![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 99
![]() இதழ் 99 [ செப்டம்பர் 2013 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் சிறப்பான தலமாய் விளங்கும் திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றியும் அருகாமையிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. திருக்கழுக்குன்றத்திலிருந்து அமிஞ்சிகரை என்ற ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 15 கிமீ. தொலைவில் வீராபுரம் என்ற ஊர் அமைந்துள்ளது. பசுமையான வயல்கள், தென்னை மரங்கள் சூழ்ந்த அழகிய கிராம ம். இவ்வூரில் பிள்ளையார் கோயில், கிராம தேவதைக் கோயில், சோலைவாழி அம்மன் கோயில், சிவன் கோயில் எனப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சிவன் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
![]() கருவறை லிங்கம் சிவன் கோயில் மிகப் பழமையானதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் ஆகும். பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் இது. சோழமன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதையும் கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது. இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவனை கூச்சிசுவரர் என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் இக்கோயிலின் இறைவனை கல்வெட்டுக்களில் உஞ்சீசுவரத்து ஆழ்வார் என்று குறிக்கப்படுவதைக் காணலாம். இறையருளை வாரி வழங்கும் இறைவன் என்பது பொருளாகும். இக்கோயிலில் 1932-33 ஆண்டுகளில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு அறிக்கயின்படி முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் இக்கோயில் சிறப்பாகப் போற்றப்பட்டதை அறியமுடிகிறது. இராஜராஜனின் அணுக்க பீமர் என்ற படைப்பிரிவின் தளபதியான விடங்கன் என்பவர் இக்கோயிலில் இறைவனுக்கு உச்சிக்காலத்தில் அமுது படைக்க நிலம் தானமாக அளித்துள்ளார். இவ்வூர் முன்பு நெடுங்குன்றம் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டதை அறியமுடிகிறது. மேலும் கோயிலின் முன்மண்டபத் தூண்களை இளங்கண்ணகன் என்பவரும் தளிப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநீலகண்டன் என்பவரும் செய்தளித்த தை அறியமுடிகிறது. மேலும் புலியூர் என்னும் ஊரின் தலைவனான தேவன் வயிரமேகன் என்பவர் இக்கோயிலில் விளக்கெரிக்க நிலம் தானமாக அளித்துள்ளதையும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது. ![]() சோமாஸ்கந்தர் இக்கோயில் பல்லவர் காலக் கோயில் என்பதைக் கண்டோம். ஏனெனில் இக்கோயிலின் கருவறையில் லிங்க வடிவத்திற்குப் பின்புறம் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இருந்து வழிபாடு செய்துள்ளனர். சோமாஸ்கந்தரை விடங்கர் எனவும் அழைப்பதுண்டு. சிம்மாசனத்தில் சிவனும் உமையும் அமர்ந்திருக்க தேவியின் மடியில் குகன் (முருகன்) சிறு குழந்தையாக அமர்ந்திருக்கும் அற்புத கோலத்தை இங்கு காணலாம். சிவபெருமானின் காலடியில் பூத கணங்களும் அறியாமையின் வடிவான முயலகனும் காணப்படுகின்றனர். சிவபெருமானின் பின்புறத்தில் பிரம்மாவும் திருமாலும் நின்ற திருக்கோலத்தில் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். மணற்கல்லால் செய்யப்பட்ட அழகிய சிற்ப வடிவம் இது. பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் கோயில்கள் போன்ற பெரும்பாலான திருக்கோயில்களில் கருவறையில் லிங்க வடிவத்திற்குப் பின்னால் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இக்கோயிலிலும் அதுபோன்றே விடங்கரான சோமாஸ்கந்தர் வடிவினை கருவறைச் சுவற்றில் வைத்து திருப்பணி செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. ![]() ஜேஷ்டா தேவி கோயிலின் எதிரில் உள்ள திருக்குளம் கல்யாணி குளம் எனப்படுகிறது. இதனைத் தூர் எடுத்து தூய்மை செய்யலாம். குளக்கரையில் ஜேஷ்டாதேவியின் சிற்பம் வழிபடப்படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் வழிபாட்டுச் சிறப்பு மிக்கதுமான வீராபுரம் கோயிலில் வருகிற புரட்டாசி 21, 22, 23 (அக்டோபர் 7,8,9) தேதிகளில் குடமுழுக்கு செய்ய உத்தேசித்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்மன் சன்னிதியும் புதிதாய் அமைக்கப்படவுள்ளது. அழகே உருவான விடங்கராய் சோமாஸ்கந்த வடிவில் அமர்ந்து அருள்புரியும் உஞ்சீசுவர ரைக் கண்டு போற்றி வழிபடுவோம்!this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |