![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 157
![]() இதழ் 157 [ ஆகஸ்ட் 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
உங்களுக்கு ஆதித்தன் சூரியனைத் தெரியுமா? சோழப் பேரரசர் முதல் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். பொய்கைநாட்டின் கிழவர் என்றும் தென்னவன் மூவேந்தவேளான் என்றும் அவரைக் கல்வெட்டுகள் கொண்டாடுகின்றன. இராஜராஜரின் நம்பிக்கைக்குரிய பெருமகனாகவே அவர் இருந்திருக்கவேண்டும். இல்லையென்றால், தஞ்சாவூரில் தாம் உவந்து எடுப்பித்த திருக்கற்றளியான ராஜராஜீசுவரத்திற்கு அவரை ஸ்ரீகாரியமாக ராஜராஜர் பொறுப்பமர்த்தியிருக்க முடியாது. இந்தக் கிழவர் தம் அரசரின் திருக்கோயிலைப் பலவகைகளில் பெருமைப்படுத்தினார். அவற்றுள், தலையாயதாக அவர் அக்கோயிலில் எழுந்தருளுவித்த இரண்டு செப்பு வடிவங்களைக் குறிக்கலாம். ஆதித்தன் சூரியனால் செய்தளிக்கப்பெற்ற பெரிய பெருமாள், அவரது நம்பிராட்டியார் (தேவியார்) ஒலோகமாதேவியார் எனும் இந்த இரண்டு வடிவங்களும் கோயில் முழத்தால் அளக்கப்பெற்றன. பெரிய பெருமாள் என்ற பெயரில் வழங்கப்பெற்ற முதல் ராஜராஜரின் திருவுருவம் ஒரு முழம் நான்கரை விரல் உயரம் கொண்டிருந்தது. கனமாகச் செய்யப்பட்டு இரண்டு கைகள் பெற்றிருந்த அவ்வடிவம், ஐந்து விரல் இரண்டு தோரை உயரத் தாமரைமீது நிறுத்தப்பெற்றிருந்தது. இத்தாமரை ஐந்து விரல் ஆறு தோரை உயரம் கொண்ட பதினொரு விரல் பக்கமுடைய சதுரத்தளத்தில் அமைந்திருந்தது. இராஜராஜரின் பட்டத்தரசியான ஒலோகமாதேவியாரின் திருவுருவம் அரசருடையதைப் போலவே இருகைகளுடன் கனமான வடிவமாக இருபத்திரண்டு விரல் இரண்டு தோரை உயரமுடையதாக, ஐந்துவிரல் உயரத் தாமரையில் நிற்குமாறு செய்தளிக்கப்பெற்றது. தாமரையின் தளம் ஐந்து விரல் இரண்டு தோரை உயரத்தில் ஒன்பது விரல் பக்கமுடைய சதுரமாக இருந்தது. அக்காலத்தே செம்பில் உருவாக்கப்பட்ட இறைத்திருமேனிகளும் மனிதவடிவங்களும் பொள்ளல், கனம் என இரு வகையினவாய் அமைந்தன. பொள்ளல் திருமேனிகள் உள்ளீடு இல்லாமல் உருவக்கூடுகளாக கனமின்றி அமைய, கனமானவை என்றழைக்கப்பட்ட திருமேனிகள் உள்ளும் புறமுமாய் முழுமையுடன் விளங்கின. ஆதித்தன் சூரியன் செய்தளித்த பெரிய பெருமாளும் அவர் நம்பிராட்டியாரும் உள்ளும் புறமும் நிறைந்து விளங்கியமையால்தான் ‘கனமான’ என்ற சொல்லாட்சி கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. இத்திருமேனிகளை அளக்கப் பயன்படுத்திய கோயில் முழம் 24 விரல் அளவு கொண்டதெனவும் அதைத் தஞ்சை முழமென அழைப்பார்கள் என்றும் கணபதி சிற்பி தம் சிற்பச் செந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இதையே, ‘விரலால் இருபத்து நான்கு விரல் கொண்டது முழமாக இதில் பாதி பன்னிரு விரல் கொண்டது ஒரு சாண்’ என்று தமிழ்ப்பொழில் குறிப்பதாகத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி குறிக்கிறது. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் 1991இல் ராஜராஜீசுவரம் ராஜராஜன் திருவாயிலின் தென்மேற்குப் பகுதியில் 73 செ. மீ. நீள அளவுகோல் ஒன்றைக் கண்டறிந்தனர். இது கோயில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திய தச்சமுழமா அல்லது திருமேனிகளை அளக்கப் பயன்பட்ட கோயில் முழமா என்பதை அறியக்கூடவில்லை. குளநெல், மூங்கிலரிசி, மலைநெல் ஆகியவற்றைக் குறிக்கும் தோரை என்ற சொல்லை நீட்டலளவை என்று தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியும் நான்கு விரல்களுக்கு இடையிலுள்ள அளவு என்று தமிழ் அகராதி ஒன்றும் குறிப்பிடுகின்றன. கணபதி சிற்பியின் சிற்பச் செந்நூல் எட்டு நெல் அகலம் கொண்டது ஒரு விரல் என்கிறதே தவிர, தோரை பற்றிய குறிப்புகள் அவர் நூலில் இல்லை. தம் பேரரசரான ராஜராஜரையும் அவரது பட்டத்தரசியான தந்திசக்திவிடங்கி என்ற இயற்பெயருடைய ஒலோகமாதேவியாரையும் செப்புருவங்களாக்கிக் கோயிலுக்களித்த ஆதித்தன் சூரியன், அவ்விருவருக்கும் அணிவிக்கப் பொன்னால் செய்த திருக்கைக்காறை (கைவளை) ஈரிணையும் திருக்குதம்பை (காதணி) ஈரிணையும் வழங்கினார். இவ்வணிகலன்களின் பொன் அளவு ராஜராஜீசுவரத்தின் ஆடவல்லான் எனும் பெயரிலமைந்த எடைக்கல்லால் நிறுக்கப்பெற்றுக் கணக்கேட்டிலும் கல்வெட்டிலும் இத்தனைக் கழஞ்சு, மா, மஞ்சாடி, குன்றி எனத் தெளிவுறப் பொறிக்கப்பட்டது. திருவுருவங்கள், அணிகலன்களோடு நின்றுவிடாது, தாம் வழங்கிய பெரிய பெருமாளுக்குத் தேவாரத் தேவராக ஐந்து விரல் இரண்டு தோரை உயரமுடைய சந்திரசேகரர் திருமேனியை, நான்கு கைகள் உடையவராய்ப் பித்தளையில் கனமாகச் செய்து, அதை ஒன்றரை விரல் உயரமுடைய தாமரையில் இருத்திய ஆதித்தன் சூரியன், ஒரு விரல் உயரமும் இரண்டு விரல் நான்கு தோரை அளவில் சதுரமாயும் அமைந்த பித்தளைத் தளத்தில் அத்தாமரையை அமைத்துக் கோயிலுக்கு வழங்கினார். தேவாரத் தேவருக்குச் செம்பால் கனமாகத் திருவாசி ஒன்றும் 21 விரல் சுற்றில் அவரால் செய்தளிக்கப்பட்டது. தேவாரம் என்ற கல்வெட்டுச் சொல், இறைத்திருமேனியையும் குறிக்கும் என்றாலும், இங்குத் தனி வழிபாட்டையே குறித்து நின்றது. கல்வெட்டு, ‘பெரிய பெருமாளுக்கு தேவாரத் தேவராக எழுந்தருளுவித்த தேவர் சந்திரசேகரர்’ எனத் தெளிவுபடுத்துவதால், மன்னரின் தனி வழிபாட்டுக்குரிய சந்திரசேகரர் திருமேனி எனக் கொள்வதே பொருந்தும். தமிழ்நாட்டை ஆண்ட பேரரசர்களுள், வாழ்ந்த காலத்திலேயே தம் செப்புருவம் தாம் எடுப்பித்த திருக்கோயிலில், தம் அலுவலர் ஒருவரால் இறைவழிபாடு செய்யும் நிலையில் எழுந்தருளுவிக்கப் பெற்ற பெருமை சோழவேந்தர் முதல் ராஜராஜருக்கே உரியதாகிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |