![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 103
![]() இதழ் 103 [ ஜனவரி 2013] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அன்புள்ள வாருணி,
ஒன்றைத் தெரிந்து கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் இடையில் படிநிலைகள் பல உள்ளன. தெரியும் என்பது அறிமுக நிலை. அறிந்தேன் என்பது இடைநிலை. புரிந்து கொண்டேன் எனும்போதுதான், அந்த ஒன்று, உள்ளத்தை நெருங்கியிருப்பதாகக் கொள்ளலாம். ஆய்வின் மூன்று முக்கியமான நிலைகள் இவை. எனினும் தெரிந்துகொண்ட உடனேயே புரிந்து விட்டதாக மயங்கி ஆய்வாளர்கள் கருத்துரைக்கத் தொடங்கி விடுவதால்தான் குழப்பங்கள் நேரிடுகின்றன. தெரிவதும் அறிவதும் புரிவதும் ஒரே நாளில் நிகழ்ந்துவிட முடியாது. ஒரே இடத்திலும் அவற்றை ஒருசேரப் பெற்றுவிடமுடியாது. ஒன்றை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், அதை அறிந்து கொள்ள அந்த ஒன்று மட்டுமே போதுமானதாகாது. பிறிதொன்றோ, பலவோ, தனித்தோ, ஒருங்கிணைந்தோதான் தெரிந்துகொண்ட விஷயத்தை அறிந்துணர உதவமுடியும். எனக்குத் ‘தெரிதல்’ நிகழ்ந்த போதே, ‘அறிதலும்’ அமைந்ததாகக் கருதியே தொடக்கக் காலக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். இப்போது அவற்றைப் படிக்கும்போதுதான், தெரிதலே முற்றாத நிலையில் அவற்றை எழுதியுள்ளமை தெரிகிறது. பார்ப்பதை, உணர்வதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற தவிப்பு என்னை எழுதத் தூண்டியது. பார்த்தவை தொடர்பாக நான் படித்தவற்றில் தெரிந்த பிழைகள் என்னை வருத்தியதும் என் தொடர்ந்த எழுத்துரைகளுக்குக் காரணமாயின. எனக்கென மாணவர்கள் வரும் வரை நான் தெரியும் நிலையிலேயே இருந்தேன். அவர்களுடைய கேள்விகள், ஐயங்கள், குழப்பங்கள் இவையே என்னை ‘அறிதல்’ எனும் அடுத்த நிலைக்கு நகர்த்தின. அதற்குள் நான் நிறைய பார்த்திருந்ததும், படித்திருந்ததும் நகர்வுக்கு மிக உதவின. எது கேட்டாலும் எப்போது கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் தெரிந்தவற்றை மட்டுமே அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். தெரியாதவற்றைத் தேடிச்செல்லத் தூண்டியவர்கள் அவர்களே. அவர்களை அறியாமலேயே செய்த அந்த உதவிதான் என் அறிதலைப் பக்குவப்பட வைத்தது. வாழ்க்கை அநுபவங்கள், பல பக்கமும் சிதறிய என் ஆர்வத்தை நிலைப்படுத்தி ஒருங்கிணைத்தன. அறிந்தவை துணைநிற்க மீண்டும் கோயில்களுக்குள் நுழைந்தேன். என் பயணம் புரிதலைத் தேடித் தொடங்கியது. ஏறத்தாழ இருபதாண்டுகள் கனிந்தன. என் மாணவர்களுடனான அந்தப் பயணம் மறக்க முடியாதது. கட்டடங்களாக நான் பார்த்த கோயில்கள் உறவுகளாக மாறத் தொடங்கியபோதுதான் ‘புரிதல்’ எது என்பதே என்னுள் விளக்கமானது. புரிதல்தான் தெளிவான பார்வை தருகிறது என்பதையும் உணர்ந்தேன். எல்லைகளைத் தள்ளிப் போடும்போதுதான் கோடுகளைப் பற்றிய புரிதல் கிடைக்கிறது. கோடுகளை உற்று நோக்கும்போதுதான் அதை உருவாக்கிய உள்ளங்களை அறியமுடிகிறது. சிந்தனை ஒன்றாக இருந்தாலும் சார்ந்திருக்கும் நிலம் குறித்தே அதன் செழுமையும் வளமையும் உருவாக்கமும் நிகழ்கின்றன. ![]() சியாம் ரீப் ஆடவல்லான் சென்ற மாதம் நான் மேற்கொண்ட கம்போடியப் பயணம் தமிழர் கலையின் பன்முக ஆற்றலை உய்த்துணர உதவியது. காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் சுற்றுச் சிற்பங்கள், கல்வெட்டுகளின் எதிரொலிப்பை சியாம்ரீப்பின் [Syam Reap] பல கோயில்களில் பார்க்கமுடிந்தது. தமிழ்க்கலை ஆய்வாளர்கள் பார்க்கவேண்டிய இடம் சியாம்ரீப். முன் பின்னாகவோ, மேல்நோக்கியோ வளர்ந்துள்ள அவ்வூர்க் கோயில்கள் கலை திகழ் வளாகங்களாகக் காட்சி தருகின்றன. தமிழ் மண்ணின் சிந்தனைகளை உள்வாங்கியே அவற்றுள் பல உருவாகியிருப்பதைப் பார்த்த மாத்திரத்தில் உணர முடிந்தாலும் காட்சிப்படுத்தலில் கெமர் நீரோட்டம் கலந்திருப்பதை நன்கறியலாம். ![]() ஒரு முக முழவு இசைப்பவர் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை காட்டும் மேடை நிகழ்வுகளை ‘பேயோன்’ [Bayon] கோயில் சுவர்ச் சிற்பத்தொடரில் அரசவைக் காட்சியாகக் காண நேர்ந்தபோது ‘வேத்தியல்’ விளங்கியது. சில அமைப்புகள் எந்த மண்ணிலும் வேர் பிடிக்கின்றன. கம்போடியா அநுபவங்களைத் தனியாக எழுத வேண்டுமென நினைத்திருக்கிறேன். காலம் ஒத்துழைக்க வேண்டும். காரைக்கால் அம்மை துணை நிற்க வேண்டும். ![]() காரைக்கால் அம்மையார் ஆம் வாருணி, அம்மையைக் கம்போடியா, நம்மைப் போலவே ஆடும் அண்ணலின் திருவடியருகில் காட்சிப்படுத்தியுள்ளது. அன்புடன், இரா. கலைக்கோவன்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |