![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 113
![]() இதழ் 113 [ நவம்பர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு வகையில் வரலாற்றுக் களஞ்சியமாகவே விளங்குகின்றன. அவற்றுள் சில அரச ஆணையாகவும் சில அரங்கரின் ஆணையாகவும் உள்ளன. அரச ஆணைகள் தமிழ்நாட்டின் பல கோயில்களில் காணக் கிடைத்தாலும், இறைவன் ஆணையிடுமாறு அமைந்த கல்வெட்டுகள் மிகச் சில கோயில்களிலேயே பதிவாகியுள்ளன. அவற்றுள் மிகுதியான அளவில் இறை ஆணைகளைப் பெற்றிருக்கும் கோயிலாகத் திருவரங்கத்தைக் கொள்ளலாம். ![]() அரங்கரின் திருமுகமாக அமைந்திருக்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றை ஆய்வின்போது எதிர்கொண்டோம். கோயிலை நிருவகிக்கத் தகுதியான குழு ஒன்றை அமைக்கும் அரங்கர் அக்குழுவினர்தம் பொறுப்பையும் ஊதியத்தையும்கூட வரையறுத்துள்ளார். கல்வெட்டுக் காலத்தில் அரங்கர் கோயில் பணியில் கோவணவர், குடவர், பட்டர்கள், இறைவனின் வாளும் சொட்டை(வளைதடி)யும் எடுக்கும் தொதவத்தி தூமறையாரான உள்ளூரார், இராமானுஜனை உடையார், பாடுவார், தழையிடுவார், நீரிட்டு மாலையும் கட்டுவார், வாயில் காக்கும் ஆரியர், விளக்கும் பிடித்துப் பூத்தோப்புச் செய்யும் புண்டரிகர் எனும் பத்துக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன. இறைவன் அமைத்த நிருவாகக் குழுவில் இப்பத்துக் குழுக்களில் இருந்தும் கொத்துக்கு ஒருவராகப் பதின்மர் இடம்பெற்றனர். தேசாந்திரிகளில் சன்னியாசிகள், சகாக்கள்காராரில் (?) வேஷம் தரித்தவர் ஆகியோரில் நால்வர் இறைக்குழுவில் இணைக்கப்பட்டனர். தொண்டை, பாண்டி, சோழ, சேர மண்டலங்கள் உள்ளிட்ட பதிbனட்டு மண்டலங்களின் சார்பில் ஐவரும் சேர, சோழ, பாண்டியர், வடதிசை அரசர் சார்பாக நால்வரும் இடம்பெற்ற இக்குழுவினர் 23 பேருக்கும் 3 அடிப்படைத் தகுதிகளை அரங்கர் சுட்டியுள்ளார். 1. ஆசாரவ்ரத்தங்களில் குறையற்றவர் 2. இறைக்காரியத்துக்கு ஏற்றவர் 3. பிரபந்தப் பாசுர ஞானம் உடையவர் இத்தகுதிகள் உடையாராய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகாங்கிகளுக்கு, நாள்தோறும் பதக்கு நெல்லும் மாதந்தோறும் இரண்டு பணமும் ஊழிய ஊதியமாயிற்று. இதில் ஒரு பாதியை இறைவனுக்கு அளிக்கும் படையலிலிருந்து பெறவும் (ஒன்று பாதி நம் கலச் சோற்றிலே பெறவும்) மறு பாதியைத் தலைக்கு அரைக்கால் வேலி நிலமாக அளிக்கவும் அரங்கர் முறை செய்தார். இந்த ஏகாங்கிகளுக்குத் தலைவராக ஒரு சன்னியாசியைத் தேர்ந்தெடுக்க உத்தரவிட்ட அரங்கர் அதற்கும் சில வரையறைகளை முன் வைத்துள்ளார். 1. இறைவன் தேவி பங்கயச்செல்வியின் ஊரான வெள்ளறை, பராந்தக சதுர்வேதிமங்கலமான சாளகிராமம், பாண்டி மண்டலத்து நாலாயிரவ பிரமதேயம் ஆகிய மூன்று ஊர்களுள் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவராக அத்தலைவர் அமையலாம். அல்லது அரங்கர் சேவைக்குத் தமைத் தந்து அரங்கத்திலேயே வாழ்பவராகவும் அத்தலைவர் இருக்கலாம் 2. அபிஜன வித்யா வ்ரதங்களில் மிகுதியுடையவர். 3. அரங்கருக்கு உகந்தவர். 4. இதிகாச புரணங்களை அறிந்தவர். 5. இறைக்காரியங்களில் அறிவுடையவர். இத்தகு தகுதிகளுடன் தெரிவு செய்யப்பட்ட சன்னியாசியைத் தம் படைத்தலைவரான விஷ்வக்சேனருக்கு இணையாகக் கொண்டு சரணடையச் சொல்லும் அரங்கர், குழுவின் கடமைகளாகச் சில பொறுப்புகளை முன்வைக்கிறார். 1. நாள்தோறும் நிகழும் இறைக்காரியங்களில் பங்கேற்பு. 2. அரங்கர் இறையகங்கள், அரங்கர் உலாச் சென்று மகிழும் மண்டபங்கள் ஆகியவை சார்ந்த நிறை, குறைகளை அங்குள்ளார் வந்து தெரிவிப்பின் அவற்றைத் தக்கவாறு கேட்டு உரியன செய்தல் வேண்டும். அப்படிச் செய்யுமிடத்து அரங்கத்தை அடுத்த நாடு, நகரங்கள், கிராமங்கள், அகரங்கள் சார்ந்தவர்கள், அரங்கரை உள்ளபடி அறிந்தவர்கள், செட்டிகள், மலையாளர், இறைவியரின் அகம்படிகள், வேண்டுவார், சுரவித்துறை (கோசாலை)யில் உள்ளார் ஆகியோருடன் இணைந்து விசாரித்து அவ்வக்காலத்திற்கு ஏற்றவாறு செய்திடல் வேண்டும். 3. ஆணைகளை நிறைவேற்றுமிடத்து ஆயுதம் ஏந்திய வேளைக்காரரில் உரியாரைக் கொள்ள வேண்டும். 4. இவ்வேளைக்காரர் நிருவாகக் குழுவினர் போலவே ஊழிய ஊதியம் பெறலாம். குழு அமைத்து, தலைவர் சுட்டி, செயல்முறைகளையும் அறிவித்துள்ள அரங்கர் தாம் சொன்னவாறு அல்லாமல் செயற்பாடுகள் அமையுமானால் அப்படிச் செய்வார் தம் இறையகங்களில் நுழையாமல் தடுக்கப்படவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |