www.varalaaru.com
A portal for
South Indian History
 
72 இதழ்கள்...
1004 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
இதழ் - 51
தலையங்கம்
வரலாறு கொடுக்கும் பாடங்கள்
சுடச்சுட
காவற்காட்டு இழுவை!

தொட்டான்! பட்டான்!
கதைநேரம்
சேரர் கோட்டை (சரித்திரத் தொடர்)

சேரர் கோட்டையில் இதுவரை....
கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 23
கலையும் ஆய்வும்
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
பயணப் பட்டோம்
VIRTUAL TOUR ON KUNDRANDARKOIL - PART - III
இதரவை
அவர் - ஐந்தாம் பாகம்

கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
இலக்கியச்சுவை
மான்விழியே!! அள்ளும் அழகே!!

சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!


சில ஆண்டுகளாகவே கோடையின் கடுமை மிகுதியாக இருக்கிறது. காற்றில் நச்சுப் புகை கலப்பதுவே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அகநானூறு (1) இந்தக் கோடைக் கடுமை பன்ணெடுங் காலமாகவே உள்ளது என்கிறது.


அகம் - 1.

தலைவி கூற்று

பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

திணை : பாலை
ஆசிரியர் : மாமூலனார்

வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?


'தீயைப் போல வெப்பம் மிக்க கதிவரன் நிலம் பிளக்குமாறு காய்கிறான்! மரங்கள் நீர்த்தன்மை இழந்து சுருங்கிவிட்டன. பாறைகளில் அனல் வீச்சு. சுனைகள் வற்றிக் காய்ந்துள்ளன. நீரற்றுப் போனதால் ஆங்காங்கே விளைந்திருந்த கதிர் நெல்கூடப் பொரிந்து கொட்டிப்போயிற்று. நெருப்பாய்ச் சுடும் இந்தக் கோடையில் பாலை வழியில் பயணமா என்று தவிர்த்தனர் மக்கள். வசதியானவர்களும் வாய்ப்பானவர்களும் வராமையால் வழிப்பறிக்கும் ஆறலைக் கள்வரும் வறுமையில் வாடினர். அந்தக் கடுமையான கோடையில் பாலை வழியில் ஆங்காங்கே இருந்த முருங்கை மரங்கள் காய்க்க வாய்ப்பின்றிப் பூக்களைச் சிந்தி வருந்தின. சிந்திய அந்த வெள்ளிய பூக்கள் கோடைக்காற்றில் அங்குமிங்குமாய்ச் சிதறிக் கிடந்த காட்சி கரை மோதி உடைந்த அலையை ஒத்திருந்தது.

இத்தகு கொடிய பாலை வழியைக் கடந்து பொதினி சென்றிருக்கிறார் என் காதலர். பொதினி நெடுவேள் ஆவியின் ஊர். வண்டுகள் விடாது மொய்க்குமாறு பூத்த நறும் பூக்களால் செய்யப்பட்ட கண்ணிகளைத் தலையிலும் வீரக்கழல்களைக் கால்களிலும் அணிந்து அச்சம் தரும் குதிரைகளின் மீது ஏறிச் சண்டையிட வரும் மழவர்ப் படையை ஓடஓட விரட்டிய ஆவி போர்களில் வெற்றி பெறுவதில் முருகனை ஒத்தவன். அவன் மலையிலுள்ள யானைகளோ சிங்கங்களையே ஓடஓட விரட்டுபவை. அத்தகு வீரம் செறிந்த மண்ணுக்குப் பொருளீட்டுவதற்காகச் சென்றுள்ள என் அன்பர் என்னை முதன்முதலாகக் கண்டபோதும், நாங்கள் உளமிணைந்து கலந்தபோதும் வாழ்க்கை மன்றலாய்க் கனிந்த போதும், 'கண்ணே, சாணைக்கல் செய்பவன் அரக்குடன் சேர்த்துச் செய்த கல்லைப் போல நமக்குள் பிரிவென்பதே இல்லை,' என்று சொன்னதைத்தான் அவரைப் பிரிந்து துன்புறும் இந்த நொடியில் நினைக்கவேண்டியுள்ளது. சொற்கள்தான் எத்தனை பொய்யானவை.'

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter