறந்த காட்டாய்த் திகழ்கிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |