![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 104
![]() இதழ் 104 [ பிப்ரவரி 2014] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
புராண கணபதி-வாழைப்பழம்-சேனையார்
இறைவன் விமானத்தைச் சுற்றிய இறைக்கோயில் வளாகத்தில் சுற்றாலைத் திருமுன்கள் அமையத் தொடங்கிய காலத்தில் தென்மேற்கு மூலை, கணபதியான பிள்ளையாருக்கு ஒதுக்கப்பட்டது. சுற்றாலையில் மட்டுமல்லாது இறைவன் விமானத்தின் முன் அமைந்த முகமண்டபத் தென்கோட்டத்திலும் அவர் இடம் பெற்றார். தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகள் முதன்மை இறையைச் சுட்டுமாறு போல சுற்றாலைத் திருமுன்களில் குடிகொண்ட உடன்கூட்டத் தெய்வங்களைக் குறிப்பிடுவதில்லை. என்றாலும், சில முதன்மைக் கோயில்களிலேனும் இத்தெய்வங்கள் அறக்கட்டளைகள் பெற்று கல்வெட்டுகளுக்குள் அடைக்கலமாகியுள்ளன. அத்தகு வாய்ப்பு, பிற தெய்வங்களினும் கணபதிக்கே மிகுதியாகக் கிடைத்துள்ளது. குடந்தை வட்டம் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி திருக்கோயிலில் காணப்படும் இராஜகேசரிவர்மரின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (தெ. இ. க. தொ. 13: 7), இடைமருது அக்காலத்தே திரைமூர் நாட்டின் கீழ் இருந்ததைத் தெரிவிக்கிறது. காவிரியின் தென்கரைத் தலமான இடைமருதின் வளாகத்தில் இறை விமானத்தின் தெற்கே எழுந்தருளியிருந்த கணபதி ‘புராண கணபதி’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு நாளும் பத்து வாழைப்பழம் படையல் அளிக்க விரும்பினார் வடகரை மண்ணிநாட்டு அந்தண ஊரான (பிரமதேயமான) ஏமநல்லூரில் வாழ்ந்த குராலை துக்கைய கிரமவித்தன். இவர் கிழா நாட்டுக் கோனாரின் மேலாளர் (கன்மி). இடைமருதில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் சேனையார் குறிப்பிடத்தக்கவர். படைக்கு வீரர்களை வழங்கிய மறக்குழுவாக இவர்களைக் காண்கிறது கல்வெட்டுத் தொகுதி. இவர்களை வணிகக் குழுவாகவும் கருத இடமுண்டு. துக்கையன் வாழைப்பழப் படையலுக்கு எட்டு ஈழக்காசுகளை முதலாகத் தந்து, தம் அறக்கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பினை இம்மறக்குழுவிடம் ஒப்படைத்தார். பொறுப்பினை ஏற்ற சேனையார் எட்டு ஈழக்காசு வழங்கிய வட்டியில் (பொலியூட்டு) பிள்ளையாருக்கு நாளும் பத்து வாழைப்பழம் படையலிட உறுதியளித்தனர். மேலோட்டப் பார்வைக்கு எளிய கொடைக் கல்வெட்டாகக் காட்சிதரும் கிரமவித்தனின் இந்த அறக்கட்டளைக் கல்வெட்டு, மூன்று சுவையான தகவல்களை முன் வைக்கிறது. துர்க்கை என்ற பெண் தெய்வத்தின் பெயரை முற்சோழர் காலத்தில் அந்தண ஆடவர்களும் கொண்டிருந்தனர் என்பதற்கு துக்கைய கிரமவித்தனே சான்று. கல்வெட்டுகளில் அதிகம் அறியப்படாத சமூகக் குழுவான சேனையார் இங்கு அறக்கட்டளைப் பொறுப்பேற்கும் ஆளுமை நிறைந்த குழுவாக வெளிப்படுவது கருதத்தக்கது. சிறப்புப் பெயர்களுடன் சுற்றாலைத் தெய்வங்களைக் கல்வெட்டுகளில் சந்திப்பது அரிதினும் அரிது. பிள்ளையாருக்கே அந்த வாய்ப்புப் பிற தெய்வங்களினும் கூடுதலாக வாய்த்துள்ளது. இடைமருதில் புராண கணபதி என்று பெயரேற்கும் அவருக்கே வாழைப்பழப் படையல். பொதுவாக, வாழைப்பழப் படையல் பெறுபவராய்க் கல்வெட்டுகளில் கண்சிமிட்டுபவரும் பிள்ளையாரே. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பிள்ளையாரும் வாழைப்பழப் படையல் பெற்றவர்தான். எண்ணிக்கைதான் மிகுதி. முகமண்டபத் தென்கோட்டப் பிள்ளையாரைச் சுற்றிச் சூழும் உடன்கூட்டத்தில் வாழைப்பழத்துடன் காட்சிதரும் அடியவர் கண்களை நிறைப்பவர். காணவேண்டுமா? புள்ளமங்கைக்கு வாருங்கள்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |